இந்திய ஸ்டார்ட்அப் சந்தையில் முதல் வெற்றியாகச் சோமேட்டோ நிறுவனத்தின் ஐபிஓ பார்க்க்படுகிறது. இந்தியாவில் பல முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் யூனிகார்ன் நிலையை அடைந்திருந்தாலும், ஒவ்வொரு வருடமும் பல பில்லியன் டாலர் அளவிற்கான வர்த்தகத்தைச் செய்தாலும் ஐபிஓ வெளியிடுவது என்பது பூனைக்கு யார் மணி கட்டுவது போலவே பார்க்கப்பட்டது.
காரணம் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் குறைந்த காலகட்டத்தில் வர்த்தக வளர்ச்சிக்காக அதிகளவிலான தொகையைச் செலவு செய்யும், இதனால் முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அதிகளவிலான நஷ்டத்தை ஒவ்வொரு வருடமும் எதிர்கொள்ளும்.
இப்படியிருக்கும் சூழ்நிலையில், யார் முதலில் ஐபிஓ வெளியிடுவது என்ற தயக்கம் அனைவரிடத்திலும் இருந்தது. ஆனால் அனைத்தையும் உடைத்து வெற்றி அடைந்துள்ளார் சோமேட்டோ நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓ-வான தீபிந்தர் கோயல்.
மும்பை பங்குச்சந்தையில் சோமேட்டோ
மும்பை பங்குச்சந்தையில் முதல் முறையாக ஒரு இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனம் பட்டியலிடப்படுவதால் முதலீட்டாளர்களின் ஆர்வத்தைக் கணிக்க முடியாமல் இருந்தது. ஆனால் சற்றும் எதிர்பார்க்காத வகையில் ரீடைல் முதலீட்டாளர்கள் முதல் நிறுவன முதலீட்டாளர்கள் வரையில் அனைத்து தரப்பினரும் வரவேற்பு கொடுத்தனர்.
சோமேட்டோ பங்குகள்
இதன் வாயிலாக 3 நாட்களுக்கு முன்னதாகவே சோமேட்டோ பங்குகள் இன்று மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. சற்றும் எதிர்பார்க்காத வகையில் சுமார் 51 சதவீத ப்ரீமியம் விலையில் பட்டியலிடப்பட்டு உள்ளது சோமேட்டோ பங்குகள்.
சோமேட்டோ சிஇஓ தீபிந்தர் கோயல்
இதுகுறித்து சோமேட்டோ நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓ-வான தீபிந்தர் கோயல் தனது டிவிட்டரில் மிக முக்கியமான ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். ஐபிஓ வெற்றியை கொண்டாடும் வகையில் சோமேட்டோ நிறுவனத்தில் வைக்கப்பட்டு இருந்த வாசக பலகையைப் புகைப்படமாகப் பதிவிட்டுள்ளார்.
தீபிந்தர் கோயல் டிவீட்
இந்த டிவீட்டில், கடந்த காலத்தைக் கண்டு பெருமையாகவும், நிகழ்காலத்திற்கு நன்றி உடனும், எதிர்காலத்திற்குத் தயாராகிறோம் - Zomato என்ற வாசக பலகையைப் பதிவிட்டுள்ளார். மேலும் புகைப்படத்திற்கு எப்போதும் இவ்வளவு உற்சாகமாக இருந்தது இல்லை, ஆனால் அதேவேளையில் மாறுபட்ட உணர்வை உணர்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
10 வருட பயணம்
மேலும் சோமேட்டோ தலத்தில் பிளாக் பகுதியில் வெளியிட்டுள்ள செய்தியில் கடந்த 10 வருடப் பயணம் எளிதாக இருக்கவில்லை, பல ஏற்ற இறக்கம் கண்டுள்ளோம். நிறுவன வளர்ச்சி தேவையான சில முடிவுகளை எடுக்கும் போது முதலீட்டாளர்கள் பாதிக்கப்பட்ட காலமும் உண்டு. இதை அனைத்தையும் கடந்து இன்று உலகின் மிகச் சிறந்த உணவு டெலிவரி நிறுவனமாகச் சேமோட்டோ உருவெடுத்துள்ளது.
72 சதவீத வளர்ச்சி
சோமேட்டோ பங்குகள் இன்று மும்பை பங்குச்சந்தையில் 51.32 சதவீத ப்ரீமியம் விலையில் 115 ரூபாய்க்குப் பட்டியலிடப்பட்டது. பட்டியலிடப்பட்ட சில மணிநேரத்தில் அதிகளவிலான வர்த்தகத்தை எதிர் கொண்ட நிலையில் 10.00 மணிக்கு 72 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்து 138 ரூபாய் வரையில் உயர்ந்தது.
ஐபிஓ முதலீட்டாளர்கள்
சோமேட்டோ பங்குகளை ஐபிஓ மூலம் பெற்ற முதலீட்டாளர்களுக்கு இன்று ஜாக்பாட் தான். 5 நாட்களில் சுமார் 70 சதவீதம் லாபத்தைப் பெற்றுள்ளது. சோமேட்டோ நிறுவனப் பங்குகளுக்கு அப்பர் மற்றும் லோவர் லிமிட் ஆக 20 சதவீதம் நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதால், இன்றைய வர்த்தகத்தில் 138 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.
40 மடங்கு அதிக முதலீடு
சோமேட்டோ பங்குகள் பங்குச்சந்தையில் 20 சதவீதம் ப்ரீமியம் விலை கிடைப்பதே கடினம் எனக் கூறப்பட்ட நிலையில், தற்போது 51.32 சதவீத ப்ரீமியம் விலை கிடைத்து 72 சதவீதம் வரையில் முதல் நாளிலேயே வளர்ச்சி அடைந்துள்ளது. சோமேட்டோ பங்குகளை ரீடைல் மற்றும் நிறுவன முதலீட்டாளர்கள் இணைந்து சுமார் 40 மடங்கு அதிகம் முதலீட்டாளர்கள் முதலீடு செய்தனர்.