டெல்லி: பொதுவாக வருமான வரித் துறை சார்ந்த மாற்றங்கள் அனைத்தும் ஏப்ரல் 01-ல் இருந்து தான் அமலுக்கு வரும். ஆனால் இந்த 2019 - 20 நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட், மக்களவைத் தேர்தல் முடிந்து ஜூலை 05, 2019 அன்று தாக்கல் செய்யப்பட்டது.
எனவே தற்போது ஜூலை 05, 2019 பட்ஜெட்டின் போது சொன்ன சில வருமான வரி சார்ந்த மாற்றங்கள் நாளை முதல் (செப்டம்பர் 01, 2019) அமலுக்கு வருகிறது.
என்ன என்ன வருமான வரி மாற்றங்கள் அமலுக்கு வருகிறது..? வாருங்கள் ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
அசையாச் சொத்துக்களுக்கு டிடிஎஸ்
பொதுவாக 50 லட்சம் ரூபாய்க்கு மேல் விலை உள்ள அசையா சொத்துக்களை வாங்கும் போது, சொத்தின் மொத்த விலையில் 1%-த்தை டிடிஎஸ் வரியாக பிடித்தம் செய்வார்கள். ஆனால் இப்போது வாங்கும் சொத்தின் விலை உடன், மற்ற வசதிகளான
க்ளப் உறுப்பினர் சந்தா கட்டணம்,
கார் பார்க்கிங் கட்டணம்,
மின்சாரம் மற்றும் நீர் வசதிகளுக்கான கட்டணம்... போன்றவைகளையும் வீட்டின் விலை உடன் சேர்த்துக் கொண்டு 1% டிடிஎஸ் கணக்கிட்டுச் செலுத்த வேண்டும்.
ரொக்கம் எடுத்தாலும் டிடிஎஸ்
வருமான வரிச் சட்டத்தில் புதிதாக 194N என்கிற பிரிவு கொண்டு வரப்பட்டு இருக்கிறது. இந்த சட்டப் படி ஒரு வங்கிக் கணக்கில் இருந்து ஒரு வருட காலத்தில் ஒரு கோடி ரூபாய் வரை பணம் எடுக்கலாம். அதற்கு மேல் எடுக்கும் பணத்துக்கு 2% டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும். மக்கள் பயன்படுத்தும் பணத்தின் (ரொக்கம்) அளவைக் குறைக்கத் தான் அரசு இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கிறது.
கான்டிராக்டர்கள் & ப்ரொஃபஷனல்கள்
செப்டம்பர் 01, 2019 முதல் ஒரு தனி நபரோ அல்லது இந்து கூட்டுக் குடும்ப அமைப்போ, ஒரு ஆண்டில் 50 லட்சம் ரூபாய்க்கு மேல் காண்டிராக்டர்கள் மற்றும் ப்ரொஃபஷனல்களுக்கு பேமெண்ட் கொடுக்கிறார்கள் என்றால் கொடுக்கும் தொகையில் 5%-த்தை டிடிஎஸ் பிடித்தம் செய்ய வேண்டும். இந்த நடவடிக்கையும் பெரிய பணப் பரிமாற்றங்களைச் செய்யும் நபர்களை வருமான வரி வளையத்துக்குள் கொண்டு வருவதற்கு தான் செய்யப்படுகிறது.
லைஃப் இன்சூரன்ஸுக்கு டிடிஎஸ்
பொதுவாக லைஃப் இன்சூரன்ஸ் பாலிசி முதிர்ச்சி அடைந்து கிடைக்கும் மொத்த தொகையில் 1% டிடிஎஸ் பிடித்தம் செய்து வந்தார்கள். இனி செப்டம்பர் 01, 2019 முதல் லைஃப் இன்சூரன்ஸ் பாலிசி முதிர்ச்சி அடைந்து கிடைக்கும் மொத்த தொகையில், முதலில் நாம் செலுத்திய பிரீமியத்தைக் கழித்துக் கொண்டு பாக்கி கூடுதலாக கிடைத்த தொகைக்கு 5% டிடிஎஸ் செலுத்தினால் போதும்.
பரிவர்த்தனை கணக்குகள்
பொதுவாக வங்கி வழியாக 50,000 ரூபாய்க்கு மேல் செய்யும் பணப் பரிமாற்ற விவரங்களைத் தான் வங்கிகள், வருமான வரித் துறையினருக்குக் கொடுப்பார்கள். ஆனால் இப்போது 50,000 என்கிற வரம்பை, கடந்த ஜூலை 05, 209 பட்ஜெட்டில் நீக்கிவிட்டர்கள். எனவே இனி வருமான வரித் துறை வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடம் 50,000 ரூபாய்க்குக் கீழ் உள்ள பணப் பரிமாற்றங்களைக் கூட கேட்டு வாங்கலாம்.
ஆதார் பான் இணைப்பு
குறிப்பிட்ட தேதிக்குள் ஆதார் அட்டையை பான் அட்டை உடன் இணைக்கவில்லை என்றால் பான் அட்டை செல்லாது (Invalid) எனச் சொல்லி இருந்தது மத்திய அரசு. ஆனால் கடந்த ஜூலை பட்ஜெட்டில் பான் அட்டையையும், ஆதாரையும் இணைக்கவில்லை என்றால் பான் செயல் இழந்து விடும் (Inoperative) என்று அறிவித்து இருக்கிறார்கள். ஆக இதில் செயல் இழந்து விடும் என்பதற்கான பொருளை, அரசோ நிதி அமைச்சகமோ இன்னும் தெளிவாக விளக்கவில்லை. எது எப்படியோ ஆதாரையும் பான் அட்டையையும் இணைத்துவிடுங்கள். நமக்கு ஏன் இந்த வீண் வம்பு.
பானுக்கு பதில் ஆதார்
பான் அட்டை கொடுத்து செய்ய வேண்டிய சில பரிமாற்றங்களை இனி ஆதார் அட்டை கொடுத்தும் செய்யலாம் என்கிற விதியும் செப்டம்பர் 01, 2019 முதல் அமலுக்கு வருகிறது. ஆக மக்களே இந்த ஏழு விஷயங்களிலும் கொஞ்சம் ஜாக்கிரதையாக கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். வேறு ஏதாவது பெரிய சந்தேகங்கள் இருந்தாலோ, வருமான வரி தொடர்பான சிக்கல்கள் இருந்தாலோ உங்கள் ஆடிட்டரிடம் கலந்து ஆலோசித்துக் கொள்வது நல்லது.