ஒரு காலத்தில் எங்கு ஹோட்டல் இருக்கும் என்று தேடிப்போய் நாம் உணவு அருந்திய நிலை இருந்து வந்தது. ஆனால் சமீப காலமாக இளைஞர்களுக்கு விரும்பிய நேரத்தில், அமர்ந்த இடத்தில் இருந்தே உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிடும் அளவுக்கு காலம் மாறிவிட்டது. இதற்கு முக்கிய காரணம் ஸ்விக்கி சோமேட்டோ நிறுவனங்கள் தான்.
இதனால் இன்றைய நாளில் மெட்ரோ நகரங்களில் இல்லத்தரசிகளில் பலர் சமைப்பதையே மறந்து விட்டனர் என்று தான் கூற வேண்டும்.
இப்படி இருக்கையில் கொரோனாவின் தாக்கம் பலருக்கு புதியதாக சமைக்க கற்றுக் கொடுத்துள்ளது என்று தான் கூற வேண்டும்.
கொரோனாவால் பாதிப்பு
ஏனெனில் இந்த கொரோனா லாக்டவுன் காலத்தின் ஸ்விக்கி சேமேட்டோ போன்ற நிறுவனங்களின் சேவைகள் ஒரு கட்டத்தில் நிறுத்தப்பட்டன. இன்னும் சரியாக சொல்லவேண்டுமானால் இதுபோன்ற ஆன்லைன் நிறுவனங்களின் பொழப்பே உணவகங்களை நம்பித்தான் இருந்து வருகிறது. ஆக லாக்டவுன் காரணமாக மிக அதிகளவில் பாதிக்கப்பட்ட துறைகளில் இதுவும் ஒன்று தான் என்றே கூறலாம்.
முடங்கி போன வர்த்தகம்
இதற்கு பல காரணங்கள் உண்டு. ஒன்று உணவகங்கள் மூடல், இரண்டாவது ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. சில இடங்களில் அனுமதிக்கப்பட்டாலும் ஆர்டர் செய்வதற்கு ஆட்கள் இல்லை. இப்படி எது எடுத்தாலும் பிரச்சனையாக இருந்து வரும் நிலையில், இவர்களின் முழு வர்த்தகமும் முடங்கி போயுள்ளது எனலாம்.
பணி நீக்கம் & சம்பள குறைப்பு
இந்த நிலையில் நாட்டின் முன்னணி ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான சேமோட்டோ தங்களது மொத்த ஊழியர்களில் 13 சதவீதம் பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாகவும் அறிவித்துள்ளது. மேலும் தனது ஊழியர்களில் அதிகம் சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு 50% சம்பளத்தினை குறைத்துள்ளதாகவும், சோமேட்டோவின் தலைமை செயல் அதிகாரி தீபைந்தர் கோயல் கூறியுள்ளார்.
அடுத்த பல மாதங்களுக்கு பாதிப்பு
மேலும் நாடு முழுவதும் வேகமெடுத்து பரவி வரும் கொரோனாவினால், அடுத்த 6 - 12 மாதங்களில் உணவக துறை 25 -40% பாதிக்கப்படலாம் என்றும் தெரிவித்துள்ளார். ஆக நிலவி வரும் நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் இப்படி ஒரு அதிரடியான நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.