இந்தியாவின் முன்னணி ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான சோமேட்டோ கொரோனா தொற்றின் காரணத்தால் அதிகளவிலான வர்த்தகத்தை இழந்து தவித்து வரும் நிலையில் இதைச் சமாளிக்க மளிகை பொருட்கள், மதுபானம் டெலிவரி செய்யத் துவங்கியுள்ளது.
இந்நிலையில் கொல்கத்தாவில் சோமேட்டோ டெலிவரி பாய்ஸ் சில இந்நிறுவனம் சீன முதலீட்டில் இயங்குவதால், இந்நிறுவனத்தை எதிர்க்கும் வகையில் பொதுமக்கள் முன்னிலையில் சோமேட்டோ-வின் அதிகாரப்பூர்வ டிசர்ட்-ஐ கழித்தும், தீயிட்டு எறித்துள்ளனர்.
கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா சீனா இடையே நடந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்த நாள் முதலே இந்தியாவில் சீன நிறுவன தயாரிப்புகளுக்கும், சீன நிறுவனங்களுக்கும் கடுமையான எதிர்ப்பு நிலவி வருகிறது. இதன் வெளிப்பாடாகவே கொல்கத்தாவில் இந்த நிகழ்வையும் பார்க்கப்படுகிறது.
போராட்டம்
கொல்கத்தாவின் Behala பகுதியில் நடந்த போராட்டத்தில் 40க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். இதில் பலர் சோமேட்டோ நிறுவனம் சீன முதலீடுகளால் இயங்கும் காரணத்தால் இந்த நிறுவனத்தில் பணியாற்ற விருப்பமின்றிப் பணியைவிட்டு விலகிவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இதுமட்டும் அல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மக்களைச் சோமேட்டோவில் உணவை ஆர்டர் செய்ய வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டனர்.
அலிபாபா
2018இல் சீனாவின் மிகப்பெரிய ஈகாமர்ஸ் சப்ளை செயின் நிறுவனமான அலிபாபா-வின் கிளை நிதியியல் நிறுவனமான Ant பைனான்சியல் நிறுவனம் சுமார் 210 மில்லியன் டாலர் தொகையை முதலீடு செய்து சோமேட்டோவின் 14.7 சதவீத பங்குகளைக் கைப்பற்றியது.
சமீபத்தில் கூட Ant பைனான்சியல் நிறுவனத்தின் வாயிலாகக் கூடுதலாக 150 மில்லியன் டாலர் தொகையை முதலீடாகப் பெற்றுள்ளது சோமேட்டோ.
லாபம்
மேலும் ஒரு போராட்டக்காரர், சீன நிறுவனங்கள் இந்திய வர்த்தகத்தில் லாபத்தைப் பெற்றுக்கொண்டு, இந்திய ராணுவத்தைத் தாக்குகிறது. இதுமட்டும் அல்லாமல் இந்திய நிலத்தையும் கைப்பற்ற முயல்கிறது, இது ஒருபோதும் நடக்காது எனத் தெரிவித்தார்.
இன்னும் சில போராட்டக்காரர், தான் பட்டினி கிடந்தாலும் பரவாயில்லை சீன முதலீடு செய்துள்ள நிறுவனத்தில் தான் வேலை செய்ய முடியாது எனவும் தெரிவித்தார்.
பணிநீக்கம்
கொரோனாவால் ஏற்பட்ட வர்த்தகச் சரிவைச் சமாளிக்கச் சோமேட்டோ சுமார் 13 சதவீத ஊழியர்கள் அதாவது 520 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது. இது அனைத்தும் நிர்வாகம், டெக் பிரிவில் இருக்கும் ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கொல்கத்தாவில் நடந்த இந்தப் போராட்டம் குறித்துச் சோமேட்டோ இதுவரை எவ்விதமான கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications