தீபாவளி ஷாப்பிங் செய்யப் பணம் போதவில்லையா? மாத சம்பளம் வாங்குவோருக்கு அந்தக் கவலை வேண்டாம். பல வங்கிகள் மாத சம்பளம் வாங்குபவர்களுக்குச் சம்பள கணக்கின் மூலம் குறைந்த காலக் கடன் திட்டங்களை வழங்குகின்றன.
மேலும் இந்த ஓவர்டிராப்ட் கடன் சேவையினைப் பெற வங்கி கிளைக்குக் கூடச் செல்ல வேண்டாம். ஆனால் வங்கி மற்றும் வங்கி ஏடிஎம் மையங்கள் சென்றாலே போது என்று தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன. எனவே ஓவர்டிராப்ட் மூலம் கடன் பெற்று தீபாவளி ஷாப்பிங் செலவை ஈடுகட்டுவது எப்படி என்று இங்குப் பார்ப்போம்.
எப்படிச் சம்பள ஓவர்டிராப்ட் சேவையினைப் பெறுவது?
நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனம் ஓவர்டிராப்ட் சேவைக்காக வங்கி நிறுவனத்துடன் நேரடி தொடர்பில் இருக்கும் போது சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பின்பற்றுவதன் மூலம் கடன் பெறலாம்.
இல்லை என்றால் சம்பளம் கணக்கினை வைத்துள்ள வங்கி கிளைக்குச் சென்று ஓவர் டிராப்ட் சேவையினைப் பெறலாம். பொதுவாக வங்கிகள் இந்தச் சேவையினை அளிக்கச் சிறு கட்டணங்களை விதிக்கும்.
ஓவர்டிராப்ட் மூலம் எவ்வளவு கடன் பெற முடியும்?
ஓவர்டிராப்ட் மூலம் கடன் பெறக்கூடிய தொகை உங்களது மாத சம்பளத்தினைப் பொருத்தும் வங்கி நிறுவனங்களைப் பொருத்தும் மாறும். சில வங்கிகள் மாத சம்பளத்தில் 50 சதவீதத்தினை மட்டுமே ஓவர் டிராப்ட்கலாக அளிக்கும். சில வங்கிகள் குறைந்தது 25,000 ரூபாய் முதல் அதிகபட்சம் 4 லட்சம் ரூபாய் ஓவர் டிராப்ட் மூலம் கடனாக அளிக்கின்றனர்.
வங்கி நிறுவனங்கள்
எச்டிஎப்சி வங்கியில் நீங்கள் ஓவர்டிராப்ட் மூலம் பணம் பெற முயன்றால் குறைந்தது 25,000 முதல் 1 லட்சம் ரூபாய் வரை பெறலாம். இதுவே எஸ்பிஐ மற்றும் ஐசிஐசிஐ வங்கி நிறுவனங்கள் 4 லட்சம் ரூபாய் வரை சம்பள ஓவர் டிராப்ட்டினை அளிக்கின்றன. பிற வங்கிகளும் சேமிப்பு மற்றும் சம்பள கணக்குகளுக்கு ஓவர்டிராப்ட் மூலம் கடன் வழங்குகின்றன. அது மட்டும் இல்லாமல் சில நிதி நிறுவனங்கள் செயலிகள் மூலமாக ஊழியர்களின் விவரங்களைப் பெற்று சம்பள அட்வான்ஸ் என்ற பெயரில் கடனை அளிக்கின்றன.
வட்டி விகிதம் எவ்வளவும்?
ஓவர்டிராப்ட் என்பது கடன் பெறுவது போன்ற ஒரு சேவை என்பதால் ஆண்டுக்கு 15 முதல் 30 சதவீதம் வரை வட்டி செலுத்த வேண்டும் என்றும், இது தவணை மற்றும் கிரெடிட் ஸ்கோரை பொருத்து மாறும் என்றும் கூறப்படுகிறது. தனிநபர் கடன் போன்றவற்றைப் பெற்ற பிறகு தவணை காலம் முன்பே செலுத்த வேண்டும் என்றால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் ஓவர்டிராப்ட் சேவை மூலம் கடன் பெறும் போது முன்கேட்டியே செலுத்த முயன்றால் கூடுதல் கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை என்பது குறிப்பிடத்தகது.
குறிப்பு
என்ன தான் அவசரத்திற்கு ஓவர்ட்ராப்ட் சேவை மூலம் கடன் தொகை கிடைத்தாலும் அதனை அடுத்த மாத சம்பளத்திலேயே திருப்பிச் செலுத்திவிடக் கூடிய தொகையாகப் பெற முயல்வது நல்லது என்றும் வட்டி தொகை குறையும் என்று கூறுகின்றனர்.