பெங்களுரு : நாம் முதலில் நம் பழக்கத்தை உருவாக்குகிறோம். பின்னர் அந்த பழக்கம் நம்மை உருவாக்கும் என்றும் கூறுவார்கள். அதிலும் நிதி சம்பந்தமான செலவுகள், முதலீடுகள், தேவையற்ற கடன்கள், வசதியான வாழ்க்கை என பல செயல்களுக்கு, இந்த நிதிப் பழக்கங்கள் ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிதி பழக்கங்கள் சரியானவையாக இல்லையெனில் இறுதியில் அது நம்மை அதள பாதாளத்திற்கு கொண்டு சென்று விடும்.
அதிலும் மோசமான நிதி முதலீட்டு பழக்கங்கள் மிக மோசமான நிலைமைக்கு நம்மை கொண்டு செல்லும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த வகையில் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய முதலீட்டு நிதிப்பழக்கங்கள் என்னென்ன என்றும் சற்றி விரிவாகப் பார்க்கலாம்.
முதலீடு செய்யும் முன் ஆராய்ச்சி செய்ய வேண்டும்
முதலீடு செய்யும் முன் முதலில் நாம் அவற்றை பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டும். ஆமாங்க.. நாம் முதலீடு செய்யும் ஒரு திட்டமோ, அல்லது பங்கு சந்தையோ,அப்படி எனில் எந்த பங்கு, அதன் சரித்திரம், மியூச்சுவல் பன்டாக இருந்தால், கடந்த காலங்களில் அது எவ்வாறு வருமானம் கொடுத்திருக்கிறது. இதே பங்கு சந்தையோடு ஒப்பிடும்போது மியூச்சுவல் பன்ட்கள் ரிஸ்க் குறைவாக இருந்தாலும், அதிலும் எந்த பிளான் என்பதையெல்லாம் தெரிந்து கொண்டு முதலீடு செய்ய வேண்டும்.
முதலீடு செய்யும் முன் சுயமாக முடிவெடுங்கள்
இதே பங்குகள் என்றால், அது எந்த துறை சார்ந்த பங்கு, இந்த துறைக்கு வருங்காலத்தில் வரவேற்பு எப்படி இருக்கும். இது எந்த நிறுவனம், அந்த நிறுவனத்தின் வரலாறு என்ன முதலியவற்றை ஆராய்ச்சி செய்ய வேண்டும். அதே போல் இதெல்லாம் நீங்களாக தெரிந்து கொண்டு பிறகு முதலீடு செய்ய வேண்டும். சிலர் ஸ்டாக் புரோக்கர்கள் பேச்சை கேட்டு பின் பணத்தை இழந்துவிட்டு வருத்தப்படுவார்கள். ஆக இது மாதிரியான முதலீடுகளை செய்யும் போது, கண்டிப்பாக அதை பற்றி முழுமையாக தெரிந்திருக்க வேண்டும்.
ஒரே நேரத்தில் அதிகளவு முதலீடு வேண்டாம்
முதலீடு செய்வது என்பது நல்ல பழக்கமே என்றாலும், அதை ஒரே நேரத்தில் அதிகளவு செய்வது தவறு. உதாரணத்திற்கு ஒரு சமயத்தில் 100 பங்குகள் வாங்கும் இடத்தில், 1000 பங்குகள் வாங்குவது, இது போன்ற செயல்கள் உங்களை மிக மோசமான நிலைக்கு கொண்டு செல்லும். அதிலும் இதனால் ஏற்படும் பின்விளைவுகளை சமாளிக்கும் திறன் கொண்டவராக இருக்க வேண்டும். எடுத்துகாட்டாக முருகன் என்ற ஆட்டோ ஓட்டுனர் எப்பொழுதும் 100 பங்குகள் அல்லது அதற்கு கீழாக மட்டுமே முதலீடு செய்வார். அதிலும் அதிக லாபம் எதிர்பார்க்காமல் குறிப்பிட்ட லாபம் வந்தால் அதை உடனே விற்று விடுவார். நஷ்டத்திலும் அப்படித்தான். ஆனால் தனது நண்பர்களின் பேச்சை கேட்டு இந்த முறை 1000 பங்குகளை வாங்குகிறார். ஆனால் அந்த நிறுவனத்தில் ஏற்பட்ட ஏதோ பிரச்சனையால் அந்த பங்கின் விலை ஒரே நாளில் 30 ரூபாய் இறங்குகிறது எனில், ஒரே நாளில் அவர் 30,000 ரூபாய் நஷ்டத்தினை சந்திக்கிறார். இன்று நம்மில் பலரும் இப்பதான் இருக்கிறோம். கைக்கு மீறி முதலீடு செய்துவிட்டு பின் கஷ்டப்படுகிறார்.
