இந்தியாவின் 27 பொதுத் துறை வங்கிகளை இணைத்து 12 பொதுத் துறை வங்கிகள் மட்டுமே இந்தியாவில் செயல்பட வைக்கப் போகிறோம் என ஜிடிபி வெளியாகும் அதே நாளில் உரக்கச் சொல்லி கவனத்தை திசை திருப்பிவிட்டது அரசு.
கடந்த ஆகஸ்ட் 30, 2019 அன்று மாலை சுமார் 4 மணி அளவில் பேசத் தொடங்கிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எந்த வங்கிகளை, எந்த வங்கிகள் உடன் இணைக்க திட்டமிட்டு இருக்கிறார்கள் என்பதையும் விளக்கினார்.
பட்டியலை வாசிக்க வாசிக்க, அதில் பொதிந்து இருக்கும் அரசியல் கலந்த முடிவுகள் கொஞ்சம் அப்பட்டமாக புரிந்தது. சரி வங்கிகள் இணைப்புப் பிரச்னைக்கு வருவோம்.
பி என் பி மற்றும் கனரா
நீரவ் மோடி புகழ் பஞ்சாப் நேஷனல் பேங்க் உடன் ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா இணைக்கப்பட இருக்கிறது. இந்த இணைப்புக்குப் பின் இந்தியாவின் இரண்டாவது பெரிய பொதுத் துறை வங்கியாக உருவெடுக்கும்.
தென் இந்தியப் புகழ் கனரா வங்கி உடன் சிண்டிகேட் வங்கி இணைக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். திட்டம் போட்ட படி இணைப்புகள் நடந்த பின் இந்திய பொதுத் துறை வங்கிகளிலேயே 4-வது பெரிய வங்கியாக இடம் பிடிக்கும்.
யூனியன் பேங்க் & இந்தியன் பேங்க்
அதே போல யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா உடன் ஆந்திரா பேங்க் மற்றும் கார்ப்பரேஷன் பேங்க் இணைக்க இருக்கிறார்கள். இந்த இணைப்புக்குப் பின் இந்திய பொதுத் துறை வங்கிகளிலேயே ஐந்தாவது பெரிய வங்கியாக வலம் வரும்.
தென் இந்திய வங்கியான இந்தியன் பேங்க் உடன் அலஹாபாத் வங்கி இணைக்கப்பட வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார்கள். இந்த இணைப்புக்குப் பின் இந்திய பொதுத் துறை வங்கிகளிலேயே 7-வது பெரிய வங்கியாக உருவெடுக்கும்.
தனித்து விடப்பட்டவை
ஏற்கனவே ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் பேங்க் ஆஃப் பரோடா ஆகிய வங்கிகளை இணைத்து முடித்துவிட்டார்கள்.
பேங்க் ஆஃப் இந்தியா
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா
இந்தியன் ஓவர்சீஸ் பேங்க்
யூகோ பேங்க்
பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா
பஞ்சாப் அண்ட் சிந்த் பேங்க்...
போன்ற ஆறு வங்கிகள் இந்த இணைப்புச் சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல் தப்பித்து இருக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம். ஆனால் இந்த வங்கி இணைப்பு பிரச்னையால் சாதாரண வங்கி வாடிக்கையாளர்களுக்கு எத்தனை தலைவலிகள், கூடுதல் வேலைகள் இருக்கிறது தெரியுமா..?
1. வங்கி டாக்குமெண்டுகள்
இப்போது நீங்கள் சிண்டிகேட் வங்கியின் காசோலை (செக் புக்) மற்றும் பாஸ் புக் தான் நம்மிடம் இருக்கிறது என வைத்துக் கொள்வோம். அவைகளை எல்லாம் அடுத்த சில மாதங்களில் கனரா வங்கியின் காசோலை மற்றும் பாஸ் புத்தகமாக மாற்ற வேண்டி இருக்கும். குறிப்பாக வேறு எங்காவது பின் தேதி (வரும் மாதங்களில்) இட்டு சிண்டிகேட் வங்கியின் காசோலையைக் கொடுத்து இருந்தால் கூட அவைகளை திரும்ப வாங்கிக் கொண்டு புதிய கனரா வங்கி காசோலையைக் கொடுக்க வேண்டி இருக்கும்.
2. உங்கள் வங்கிக் கணக்கு விவரம்
அலஹாபாத் வங்கியில் கணக்கு வைத்து இருக்கிறீர்கள். இப்போது இந்தியன் வங்கியுடன் முழுமையாக இணைக்கப்பட்ட பின், நம்முடைய வங்கிக் கணக்குக்கான ஐ எஃப் எஸ் சி (IFSC) கோட் எண்கள் மற்றும் கிளை பெயர்கள் மாறுபடலாம். ஆக இதுவரை நாம் வாங்கும் சம்பளம் தொடங்கி... நாம் ஆட்டோ டெபிட் கொடுத்து இருக்கும் செலவுகள் வரை அனைத்திலும் புதிய ஐ எஃப் எஸ் சி (IFSC) கோட் எண்கள் மற்றும் கிளை பெயர்களை மாற்ற வேண்டும். இதே போலத் தான் எஸ்பிஐ-யின் ஐந்து துணை வங்கிகள் ஒன்றாக தாய் வங்கியான எஸ்பிஐ உடன் இணைக்கப்பட்ட போது திண்டாடினோம்.
