கிரெடிட் கார்டு என்பது வாழ்க்கையில் ஒரு சிலருக்கு நண்பனாகவும், பலருக்கு எதிரியாகவும் மாறியுள்ளது என்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள்.
கிரெடிட் கார்டை பயன்படுத்தும் விதத்தில் சரியாக பயன்படுத்தினால் அது உங்களுக்கு உற்ற தோழனாக இருக்கும் என்றும் சரியாக பயன்படுத்தவில்லை என்றால் அது உங்கள் எதிரியாக மாறிவிடும் என்றும் பொருளாதார அறிஞர்கள் எச்சரித்துள்ளனர்.
எனவே கிரெடிட் கார்டை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு வாங்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் கிரெடிட் கார்டு வாங்காமல் இருப்பதே நல்லது என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
கிரெடிட் கார்டு
கிரெடிட் கார்டு என்பது தற்போது மிக எளிதில் கிடைக்கும் ஒரு விஷயமாக மாறிவிட்டது. சாலையில் செல்லும் நபர்களிடம் கூட கிரெடிட் கார்ட் வேண்டுமா என்று கேட்கும் நிலைமைக்கு கிரெடிட் கார்டு தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் கிரெடிட் கார்டை வாங்குவது மிகவும் எளிது என்றாலும் அதை சரியான முறையில் பயன்படுத்துவது என்பது மிகவும் கடினமானது என்பதை பலர் புரிந்து கொள்ளாமல் சிக்கலில் மாட்டி கொண்டுள்ளனர்.
ஆகாஷ்
அந்த வகையில் 23 வயது ஆகாஷ் என்பவர் தனது அலுவலகத்துக்கு வெளியே சிகரெட் புகைத்து கொண்டிருந்தபோது ஒரு இளைஞன் அவரை அணுகி கிரெடிட் கார்டில் நீங்கள் ஆர்வமாக இருக்கிறீர்களா? என்று கேட்டுள்ளார். அப்போது கிரெடிட் கார்டு நீங்கள் வாங்கினால் உடனடியாக 10 ஆயிரம் போனஸ் புள்ளிகள் கிடைக்கும் என்றும் கூறினார். உடனே ஆர்வத்துடன் ஆகாஷ், கிரெடிட் கார்டு பெற நான் தகுதியானவரா? என கேட்டதற்கு உங்களது மாத சம்பளம் 25,000 இருந்தால் போதும் என்றும், ஆறுமாதம் பே ஸ்லிப் இருந்தால் உங்களுக்கு உடனடியாக கிரெடிட் கார்டு கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
சிக்கல்
இதனை நம்பி ஆகாஷ் கிரெடிட் கார்டு வாங்கிய நிலையில் ஒரு சில மாதங்களில் அவருக்கு 70 ஆயிரம் ரூபாய் நிலுவைத்தொகை இருந்தது என்றும் அதற்காக அவர் ஆயிரக்கணக்கில் வட்டிகட்டி வருமானத்தின் பெரும்பகுதியை இழந்தார் என்றும் கூறப்படுகிறது. இதனை அடுத்து அவரது குடும்பத்தினர் அவரது அனைத்து கடன்களையும் கட்டி அவரை மீட்டு வந்தனர். ஆகாஷ் கிரெடிட் கார்டை தவறாக பயன்படுத்தியதற்கான உதாரணம்.
அதிதி
இதேபோல் அதிதி என்பவர் மும்பையில் உள்ள விளம்பர நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அவருக்கு திடீரென ஒரு பணப்பிரச்சனை இருந்தபோது கிரெடிட் கார்டு வாங்க முன்வந்தார். அவரது சம்பளம் 27 ஆயிரம் ரூபாயாக இருந்த நிலையில் கிரெடிட் கார்டை மிகச்சரியாக பயன்படுத்தி அவர் தனது சம்பளத்தின் பெரும்பகுதியை சேமித்து ஒவ்வொரு மாதமும் தவறாமல் கிரெடிட் கார்டில் வாங்கிய கடன் பணத்தை கட்டியுள்ளார்.
வேறுபாடு
அம்மாவுக்கு புடவை வாங்குவது உட்பட ஒருசில முக்கிய செலவுகளுக்கு மட்டும் கிரெடிட் கார்டை பயன்படுத்தினார். கிரெடிட் கார்டை அவர் மிகச்சரியான பயன்படுத்தியதால் தற்போது அவர், கிரெடிட் கார்டு இல்லாமல் தன்னுடைய வாழ்க்கை முழுமை அடையவில்லை என்று தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் ஆகாஷ் மற்றும் அதிதி ஆகிய இருவருக்கும் உள்ள ஒரு வேறுபாடு அவர்கள் கிரெடிட் கார்டை பயன்படுத்திய முறை என்பது குறிப்பிடத்தக்கது.
பயன்படுத்தும் விதம்
முதல் நபர் கிரெடிட் கார்டில் தேவையில்லாத பொருட்களை வாங்கி அதன்பின் கஷ்டப்பட்டவர், இரண்டாவது நபர் தேவையான பொருளை மட்டும் வாங்கி, வாங்கிய கடன்களை சரியான விதத்தில் கட்டியவர். எனவே கிரெடிட் கார்டு என்பது பயன்படுத்துவரின் மனநிலை, நிதி கையாளுகை ஆகியவற்றை பொருத்தது ஆகும்.
முழு தொகை
கிரெடிட் கார்டு பெற்றவர்கள் நிலுவை தொகையை முன்னதாகவே சரியாக செலுத்த வேண்டும். கிரெடிட் கார்டில் வாங்கிய கடனுக்கு 45 நாட்கள் வரை வட்டி இல்லாமல் செலுத்தி கொள்ளும் காலம் உண்டு. நிலுவை தொகையை கட்டும் கடைசி தேதிக்கு முன்பாக கிரெடிட் கார்டு முழு தொகையையும் செலுத்தி விட்டால் தாமத கட்டணம் உள்பட அனைத்து வகை வட்டியில் இருந்தும் தப்பித்துக் கொள்ளலாம். ஆனால் நிலுவை தொகையை கட்டாமல் இருந்தால் உங்களுடைய கடன் மதிப்பு பெரிதாகி விரைவில் சிக்கலில் மாட்டிக்கொள்வீர்கள்.
பணம் எடுக்க வேண்டாம்
அதேபோல் கிரெடிட் கார்டில் பணதை எடுக்க வேண்டாம் என்பது முக்கியமான அம்சம் ஆகும். ஏனெனில் ஒவ்வொரு முறை நீங்கள் கிரெடிட் கார்டு மூலம் பணத்தை எடுத்தால் அதற்கு என ஒரு சேவைக்கட்டணம் மற்றும் வரிகள் விதிக்கப்படும் என்பதும் அதேபோல் பணம் எடுத்தால் அதற்கு சலுகை காலம் இல்லை என்பதும் பணம் எடுத்த நாளிலிருந்து நீங்கள் வட்டி கட்ட வேண்டும் என்பது குறிப்பிடதக்கது.
நண்பனா? எதிரியா?
மொத்தத்தில் கிரெடிட் கார்டு என்பது நாம் பயன்படுத்தும் விதத்தில்தான் உள்ளது என்பதும் அதை நண்பனாக்கிக் கொள்வதோ? எதிரியாக்கி கொள்வதோ? நம்முடைய கையில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.