இந்தியாவின் முன்னணி ஆன்லைன் உணவு ஆர்டர் மற்றும் டெலிவரி சேவை செய்யும் சோமேட்டோ லாக்டவுன் காலத்தில் ஏற்பட்ட வர்த்தகச் சரிவைப் புதிதாகத் துவக்கப்பட்ட மளிகை பொருட்கள் டெலிவரி சேவை மூலம் ஈடு செய்து வரும் நிலையில், தற்போது புதிதாக ஒரு திட்டத்தைத் தீட்டி வருகிறது.
நாடு முழுவதும் லாக்டவுன் இருக்கும் காரணத்தால் மதுபானத்திற்கான தட்டுப்பாடு மக்கள் மத்தியில் அதிகமாக இருக்கும் நிலையில், இந்த வாய்ப்பை பயன்படுத்திப் புதிய வர்த்தகத்தை ஈர்ப்பது மட்டும் அல்லாமல் அதிகளவிலான வருவாய் பெறவும் முயற்சி செய்து வருகிறது.
ஆன்லைன் உணவு ஆர்டர் மற்றும் டெலிவரி சேவை
கொரோனா தொற்றின் காரணமாக மக்கள் வெளியில் அதாவது உணவகங்களில் இருந்து உணவு ஆர்டர் செய்யவும், சாப்பிடவும் பயப்படும் நிலையில் சோமேட்டோ வர்த்தகத்தை மொத்தமாக இழந்து மோசமான நிலை இருந்து வருகிறது.. இந்த நிலையில் தான் புதிய வர்த்தகமான மளிகை பொருட்களை டெலிவரி செய்யும் புதிய சேவையைச் சோமேட்டோ துவங்கியது.
இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தாலும் உணவு டெலிவரிக்கு இணையான வர்த்தகத்தைச் சோமேட்டோவால் பெற முடியவில்லை.
மதுபானம்
மார்ச் 25ஆம் தேதி முதல் நாடு முழுவதும் மதுபான கடைகள் மூடப்பட்ட நிலையில், தற்போது சில மாநிலங்களில் வரி வருமானத்திற்காகவும், மக்களின் கோரிக்கையின் எதிரொலியாக மதுபான கடைகளைத் திறந்துள்ளது.
இதனால் மதுபிரியர்கள் பல்வேறு கடுமையான காட்டுப்பாடுகளிலும், உச்சி வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கிச் சென்று வருகின்றனர்.
ஆன்லைன் டெலிவரி
இந்தியாவில் ஆன்லைன் ஆர்டர் மூலம் மதுபானம் டெலிவரி செய்யச் சட்டப்பூர்வமான வாய்ப்புகள் இல்லை. ஆனால் இந்தியாவில் ஆன்லைன் டெலிவரி சேவை பெரிய அளவில் வளர்ச்சி அடைந்த காலத்தில் இருந்தே மதுபான தயாரிப்பு நிறுவனங்களும், அமைப்புகள் மதுபானத்தை ஆன்லைன் டெலவிரி செய்ய அனுமதி கொடுக்குமாறு கோரிக்கை விடுத்து வருகிறது.
கொரோனா பாதிப்பு அடைந்துள்ள இந்த நேரத்தில் ஆன்லைன் டெவரிக்கு ஒப்புதல் கொடுத்தால் கூடுதல் தொற்றுகளைத் தடுக்க முடியும்.
சோமேட்டோ
இந்தியாவின் மதுபானம் குடிப்பதற்காக அடிப்படை வயது வரம்பு ஒவ்வொரு மாநிலத்திற்கும் (18 முதல் 25 வரை) மாறுப்படுகிறது. அதன் அடிப்படையில் சோமேட்டோ தற்போது கொரோனா பாதிப்பு குறைவாக இருக்கும் பகுதிகளில் மட்டுமே மதுபான டெலிவரி சேவையை அளிக்கப்போகிறோம் எனச் சோமேட்டோ சிஇஓ மோஹித் குப்தா International Spirits and Wines Association of India (ISWAI) அமைப்புக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்து இருந்தார்.
ISWAI நிர்வாகத் தலைவர் அம்ரித் கிரண் சிங் கூறுகையில், ஆன்லைன் டெலிவரிக்கும் அனுமதி கொடுப்பதன் மூலம் வருவாய் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்கள் அதிக வருவாய் ஈட்ட வழிவகுக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
புதிய வரி மாற்றம்
திங்கட்கிழமை முதல் டெல்லியில் மதுபான விற்பனை துவங்கப்பட்ட நிலையில் அம்மாநில அரசு மதுபானம் மீது "ஸ்பெஷல் கொரோனா கட்டணம்" பெயரில் சுமார் 70 சதவீத வரியை விதித்துள்ளது. இதேபோல் ஆந்திரா பிரதேச மாநில அரசு 75 சதவீத வரியும், மேற்கு வங்காள அரசு 30 சதவீத வரியும்.
ஹரியானா நற்றும் ராஜஸ்தான் மாநில அரசுகள் இந்திய மதுபானங்கள் மீது கூடுதலாக ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாயும், வெளிநாட்டு மதுபானத்திற்கு 20 ரூபாயும் கூடுதல் வரியாக விதித்துள்ளது.
தமிழ்நாட்டில் மதுபானத்தின் மீது 15 சதவீதம் கூடுதல் கலால் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் 180ml சாதாரண மதுபானத்தின் விலை 10 ரூபாயும், நடு மற்றும் உயர்தர மதுபானத்தின் விலை 20 ரூபாயும் அதிகரிக்க உள்ளது.