இன்று நம்மில் பலரும் கிரெடிட் கார்ட் பயன்படுத்த ஆரம்பித்துள்ளோம். பயன்படுத்தும் அனைவரும் சரியாக பயன்படுத்துகிறோமா? என்றால் இல்லை எனலாம். சொல்லப்போனால் கிரெடிட் கார்டுகளை சரியாகப் பயன்படுத்துபவர்களை விட, இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் எனலாம்.
கிரெடிட் கார்டில் பலரையும் ஈர்க்கும் ஒரு விஷயம் 50 நாட்களுக்கு வட்டி என்பது கிடையாது என்பது தான். இது மிக கவர்ச்சிகரமான விஷயமாக பார்க்கப்பட்டாலும் கிரெடிட் கார்டு நிலுவையில் சரியான நேரத்தில் செலுத்தாத போது 45% வரையில் வட்டியுடன் சேர்த்து செலுத்த வேண்டியிருக்கும் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.
ஆக கிரெடிட் கார்டை மிக மிக சரியாக பயன்படுத்துவது அவசியமான ஒன்று. அப்படி உங்களால் சரியாக பயன்படுத்த முடியாது என்பவர்கள் தவிர்ப்பதே நல்ல விஷயம் எனலாம்.
கேஸ் அட்வான்ஸ் வேண்டாம்
அந்த வகையில் கிரெடிட் கார்டை பயன்படுத்தும் போது தவிர்க்க வேண்டிய சில விஷயங்களைப் பற்றி தான் இந்த கட்டுரையில் பார்க்க விருக்கின்றோம். முதலாவதாக நாம் பார்க்க விருப்பது கேஸ் அட்வான்ஸ்.
கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுப்பதை தவிர்ப்பது மிக நல்லது. அது நாம் செய்யும் மிகப்பெரிய தவறு என்று கூட கூறலாம். ஏனெனில் கிரெடிட் கார்ட் மூலம் பணம் எடுப்பதற்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதோடு நீங்கள் பணம் எடுத்த நிமிடத்தில் இருந்தே, உங்களுக்கு வட்டி போட ஆரம்பித்துவிடுவார்கள். இது ஆண்டுக்கு அதிகபட்சமாக 42% வரை கூட இருக்கலாம். அதோடு பணத்தை எடுத்த நாளில் இருந்து, அதனை திரும்ப செலுத்தும் தேதி வரையில் வட்டி வசூலிக்கப்படுகிறது. வட்டியை சரியாக செலுத்தாவிட்டாலும் அதற்கும் வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படுகிறது. அதில் கிரடிட் கார்டு மூலம் பணம் எடுப்பது சொந்த காசில் சூனியம் வைத்துக் கொள்வது போல் தான்.
நிலுவையில் பகுதியை செலுத்துவது?
பலரும் செய்யும் தவறுகளில் இன்று இதுவும் ஒன்று. ஒவ்வொரு மாதமும் கட்டணம் செலுத்தும் போதும், குறைந்தபட்ச தொகையை மட்டுமே செலுத்துவோம். இதனால் மூலம் நீங்கள் அதிக அளவில் கடன் வலையில் சிக்க இது வழிவகுக்கும். இதன் மூலம் நிலுவையில் உள்ள கடனுக்கு அதிக அளவிலான வட்டி கட்ட வேண்டிய அவசியத்திற்கு தள்ளப்படுவீர்கள். ஆக முடிந்த மட்டில் குறைந்தபட்ச தொகையை செலுத்தாமல் இருப்பது நல்லது. அப்படி கட்ட முடியாவிட்டால் அதனை மாத தவணை தொகையாக மாற்றிக்கொள்ளலாம். அப்படி மாற்றும் போது அதற்கு வட்டி விகிதம் என்பது சற்று குறைவு என சொல்லலாம்.
மாத தவணையாக மாற்றிக் கொள்ளுங்கள்
ஒட்டுமொத்தமாக தொகை கட்டாமல் அதற்கு வட்டி கட்ட வேண்டிய நிலையை விட மாதத் தவணையும் முறையாக கட்டுவதில் வட்டி விகிதம் குறைவு என்பதால், இது சற்றே நல்ல விஷயம் என்றே கூறலாம் ஆக நீங்கள் முடிந்த மட்டில் தொகையை விரைவில் திரும்ப செலுத்த பார்க்கலாம். அப்படி இல்லாவிட்டால் மாத தவணையாக மாற்றிக்கொள்ளலாம். இதன் மூலம் அதிக வட்டி விகிதத்தில் இருந்து நீங்கள் தப்பிக்க முடியும்.
தாமதமாக பணம் செலுத்த கூடாது?
இன்று நம்மில் பலரும் செய்யும் தவறு இதுதான். கிரெடிட் கார்டு கடன் பெற்ற பின்னர், செலுத்த வேண்டிய நிலுவை தொகையை சரியான நேரத்தில் செலுத்தாமல் காலம் தாழ்த்தி செலுத்துவது. இது உங்களது கிரெடிட் ஸ்கோரை மிக மோசமாக பாதிக்கும் என்பதோடு, அதிக வட்டியுடன் சேர்த்து செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவீர்கள். மேலும் கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையை செலுத்த வேண்டிய தேதி வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
உங்கள் கையில் இருக்கும்பட்சத்தில் முன்னதாக திட்டமிடலாம். பலநேரங்களில் செலுத்த வேண்டிய தேதி என்பது மறந்து போகலாம். இதனால் நீங்கள் சரியான நேரத்தில் உங்களது நிலுவையை செலுத்தாமல் கூட போகலாம். ஆக அதற்கேற்ப திட்டமிட்டு முன்னரே செலுத்துவதும் உங்களுக்கு பயனுள்ளதாக அமையும்.
