முதலீட்டாளர்கள் நிரந்தர வருமானம் வரும் வகையில் தங்கள் முதலீடுகளைச் சிறு சேமிப்புத் திட்டங்களிலும், கடன் ஈட்டுப் பத்திரங்களிலும், பங்கு வர்த்தகத்திலும் பல்வேறு வகையாகப் பிரித்து முதலீடு செய்கின்றனர். எனவே முதலீட்டினை பிரித்துப் பல்வேறு திட்டங்களில் செய்வது முக்கியமான ஒன்றாகும்.
பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் இந்திய அரசால் 1968 ம் ஆண்டின் பொது வருங்கால வைப்பு நிதி சட்டத்தின்படி இயங்கி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் முதலீடு செய்ய விரும்புவோருக்கு அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான சில தகவல்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.
சுய தொழில் செய்வோருக்கும், பிற அமைப்புச் சாரா தொழிலாளர்களுக்கும் ஓய்வுகாலப் பாதுகாப்பிற்காக அரசு இந்தப் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தைத் தற்போது நடைமுறைப்படுத்தி வருகிறது.
பிபிஎப் திட்டம் என்றால் என்ன.. ?
பிபிஎப் எனச் சுருக்கமாகக் கூறப்படும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் மக்களிடத்திலே மிக நல்ல அறிமுகத்திலுள்ள நீண்டகாலச் சிறு சேமிப்புத் திட்டங்களில் ஒன்று, முதிர்வு காலத்தில் கவர்ச்சிகரமான பயன்களுடன் வருமான வரியிலிருந்து முற்றிலும் விலக்களிக்கப்பட்ட ஒரு திட்டமாகும்.
எங்குத் துவங்கலாம்..?
எந்த ஒரு தனி நபரும், தனக்காகவோ அல்லது தன்னைச் சார்ந்துள்ள இளம் சிறாருக்காகவோ அருகிலுள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கிளைகளிலோ அல்லது பிற தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலோ அல்லது அஞ்சலகங்களிலோ இதற்கான ஒரு பிரத்தியேக கணக்கைத் துவங்க வேண்டும்.
தேவையானவை
ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வருமான வரி செலுத்துவதற்கான நிரந்தரக் கணக்கு எண் (பான்) ஆகியவற்றுடன் சில படிவங்களையும் பூர்த்திச் செய்து தாக்கல் செய்ய வேண்டும்.
இக்கணக்கு தொடங்கியவுடன் இக்கணக்கு பற்றிய விவரங்களடங்கிய ஒரு கணக்குப் புத்தகம் ஒன்று உங்களுக்கு வழங்கப்படும்.
ஒரு கணக்கு தான்..
ஒரு தனி நபர் தனது பெயரில் வாழ்நாளில் ஒரு பொது வருங்கால வைப்பு நிதி கணக்கு மட்டுமே துவக்க இயலும். ஒரு தனி நபர் ஒரு இளம் சிறார் பெயரில் அவருடைய பாதுகாவலராகவோ அல்லது பெற்றோராகவோ இருக்கும் பட்சத்தில் துவக்கலாம். இருவர் இணைந்து துவக்கும் கூட்டுக் கணக்குகள் இத்திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்படுவதில்லை.
அயல்நாடு வாழ் இந்தியர்கள் இந்தப் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் இணைய இயலாது.
முதலீடு செய்ய எது சரியான நேரம்?
ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் ஐந்தாம் நாள் இந்தப் பொது வருங்கால வைப்பு நிதியில் முதலீடு செய்ய ஏற்ற நேரமாகும். ஒவ்வொரு மாதமும் ஐந்தாம் தேதியன்றோ அல்லது அந்த மாதத்தின் கடைசி நாளன்றோ அந்தக் கணக்கில் உள்ள தொகையின் அடிப்படையில் மாதாந்திர வட்டி கணக்கிடப்பட்டு வழங்கப்படும். மாதா மாதம் வட்டி கணக்கிடப்பட்டு மொத்தமாகச் சேர்த்து ஆண்டு இறுதியில் இந்த வட்டி வழங்கப்படும்.
இந்தத் திட்டம் ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான நிதிஆண்டின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. அதிகபட்ச வட்டியைச் சம்பாதிக்க ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 5 தேதிக்கு முன் முதலீடு செய்ய வேண்டும்.
கடன் பெறும் வசதி
இத்திட்டத்தின் கீழ் முதல் கடன் இத்திட்டத்தில் சேர்ந்து மூன்றாண்டுகள் கழித்தே பெற முடியும். கடன் பெற விண்ணப்பிக்கும்போது கணக்கில் இருப்பில் உள்ள தொகையில் 25% அளவு தொகை மட்டுமே கடனாக வழங்கப்படும். இக்கடன் 36 மாத சுலப தவணைகளில் திருப்பிச் செலுத்த பட வேண்டும்.
இறுதி தொகை பெறுதல்
ஒருவர் எந்த ஆண்டில் கணக்கு துவங்கினாரோ அந்த ஆண்டின் இறுதியில் இருந்து 5 ஆண்டுகள் முடிந்த பின்னரே இக்கணக்கை இடைநிறுத்தி இறுதி தொகை பெற இயலும்.
முதிர்வு தொகை
இக்கணக்கு 15 ஆண்டுகளுக்கானது. முதிர்வு காலத்திற்குப் பிறகு முதலீட்டாளர் தொகையைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது மேற்கொண்டு முதலீடு ஏதும் செய்யாமல் அவர் விரும்பும் காலம் வரை திட்டத்தை நீட்டித்துக் கொள்ளலாம்.
இந்த நீட்டிப்பு ஒரு முறைக்கு 5 ஆண்டுகள் வரை அனுமதிக்க இயலும். வாழ்நாளில் எத்தனை முறை வேண்டுமென்றாலும் நீட்டித்துக் கொள்ளலாம்.
அரசாங்கத்தால் நடத்தப்படும் சேமிப்புத் திட்டம் என்பதால் உங்கள் பணத்திற்குப் பாதுகாப்பு என்பதால் நீங்களும் ஒரு கணக்கை துவக்கலாம்தானே.