மது அருந்துதல் என்பது குடிப்பவர்களை மட்டும் அல்ல, குடிப்பவர்களை சுற்றி இருப்பவர்களையும் பெரிதும் பாதிக்கிறது. குறிப்பாக இந்தியாவில் மது குடிப்பவர்களின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
இது உடல் நலத்திற்கு கேடு என்பதோடு, நிதி ரீதியாகவும் பெரும் பின்னடவை தருகின்றது எனலாம். பல ஆயிரம் இளைஞர்கள் இன்று இதற்கு அடிமையாகி தங்கள் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி கொண்டுள்ளதை காண முடிகிறது.
சினிமா படங்களில் சொல்வதைபோல் ஒரு நாள் குடிக்காவிட்டாலும், அவர்கள் படும் பாட்டை பலரும் பார்த்திருக்கலாம். இது ஒரு புறம் எனில் மறுபுறம் கடன் வாங்கியேனும் குடிக்கும் துரதிஷ்டவசமான நிலையை பார்க்க முடிகிறது.
விழிப்புணர்வு அவசியம்
எல்லாவற்றுக்கும் மேலாக குடித்துவிட்டு தங்களையும் மறந்து, தங்களது குடும்பத்திலும், சுற்றியிருப்பிருப்பவர்களுக்கும் பிரச்சனையை ஏற்படுத்துவதும் வாடிக்கையான ஒன்றாக மாறியுள்ளது.
இது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிக அவசியம். இந்த நடவடிக்கையில் தான் தற்போது ஜோஹோவின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு இறங்கியுள்ளார் எனலாம்.
யார் இந்த ஸ்ரீதர் வேம்பு
ஸ்ரீதர் வேம்பு மிக எளிமையான ஒருவர். இவர் கார்ப்பரேட் நிறுவனம் என்பது மெட்ரோ நகரங்களில் மட்டும் அல்ல, இந்தியாவின் சிறு கிராமத்தில் கூட செயல்படுத்த முடியும் என்பதை செயல்பாட்டின் மூலம் சுட்டிக் காட்டியவர். குறிப்பாக ஒரு சாப்ட்வேர் சேவையை வழங்கும் ஒரு நிறுவனம் ஒரு குக்கிராமத்தில் இருப்பது, இந்திய ஐடி துறையினருக்கு ஒரு முன்னுதாரணம் எனலாம்.
விரக்தியின் பிடியில் மக்கள்
இப்படி ஒரு எளிமையான மனிதர் பொது இடங்களில் மதுபானம் அருந்தினால் அவர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என தனது ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அவரின் ட்விட்டர் பக்கத்தில் கிராமப்புறங்களில் அதிக சுமையை பெண்கள் சுமக்கும் நிலை அதிகரித்துள்ளது. மது குடிப்பதற்காக கடன் வாங்கும் போக்கு இங்குள்ளது. இது மேற்கொண்டு மக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பலரும் விரக்தியின் பிடியில் சிக்கி, இறுதியில் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
ஊக்குவிக்காதீர்கள்?
இதுபோன்ற பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும். அதற்கான முதல் கட்டமாக நமது ஊடகங்களும், அதிகாரிகளும் பரவி வரும் மது கலாச்சாரத்தினை ஊக்குவிக்க கூடாது. மதுப்பழக்கம் என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பமாக இருக்கலாம். எனினும் அதனை பொதுவெளியில் பலரும் காண செய்வது தவறு. இது பலரையும் முகம் சுளிக்க வைக்கலாம். இதுபோன்று செய்தால் பணியில் இருந்தே நீக்கி விடுவேன் என்று தனது ஊழியர்களை எச்சரித்துள்ளார்.
கடுமையானவர்கள்
கிராமப்புறங்களில் விவாசயிகளில் நிலவி வரும் கடுமையான சூழல் மற்றும் கைவினை கலைஞர்கள் எதிர்கொண்டுள்ள சவால்களுக்கு மத்தியில், பொருளாதார கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, ஆழ்ந்த தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. நெசவு, மண்பாண்டங்கள், பாத்திரங்கள், உள்ளூர் இயந்திரங்கள், வாகனங்கள், சொந்த தொழில் செய்பவர்கள் என பலரும் காணமல் போய்விட்டனர்.
கிராமவாசிகள் அதிகம்
தற்போது அவர்களின் ஒரே விருப்பம் இடம் பெயர்வு மட்டும் தான். அதுவும் முடியாதவர்கள் மேற்கொண்டு சிக்கலை எதிர்கொண்டுள்ளனர். இந்திய பொருளாதாரத்தில் கிராமப்புற பொருளாதாரம் என்பது மிக முக்கியமானது. 140 கோடி மக்களில் 60% பேர் கிராமப்புறங்களில் வசிப்பவர்கள். ஆக கிராமப்புறங்களில் ஏற்படும் பிரச்சனை இந்திய பொருளாதாரத்திலும் எதிரொலிக்கலாம்.
கிராமப்புற பொருளாதாரம்
ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற நாடுகள் தங்கள் கிராமப்புறங்களில் உலகத் தரம் வாய்ந்த தொழில் துறையை கொண்டுள்ளன. ஆக கிராமப்புறத்தின் வீழ்ச்சி என்பது அவ்வளவு நல்லதல்ல.
ஆக நாங்கள் கிராமப்புற பள்ளிகளில் உற்பத்தி திறன் மற்றும் அதனுடன் தொடர்புடையை தொழில் நுட்பங்களை பயிற்றுவிக்கும் திட்டத்தினை தொடங்கியுள்ளோம். இதனை தொடர்ந்து விரிவுபடுத்துவோம் என ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.