அளவுக்கு மீறி செலவு செய்தல்
கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களில் பலரும் செய்யும் மிக மோசமான தவறுகளில் ஒன்று இதுதான். கிரெடிட் கார்டு கையில் இருக்கிறது அப்புறம் என்ன செலவினை பார்த்துக் கொள்ளலாம். பிறகு கடனை கட்டிக் கொள்ளலாம் என்று, தேவையில்லாத பொருட்களையும் வாங்கி தள்ளுவோம்.
குறிப்பாக பண்டிகை காலங்களில் பல சலுகைகள் கிடைக்கும். இதனால் சலுகையை மிஸ் செய்துவிடக்கூடாது என்பதற்காக உடனடி தேவையில்லாத பொருட்களை வாங்கி, மேலும் கடனாளியாக மாற இது வழிவகுக்கும்.
கிரெடிட் ஸ்கோர் குறையலாம்
கிரெடிட் கார்டு மூலம் வாங்கி அதிகளவில் செலவு செய்து விடுவோம். ஆனால் சரியான நேரத்தில் கடனை கட்டாவிட்டால், உங்களது கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆக உங்களது வரவு செலவுத்திட்டத்தில் அவசியமான பொருட்களை மட்டுமே பார்த்து வாங்குவது மிக நல்ல விஷயம். இது கிரெடிட் கார்டு விஷயத்தில் மட்டும் அல்ல, எல்லாவிதமான நிதி பரிவர்த்தனைகளிலும் பொருந்தும்.
மிக கவனமாக இருங்கள்
இன்றைய காலகட்டங்களில் ஒருவரே பல கார்டுகளை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இது கொஞ்சம் அபாயகரமான விஷயம் என்றும் கூறலாம். ஏனெனில் எந்த நேரத்தில் எந்த கார்டை பயன்படுத்துவது? எந்த காட்டில் என்ன சலுகைகள்? எவ்வளவு கிடைக்கும்? இதில் வட்டி விகிதம்? வருடாந்திர கட்டணம் என்ன? இது எல்லாம் பார்த்த பிறகே நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட காடுகளை பயன்படுத்தத் தொடங்கலாம்.
சலுகைகளுக்கு மயங்காதீர்கள்
அப்படி இல்லாவிட்டால் இதுவும் உங்களது கிரெடிட் ஸ்கோர் குறைய காரணமாக அமைந்துவிடும். சலுகைகள், ரீவார்டு பாயிண்டுகள், கேஸ் பேக் ஆஃபர்கள் என்பதற்கு மயங்கி விடாமல், கிரெடிட் கார்டு வரம்பை அறிந்து பயன்படுத்தினால், உங்களது கிரெடிட் ஸ்கோர் குறையாமல் இருக்கும். அதே நேரத்தில் உங்களது கடனும் அதிகரிக்காமல் இருக்கும்.
கிரெடிட் கார்டு ஸ்டேட்மென்ட்
கிரெடிட் கார்டை ஸ்வைப் செய்து விட்டோம். பொருளை வாங்கி விட்டோம். கடனை கட்டி விட்டோம் என்று இருந்தால் மட்டும் போதாது, அடிக்கடி உங்களது கிரெடிட் கார்டு பரிவர்த்தனை ஸ்டேட்மென்ட்களையும் சரி பார்க்கவும். இதில் உங்களது பில்லிங் முறையில் ஏதேனும் தவறுகள் நேர்ந்திருக்கலாம். கட்டணங்கள் பலவும் விதிக்கப்பட்டு இருக்கலாம். அப்படி விதிக்கப்பட்டிருந்தால் எதற்காக கட்டணம் விதிக்கப்பட்டிருக்கிறது. என்ன பிரச்சினை என்பதை ஒவ்வொரு மாதமும் பில் கட்டிய பிறகு பார்க்க வேண்டும். இது உங்களது பணத்தை சேமிக்க உதவுவதோடு, உங்களது கிரெடிட் ஸ்கோர் குறையாமல் பார்த்துக் கொள்ளவும் உதவும்.
பேலன்ஸ் டிரான்ஸ்பர்
ஒன்றுக்கும் மேற்பட்ட காடுகளை பயன்படுத்துபவர்கள் பலரும் செய்யும் தவறு எனில், அது பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் தான். ஒரு கிரெடிட் கார்டில் கட்டணத்தை செலுத்த முடியாத பட்சத்தில். ஒரு சிலர் மற்ற கிரெடிட் கார்டில் இருந்து செலுத்தவேண்டிய நிலுவை தொகை செலுத்துவார்கள். இது சரியான முறையில் பயன்படுத்தப்பட்டால் பிரச்சனை ஏதும் இல்லை. அப்படி சரியான நேரத்தில் உங்களது நிலுவையை செலுத்த தவறும் பட்சத்தில், அதற்கு அதிக அளவிலான வட்டி விகிதம் விதிக்கப்படலாம்.
மிக கவனமுடன் செயல்படுங்கள்
ஆக கவனமுடன் மிக பாதுகாப்பாக கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவது மிக அவசியம். இது உங்களது பணத்தை சேமிக்க உதவுவதோடு மட்டுமல்லாமல், உங்களது கிரெடிட் ஸ்கோர் குறையாமலும் பராமரிக்க உதவும் என்பதையும் கவனத்தில் கொண்டு செயல்படுவது நல்லது. இது பிற்காலத்தில் உங்களது வங்கிக் கடன் பரிவர்த்தனையில் எதிரொலிக்கும் என்பதை மனதில் வைத்துக் கொண்டு செயல்படுவது மிக அவசியமான ஒன்று.