மூன்லைட்டிங் என்ற ஒரு சொல் ஐடி துறையில் சமீபத்திய காலமாக ஒரு பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இது ஐடி நிறுவனங்களுக்கும், ஐடி ஊழியர்களுக்கும் இடையில் ஒரு இடைவெளியை உருவாக்கியுள்ளது எனலாம்.
ஐடி நிறுவனங்கள் பலவும் ஒவ்வொரு விதமாக கருத்துகளை இது குறித்து கூறி வருகின்றன. சில நிறுவனங்கள் மூன் லைட்டிங்கிற்கு ஆதரவு தெரிவித்தாலும், பலரும் தங்களது எதிர்ப்பினையே காட்டி வருகின்றனர்.
வெளிப்படைத் தன்மையுடன் இருங்கள்
இப்படி ஒரு பரபரப்பான சூழலுக்கு மத்தியில் ஜெரோதா நிறுவனத்தின் இணை நிறுவனர் நிகில் காமத், ஊழியர்கள் தாங்கள் செய்யும் பல்வேறு பணிகள் மற்றும் வேலைகள் குறித்து வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும் என கூறியுள்ளார். மூன்லைட்டிங்-கிற்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ள நிகில் காமத், இது தவறில்லை. ஆனால் ஊழியர்கள் இது குறித்து வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
வெளிப்படைத் தன்மை
இது குறித்து நிறுவனத்திற்கும் ஊழியர்களுக்கும் ஒரு வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும். நாம் கிக் எக்கானமிக்கு மாறிக் கொண்டுள்ளோம். எதிர்காலத்தில் ஒரே நேரத்தில் பல வேலைகள் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கலாம். இது அவசியமான ஒன்றாகவும் இருக்கலாம். ஒருவர் ஒரே நேரத்தில் என்ன செய்கிறார் என்பதில் சிக்கல் இருக்கலாம். ஆக இது குறித்து ஊழியருக்கும், நிறுவனத்திற்கும் சுமுக முடிவு ஏற்பட வேண்டும். அப்படி ஏற்படாவிடில் அது பெரியளவில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
தவறு ஏதும் இல்லை
ஒரே நேரத்தில் இரண்டு வேலை என்பது தவறாக நான் நினைக்கவில்லை. எனினும் நீங்கள் முதலாளிக்கு அல்லது நிறுவனத்திற்கு எதிராக செயல்பட்டால் அது பிரச்சனை தான். ஆக நமக்கு அந்த இடத்தில் தேவைப்படுவது வெளிப்படைத் தன்மை தான். ஆக அது சரியாக இருந்து விட்டாலே பெரும்பாலான பிரச்சனைகள் களையப்பட்டு விடும்.
மத்திய அரசின் நிலைப்பாடு
இந்த மாத தொடக்கத்தில் மூன்லைட்டிங் குறித்து, ஊழியர்கள் நிறுவனத்தின் நலனுக்கு எதிராக வேலை செய்ய முடியாது. நிறுவனத்தினை பாதிக்கும் கூடுதல் வேலையை ஊழியர்கள் செய்ய முடியாது என்றும் மூன்லைட்டிங் குறித்து தனது கருத்தினை மத்திய அரசு தெரிவித்திருந்தது.
நிறுவனத்தினை பாதிக்கலாம்
மக்களவையில் சமீபத்தில் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை இணை அமைச்சர் ராமேஸ்வர் டெலி, மூன்லைட்டிங் குறித்து சட்டம் 1946ன் படி, எந்த ஒரு நேரத்திலும் ஊழியர்கள் நிறுவனத்தின் நலனுக்கு எதிரான வேலை செய்ய கூடாது. இது நிறுவனத்தினை மோசமாக பாதிக்கலாம் என விளக்கம் கொடுத்திருந்தார்.
அவசியமான ஒன்று தான்
முன்னணி ஐடி நிறுவனங்களான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ், இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ போன்ற நிறுவனங்கள், இந்த மூன்லைட்டிங் பிரச்சனைக்கு எதிராக குரல் கொடுத்து வந்தன. இது ஐடி ஊழியர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியது. குறிப்பாக விப்ரோ நிறுவனம் மூன்லைட்டிங்கினை காரணம் காட்டி பணி நீக்கமே செய்தது. இந்த நிலையில் நிகில் காமத்தின் இந்த கருத்தானது வந்துள்ளது. இது ஒரு புறம் ஐடி ஊழியர்களுக்கு ஆறுதலை கொடுத்தாலும், நிறுவனங்களின் கருத்தினையும் ஏற்றுக் கொள்ள வேண்டியது அவசியம் தானே..