அவசர காலத்திற்கான சேமிப்பு வேண்டும்
என்னதான் லட்சக் கணக்கில் சம்பளம் வாங்கி கொண்டிருந்தாலும், நம்மில் பலர் அவசர காலத்திற்கென சேமிப்பு என்ற பழக்கம் இல்லாமல் தான் இருக்கிறோம். முருகன் தன் கையில் இருக்கும் மொத்த பணத்தையும் நண்பர்கள் பேச்சைக் கேட்டு பங்கு சந்தையில் முதலீடு செய்கிறார். அதிலும் நஷ்டம். அந்த சமயத்தில் அவரது குழந்தைக்கு உடல் நிலை சரியில்லாமல் போகிறது. இந்த சூழ்நிலையில் வட்டிக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை. ஆக மொத்தம் தன் கையில் அவசரகால சேமிப்பு என இல்லாமல் அனைத்து பணத்தையும் முதலீடு செய்ததோடு மட்டும் அல்லாமல், வட்டிக்கு பணம் வாங்கி குழந்தையை காப்பாற்றும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்.
நஷ்டத்திற்கு மேல் நஷ்டம்
ஒரு புறம் பங்கு சந்தையிலும் நஷ்டம். மறுபுறம் கடன் வாங்கிய பணத்திற்கு வட்டி. ஆக மொத்தம் நஷ்டம் என்பது இங்கு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த சூழ்நிலையில் சரியாக வண்டி ஓட்ட முடியாமல் மன உளைச்சலுடன் வருமானமும் குறைகிறது. இன்று முருகனை போல் தான் நம்மில் பலரும் இருக்கிறோம் என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
ஹெல்த் இன்சூரன்ஸில் முதலீடு
பலர் அனாவசியாக பல செலவுகள் செய்தாலும், இன்சூரன்ஸ் என்பதை ஒரு முதலீடாக நினைப்பதில்லை. அதிலும் முருகனை போன்ற ஆட்கள், பங்கு சந்தையில் கொண்டு நஷ்டம் கண்டாலும் கடன் வாங்கி மருத்துவ செலுவு பார்த்தாலும், அதற்காக அதிகளவில் வட்டி கட்டினாலும், இன்சூரன்ஸ் என்பதை முதலீடாக நினைப்பதில்லை. அன்று இன்சூரன்ஸில் முதலீடு செய்திருந்தால், இன்று அந்த இன்சூரன்ஸ் பணத்தை வைத்து குழந்தைக்கு நல்ல முறையில் வைத்தியம் பார்த்திருக்கலாம், இன்று நம்மில் பலரும் செய்யும் தவறு இது தான். பணத்தை அனாவசியமாக செலவு செய்தாலும், இதுபோன்ற முக்கிய முதலீடுகள் அவசியம் என்பது பலருக்கு தெரிவதே இல்லை.
கடன்களை நிலுவையில் வைக்க வேண்டாம்
கடன்களை நிலுவையில் வைக்க வேண்டாம். நம்மில் சிலர் செய்யும் மிகப்பெரிய தவறே இது தான். நம் கையில் பணமே இருந்தாலும், அப்புறம் கடன்களை கட்டிக் கொள்ளலாம் என்று நினைப்பது தான். ஆனால் செலவுகள் என்பது எப்போது எந்த ரூபத்தில் வரும் என்றும் யாருக்கும் தெரியாது. இதனால் எதற்கு எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்பதை தீர்மானித்துக் கொண்டு அதை முடிந்த மட்டில் சரியான நேரத்தில் செலுத்தி விடுவது நல்லது. இது அடுத்த முறை நாம் அணுகும்போது, நமக்கு நன்மையே செய்யும். கடனை நிலுவையில் வைக்கும் பட்சத்தில் அது உங்களின் பேரை கெடுப்பதோடு உங்களின் சிபில் ஸ்கோரையும் பாதிக்கும்.
கடன் வாங்கி முதலீடு என்பது வேண்டாம்
சிலர் என்னதான் பிரச்சனைகளில் இருந்தாலும் கடன் வாங்கியாவது முதலீடு செய்வார்கள். ஆனால் முதலீடு செய்யும் முன்பு இவ்வாறு கடன் வாங்கி முதலீடு செய்யும் அளவுக்கு இது முக்கியமானதா? இதனால் நமக்கு ஏதேனும் இலாபம் உண்டா என்றெல்லாம் சிந்திக்க வேண்டும். உதாரணத்திற்கு ஏற்கனவே சொந்த வீடு கொண்ட ஒருவர், மற்றொரு வீடு வாங்க ஆசைப்பட்டு, அதற்காக கடன் வாங்குவார்கள். இந்த நிலையில், வீட்டின் உடனடி அவசியத்தை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். இது தேவையா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இதன் பின்னரே முதலீடு என்பதை திட்டமிட வேண்டும். ஏனெனில் தேவையற்ற கடன்கள் நம்மை மேலும் பிரச்சனைக்குள் தள்ளி விடும்.