டெக் பங்குகள் அதிகளவிலான சரிவை எதிர்கொண்டு வரும் நிலையில் இதுதான் அடுத்த டாட் காம் பபுள்-ஆ என்ற கேள்வி அனைவருக்கும் வரும் நிலையில் டெக் ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் அதிகளவில் முதலீடு செய்த முன்னணி நிறுவனம் ஒன்று தனது போர்ட்போலியோவில் இருக்கும் நிறுவனங்களின் தலைவர்களுக்கு முக்கியமான எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் ஒட்டுமொத்த ஸ்டார்ட்அப் சந்தையும் தற்போது ஆடிப்போய் உள்ளது.
பணிநீக்கம்
2022ல் கார்ஸ்24 நிறுவனம் 600 ஊழியர்களையும், Edtech ஸ்டார்ட்அப் நிறுவனமான வேதாந்து 424 ஊழியர்களையும், Unacademy குரூப் 1000 ஊழியர்களையும், ட்ரெல் 300 ஊழியர்களையும், லிடோ 200 ஊழியர்களையும், furlenco 180 ஊழியர்களையும், மீஷோ 150 ஊழியர்களையும், ஓகேகிரெடிட் 35 ஊழியர்களையும் பணிநீக்கம் செய்துள்ளது. இவை அனைத்தும் முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒய் காம்பினேட்டர்
இந்த நிலையில் சிலிக்கான் வேலி முதல் இந்தியா வரையில் புகழ்பெற்ற ஸ்டார்ட்அப் முதலீட்டு நிறுவனமான ஒய் காம்பினேட்டர், அதன் போர்ட்ஃபோலியோ நிறுவனங்களின் நிறுவனர்களிடம் நிதியுதவியை நாடுவோர் மிகவும் மோசமான நிலையில் எதிர்கொள்ளத் தயாராகுங்கள், புதிய முதலீடுகளின் அளவு அதிகளவில் சந்தையில் குறைந்துள்ளது என எச்சரித்துள்ளது.
முதலீட்டு சந்தை
வட்டி விகித உயர்வு, வர்த்தகச் சரிவு, பணவீக்கம், டெக் பங்குகளின் உலகளாவிய வீழ்ச்சி ஆகியவை தனியார் பங்கு முதலீட்டு மற்றும் வென்சர்ஸ் கேப்பிடல் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழ்நிலையில் முதலீட்டுச் சந்தையில் இருந்து புதிய முதலீடுகளைப் பெறுவது மிகவும் கடினமாக இருக்கும் என ஒய் காம்பினேட்டர் தெரிவித்துள்ளது.
ஸ்டார்ட்அப் துறை
இந்திய ஸ்டார்ட்அப் துறையில் 2022 துவக்கம் முதலே பிக்-டிக்கெட் முதலீடுகள், அதாவது பெரும் தொகை கொண்ட முதலீடுகள் அதிகளவில் குறைந்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் அனைத்து முன்னணி யூனிகார்ன் மற்றும் முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் அதன் முதலீட்டாளர்களைப் பணத்தைப் பார்த்துச் செலவு செய்து சேமிக்க அறிவுறுத்தியுள்ளது.
அடுத்த 30 நாள்
ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தற்போதைய சூழ்நிலையில் மோசமான நிலைக்குத் திட்டமிடுவது பாதுகாப்பானதாக இருக்கும். கடந்த இரண்டு பொருளாதாரச் சரிவுகளைப் போலவே தற்போதைய நிலைமை மோசமாக இருந்தால், செலவுகளைக் குறைத்து, அடுத்த 30 நாட்களுக்குள் வர்த்தகத்தைக் குறையாமல் பார்த்துக்கொள்ளவதே சிறந்த வழியாகும். இதன் மூலம் நிறுவனம் திவால் ஆகாமல் தப்பித்துத் தொடர்ந்து இயங்குவது முக்கியமானதாக உள்ளது என ஒய் காம்பினேட்டர் தனது போர்ட்போலியோ தலைவர்களுக்குத் தெரிவித்துள்ளது.
ஒய் காம்பினேட்டர் முதலீடுகள்
ஒய் காம்பினேட்டர் நிறுவனம் மட்டும் சுமார் 190 நிறுவனத்தில் முதலீடு செய்து உள்ளது, இதில் இந்தியாவில் முக்கியமாக groww, ரேசர்பே, Zepto ஆகியவை அடங்கும், சர்வதேச அளவில் ஸ்ட்ரைப், ஏர்பிஎன்பி ஆகியவை இப்பட்டியலில் உள்ளது.
ஸ்டார்ட்அப் ஊழியர்கள்
இந்த இக்கட்டான சூழ்நிலையில் புதிய முதலீடுகளை நம்பி இருக்கும் நிறுவனத்தில் அதிகளவிலான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படலாம். இதனால் பலர் இந்தியா முழுவதும் வேலைவாய்ப்புகளை இழக்கும் சூழ்நிலை உருவாகும். எனவே ஸ்டார்ட்அப் நிறுவன ஊழியர்கள் மிகவும் உஷாராக இருக்க வேண்டிய நிலை உள்ளது.


Click it and Unblock the Notifications