சென்னை: வரியில்லாக் கடன் பத்திரங்களை வாங்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் நினைத்தாலும் பெரும்பாலான சமயங்களில் அவற்றை வாங்க முடிவதில்லை.
அரசு சார்ந்த நிறுவனங்கள், தங்களின் கட்டுமானப் பணிகள் மற்றும் நீண்ட கால நிதித் தேவைகளுக்கு இப்பத்திரங்களை வெளியிடுகின்றன. நமது அரசு, தற்போது இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI), இந்திய ரயில்வே நிதி நிறுவனம்(IRFC) மற்றும் தேசிய அனல் மின் நிறுவனம் (NTPC) உள்ளிட்ட ஏழு அரசு நிறுவனங்களுக்குக் கடன் பத்திரங்களை வெளியிட அனுமதி அளித்துள்ளது.
வரியில்லாப் பத்திரங்கள் குறித்த சில தகவல்கள் இதோ, உங்களுக்காக:
நிபுணர்கள் கருத்து
வரியில்லாப் பத்திரங்கள், அதிக வரி செலுத்தும் தனி நபர்களுக்கான சிறந்த தேர்வாக இருப்பதோடு மறுமுதலீட்டு வகைகளில் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய வட்டி இழப்புகளைத் தவிர்க்கவும் உதவுகிறது.
முதலீட்டு ஆதாயங்கள்
வரியில்லாக் கடன் பத்திரங்களைப் பங்குச் சந்தையில் விற்பதன் மூலம் கிடைக்கும் ஆதாயங்களுக்கு வரி செலுத்த வேண்டும்.
வைத்திருப்புக் காலம் 12 மாதங்களுக்குக் குறைவாக இருந்தால், அந்த முதலீட்டு ஆதாயத்திற்கு, அந்த ஆண்டுக்கான தனிநபர் வருமான வரி விகிதப்படி வரி விதிக்கப்படும். பத்திரங்கள் 12 மாதங்களுக்கு மேல் வைத்திருந்து விற்கும்போது அடையும் முதலீட்டு ஆதாயத்திற்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும்.
வரியில்லாப் பத்திரங்கள்
இவை வரியில்லாப் பத்திரங்கள் என்று சொல்லப் பட்டாலும், இவை மூலம் ஈட்டப்படும் வட்டி வருமானத்திற்குத்தான் வரிவிலக்கு அளிக்கப்படுமே தவிர, முதலீடு செய்யப்படத் தொகைக்கு வரிவிலக்கு இல்லை. வட்டி வழங்கப்படும்போது 'ஆதார வரி விதிப்பு' என்று சொல்லப்படும் TDS பிடித்தம் செய்யப்படுவதில்லை.
பணமாக்கும் வழிகள் குறைவு
வரியில்லாக் கடன் பத்திரங்களைப் பொறுத்த வரை, இவற்றைப் பணமாக மாற்றுவதற்கான வழிகள் குறைவு. ஏனென்றால் இவை வங்கி வைப்பு நிதியைப் போலின்றி, பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட வகையைச் சேர்ந்ததாகும்.
முதிர்வுக் காலத்திற்கு முன் திட்டத்திலிருந்து முதலீட்டாளர் வெளியேற விரும்பினால், பங்குச் சந்தையில் விற்க முடியும் என்றாலும், சில நேரங்களில் அவை உடனடியாக வியாபாரம் ஆவதில்லை.
சில்லறை முதலீட்டாளர்களுக்கான பலன்கள்
ஒவ்வொரு பத்திர வெளியீட்டின் போதும், சில்லறை முதலீட்டாளர்கள் ரூ. 10 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும் என்பது ஒரு நல்ல விஷயம். ரூ.10 லட்சத்திற்கு மேல் முதலீடு செய்யும் தனிநபர் முதலீட்டாளர்கள், உயர் நிகர-மதிப்புள்ளவர்களாகக் கருதப்படுவார்கள். 40 சதவீத பொது வெளியீடு, சில்லறை முதலீட்டாளர்களுக்காகவே ஒதுக்கப்படுகிறது.
சிறந்த வட்டி வருமானமும் வரி ஆதாயமும்
30 சதவீத வருமான வரி செலுத்தும் நிலையில் உள்ளவர்கள் இதில் முதலீடு செய்வதன் மூலம், 7.5 சதவீதம் வட்டி தரும் பத்திரங்களை வாங்கி, முதலீட்டுத் தொகையில் 10.85 சதவீதம் வரை ஓர் ஆண்டுக்கு வருமானமாக ஈட்ட முடியும்.
அந்த வட்டி வருமானத்துக்கு வரி எதுவும் கிடையாது. 20 சதவீத வருமான வரி செலுத்தும் நிலையில் உள்ளவர்கள் 9.45 சதவீதமும், 10 சதவீத வருமான வரி செலுத்தும் நிலையில் உள்ளவர்கள், 8.35 சதவீதமும் வருமானமாக ஈட்ட முடியும்.
வங்கி நிரந்தர வைப்பு நிதியும் வரியில்லாக் கடன் பத்திரங்களும்- ஒரு ஒப்பீடு:
நிரந்தர வைப்பு நிதிகளின் மீதான வட்டி வருமானத்திற்குத் தனி நபர் வரிப் பட்டியலின் படி வரி செலுத்த வேண்டும். 5-10 வருடங்களுக்கான வைப்பு நிதிக்கு எஸ்பிஐ வங்கி ஏறக்குறைய 8 சதவீத வட்டி அளிக்கிறது.
ஆனால், இதற்கு மாறாக அரசு நிறுவனக் கடன் பத்திரங்களின் புதிய வெளியீடுகள் மீதான வட்டி அதன் முதிர்வு கால அடிப்படையில் இருக்கும். தற்போதைய விகிதப்படி, ஒரு சில்லறை முதலீட்டாளர், ஆண்டுக்கு 7.25 முதல் 7.75 சதவீதம் வரை கடன் பத்திர முதலீடுகளுக்கு வட்டி பெற முடிவதோடு இந்த வட்டி வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டியதில்லை.
வருமான வரியைக் குறைக்கும் ஆயுதம்..
நிதி நிபுணர்களின் கருத்துப்படி, அதிக வரி செலுத்தும் நிலையில் உள்ள தனி நபர்கள், வங்கிகளில் நிரந்தர வைப்பு நிதி செய்வதை விட இந்த வரியில்லாப் பத்திரங்களில் முதலீடு செய்வதன் மூலம் அதிக வருமானம் பெறுவதையே விரும்புகிறார்கள். அப்படி முதலீடு செய்வோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நீண்ட கால முதலீடு...
இந்த முதலீட்டின் கால அளவு 10, 15 மற்றும் 20 ஆண்டுகள் ஆக இருந்தாலும் வட்டியானது ஆண்டுக்கு ஒரு முறையோ இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையோ வழங்கப்படும். முதலீட்டு அளவுகள் குறைந்த பட்சம் ரூ.1,000 தொடங்கி ரூ.5,000 வரை இருக்கும்.
நஷ்டத்திற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு..
வரியில்லாக் கடன் பத்திரங்களைப் பொறுத்தவரையில் அவை திரும்ப வராமல் போய் நஷ்டமடையும் வாய்ப்புகள் மிகக் குறைவு. ஏனெனில் அவை அரசு சார்ந்த நிறுவனங்களாக இருப்பதால் அவற்றின் நம்பகத் தன்மை அதிகம். இவற்றை வெளியிடும் நிறுவனங்களின் நிதி நிலைமையைக் கணக்கிட்டு, அவற்றுக்கான தர மதிப்பைக் கடன் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.