உண்மையில் நடப்பு ஆண்டு என்பது பலருக்கும் மறக்க முடியாத ஒரு வருடமாகத் தான் இருக்கும். ஏனெனில் பலரின் வாழ்க்கையையே தலைகீழாக புரட்டி போட்டுவிட்டது.
குறிப்பாக பொருளாதார ரீதியாக மக்கள் தங்களது செயல்பாடுகளை மாற்றியுள்ளனர். லட்சக்கணக்கில் செலவு செய்தவர்கள், இன்று நூற்றுக் கணக்கில் செலவு செய்யவே யோசிக்கின்றனர். சேமிப்பினை பற்றி யோசிக்காதவர்கள் இன்று தேடி தேடி சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொண்டு சேமிக்க தொடங்கியுள்ளனர்.
எல்லாவற்றுக்கும் மேலாக கொரோனா என்னும் கண்ணுக்கு தெரியாத நுண்கிருமி, பொருளாதாரத்தினை 40 வருடத்தில் இல்லாத அளவு சரிவினைக் காண வைத்து விட்டது.
பலத்த அடி வாங்கிய இந்தியா
இந்தியாவின் ஜிடிபி விகிதம் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 40 வருடங்களில் இல்லாத அளவு சரிவினைக் கண்டது. இப்படி ஒரு மோசமான நிலையை எட்ட முக்கிய காரணம் இந்த கொரோனா. ஏற்கனவே கடந்த ஆண்டு மோசமான பொருளாதார மந்த நிலையை எதிர்கொண்டு வந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக, முதல் காலாண்டிலேயே இந்தியா பலத்த அடி வாங்கியது.
விவசாயம் மட்டுமே வளர்ச்சி
இந்த காலகட்டத்தில் விவசாயத்துறை நீங்கலாக அனைத்து துறைகளும் பெரும் சரிவினையே கண்டன. உண்மையில் இது விவசாயத்துறைக்கு பெரும் நம்பிக்கை தரும் விதமாக இருந்தது. ஆனால் அந்த காலகட்டத்தில் வணிகம், ஹோட்டல், போக்குவரத்து, தொலைத் தொடர்பு துறைகள் -47% வீழ்ச்சி கண்டன.
மோசமான சரிவு
குறிப்பாக தொழிற்துறை வளர்ச்சி - 38.1% வீழ்ச்சியிலும், உற்பத்தி துறையானது -39.3% ஆகவும், கட்டுமானத் துறை - 50.3% ஆகவும், நிலக்கரித்துறை -23.3%, எரிசக்தி துறை -7%மும் வீழ்ச்சி கண்டன. ஆக இப்படி ஒவ்வொரு துறையும் வீழ்ச்சியினை மட்டுமே கண்டன. இந்தியாவின் மோசமாக சரிவுக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.
ஜி20 நாடுகளில் மோசமான பாதிப்பு
இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் உலகளவில் மிகப்பெரிய பொருளாதாரங்களை கொண்ட நாடுகளில், கொரோனா வைரஸ் தொற்று நோயினால் பரவலைக் கட்டுபடுத்துவதற்காக அமல்படுத்தப்பட்ட லாக்டவுனினால், பொருளாதார ரீதியாக மிகவும் மோசமான பாதிப்புக்கு உள்ளான நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. அதிலும் ஜி20 நாடுகளிலும் இந்தியா மோசமான பின்னடைவை சந்தித்துள்ளது. இதற்கு முன்பு ஜி20 நாடுகளில் பிரிட்டன் தான் 21.7% சரிவை கண்டிருந்தது. ஆனால், பிரிட்டனைக் காட்டிலும் இந்தியாவின் ஜிடிபி -23.9% சரிந்தது. ஆக ஜி20 நாடுகளில் இந்தியா தான் மோசமான பொருளாதார நிலையில் உள்ளது.
மறக்க முடியாத 2020
இப்படி கண்ணுக்கு தெரியாத ஒரு நுண்கிருமி உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டு வரும் நிலையில், நிச்சயம் இந்த 2020 என்பது ஒரு மறக்கமுடியாத ஆண்டாகத் தான் அனைவருக்கும் இருக்கும். அதிலும் லாக்டவுனினால் பல மாதங்கள் வீட்டில் முடங்கிக் கிடந்ததும், பலர் தங்களது வேலையினை இழந்ததும், பலர் தங்களது வாழ்வாதாரத்தினை இழந்ததும் மறக்கமுடியாத சம்பவமாகத் தான் இருக்கும்.