இந்தியாவில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் முக்கியமான ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ஒன்று சியோமி. சொல்லப்போனால் கடந்த சில காலாண்டுகளாக இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் சியோமி தான் முதலிடம், சியோமி தற்போது விவோ, ஒப்போ, ஓன்பிளஸ் ஆகிய நிறுவனங்களைத் தாண்டி சாம்சங் நிறுவனத்துடன் பெரிய அளவிலான போட்டிப் போட்டு வருகிறது.
இந்நிலையில் சியோமி இந்தியா தனது போக்கோ போன் பிராண்ட்-ஐ சியோமியில் இருந்து விலக்கித் தனிப்பட்ட பிராண்டாக அறிவித்துள்ளது புதிய வர்த்தகப் பிரிவை (போட்டி) உருவாக்கியுள்ளது.
போக்கோ
சியோமி 2018ஆம் ஆண்டுப் போக்கோ என்கிற பிராண்ட் பெயரில் அதிவேக ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்தப் பிராண்ட்-இல் இதுவரை ஒரு போன் மட்டுமே வெளியாகியுள்ள நிலையிலும் மக்கள் மத்தியில் பெரிய அளவிலான வரவேற்பைப் பெற்றுள்ளது.
இப்படியிருக்கும் சூழ்நிலையில் போக்கோ F2 போனை அறிமுகம் செய்யத் திட்டமிட்டு வருகிறது எனச் செய்திகள் சில வாரங்களுக்கு முன் வந்த நிலையில் தற்போது சியோமி இதைத் தனிப் பாரண்டாக அறிவித்துள்ளது.
முக்கிய ஊழியர்கள் வெளியேற்றம்
சில மாதங்களுக்கு முன் போக்கோ பிராண்ட்-ஐ உருவாக்கிய குழுவின் உயர் அதிகாரி ஜெய் மணி முன்னாள் கூகிள் நிறுவன ஊழியர் மற்றும் பல உயர்மட்ட அதிகாரிகள் வெளியேறினர். இது சியோமி நிறுவனத்தைப் பெரிய அளவில் பாதிக்கும் எனப் பேசப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. உயர்மட்ட ஊழியர்களின் வெளியேற்றத்திற்குப் பின்பு தான் சியோமி போக்கோ பிராண்ட்-ஐ தனிப் பிராண்டாக அறிவித்துள்ளது.
மனு குமார் ஜெயின்
சியோமி நிறுவனத்தின் தலைவர் மனு குமார் ஜெயின் கூறுகையில் போக்கோ பிராண்ட்-இல் இதுவரை போக்கோ F1 போன் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் 50 நாடுகளில் வர்த்தகம் செய்யப்பட்டுத் தனக்கென ஒரு அடையாளத்தைப் பெற்றுள்ளது. 2018இல் அறிமுகம் செய்யப்பட்ட இந்தப் போன் 2020 சந்தை விற்பனையிலும் முக்கிய வர்த்தகப் பொருளாகச் சியோமி நிறுவனத்திற்கு விளங்குகிறது எனத் தெரிவித்தார்.
இப்படியிருக்கும் சூழ்நிலையில் போக்கோ பிராண்ட் சியோமி தாக்கம் இல்லாமல் தனிப்பட்ட முறையில் இயங்கும் திறன் உள்ளதாகத் தான் நம்புவதாக மனு குமார் ஜெயின் கூறினார்.
ப்ரீமியம் போன்கள்
சியோமி இதுவரையில் குறைந்த விலை போன்களை மட்டுமே விற்பனை செய்த நிலையில் இந்தப் பிராண்ட்-ன் கீழ் அதிக விலை மதிப்பில் வெளியிடப்பட போன்களில் ப்ரீமியம் போன் என்றால் அது போக்கோ போன் தான். சியோமி பிராண்ட்-இன் கீழ் கே20, கே20 ப்ரோ ஆகிய போன்களை அறிமுகம் செய்தாலும் அது பெரிய அளவிலான வெற்றி அடையவில்லை.
போட்டி
இந்நிலையில் ஓன்பிளஸ், சாம்சங், ஆகிய நிறுவனங்களுடன் போட்டிப் போடும் விதமாக ப்ரீமியம் பிளாக்ஷிப் போன்களை அறிமுகம் செய்யச் சியோமி தற்போது திட்டமிட்டு இருக்கும் நிலையில் போக்கோ பிராண்ட்-இன் கீழ் இதைச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.