3. க்ரெடிட் டெபிட் கார்ட்
கடந்த 2015-ம் ஆண்டில் அனைவருக்கும் சிப் தொழில்நுட்பம் கொண்ட டெபிட் மற்றும் க்ரெடிட் கார்ட்களைக் கொடுக்கச் சொன்னது ஆர்பிஐ. அதற்கு கடைசி தேதியாக டிசம்பர் 31, 2018-ஆகவும் குறித்துக் கொடுத்தது ஆர்பிஐ. இந்த மாற்ற காலத்தின் போதே நம் கார்டை வாங்க எத்தனை பிரச்னைகளைச் சந்தித்தோம் என்பதை நாம் மட்டுமே அறிவோம். இப்போது மீண்டும் அலஹாபாத் வங்கி டெபிட் கார்ட் அல்லது க்ரெடிட் கார் வைத்திருப்பவர்கள் அடுத்த சில மாதங்களில் இந்தியன் பேங்கின் க்ரெடிட் மற்றும் டெபிட் கார்ட்களை வாங்க வேண்டி இருக்கும். இப்படி எந்த வங்கி உடன் மற்ற வங்கிகள் இணைக்கப்படுகிறதோ அந்த வங்கியின் கார்டை புதிதாக மாற்றிக் கொள்ள வேண்டி இருக்கும்.
4. டெபாசிட் விவரங்கள்
பொதுவாக ஒரு வங்கியில் ஃபிக்ஸட் டெபாசிட் வைத்திருக்கிறோம் என்றால் அந்த வங்கியில் இருந்து ஃபிக்ஸட் டெபாசிட் வைத்திருப்பதற்கு சாட்சியாக அந்த வங்கி ஒரு சான்றிதழைக் கொடுக்கும். அதைத் தான் நாம் ஃபிக்ஸட் டெபாசிட் சான்றிதழ் என்கிர்றோம். இப்போது ஒருவர் ஆந்திரா வங்கியின் ஃபிக்ஸட் டெபாசிட் சான்றிதழை வைத்திருக்கிறார் என்றால் அவருக்கு அடுத்த சில மாதங்களில் யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியாவின் ஃபிக்ஸட் டெபாசிட் சான்றிதழை வாங்க அலைய வேண்டும்.
5. வட்டி மாறுபடலாம்
ஒருவர் ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸில் ஒரு எம் சி எல் ஆர் கணக்கில் வட்டி செலுத்திக் கொண்டு இருக்கிறார் என வைத்துக் கொள்வோம். இப்போது புதிதாக பஞ்சாப் நேஷனல் பேங்க் உடன் இணைந்த பின், ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸின் கடன்கள் கூட பஞ்சாப் நேஷனல் பேங்கின் கடன்கள் ஆகி விடும். ஆக பஞ்சாப் நேஷனல் பேங்கின் வட்டி விகித கணக்குகள் படித் தான் மீத கடன்களுக்கு வட்டி செலுத்த வேண்டி இருக்கும். வட்டி குறைந்தால் பரவாயில்லை. ஒருவேளை வட்டி அதிகரித்தால் கொஞ்சம் சிரமம் தானே..?
6. பங்குகள்
நீங்கள் அலஹாபாத் வங்கியின் பங்குகளில் முதலீடு செய்து வைத்து இருக்கிறீர்கள். இப்போது இந்தியன் வங்கி உடன் இணைத்த பின் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அலஹாபாத் வங்கி பங்குகளுக்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இந்தியன் வங்கிப் பங்குகள் கொடுக்கப்படும் எனச் சொல்வார்கள். அந்த விகிதம் எல்லோருக்கும் ஒத்துப் போய்விட்டது என்றால் பரவாயில்லை. சில நேரங்களில் எதிர்பார்த்த அளவை விட குறைவாக வந்தால் கிட்டத்தட்ட நட்டம் கண்டதாகத் தானே பொருள்படும். அது நடக்கவும் இணைப்பில் வாய்ப்பு இருக்கிறது..!
ஆக மக்களே வங்கி இணைப்பு முழுமையாக நடந்த பிறகு மேலே சொன்ன விஷயங்களை எல்லாம் கவனத்தில் எடுத்துக் கொண்டு விவரங்களை முழுமையாக மாற்றிக் கொள்ளுங்கள். நம்முடைய சிறிய அலட்சியம் கூட நமக்கு பெரிய நட்டத்தைக் கொடுத்து விடலாம். உஷார் மக்களே உஷார்.