ஆர்பிஐ கடந்த சில வருடங்களாக தொடர்ந்து தன் ரெப்போ ரேட் வட்டி விகிதங்களைக் குறைத்துக் கொண்டே வருகிறார்கள்.
சி என் பி சி செய்தியில் சொல்லப்பட்டு இருக்கும் தரவுகள் படி, கடந்த ஜனவரி 2014-ல் 8.0 சதவிகிதமாக இருந்த ரெப்போ ரேட், இன்று வெறும் 4 சதவிகிதமாக இருக்கிறது.
தற்போது எஸ்பிஐ டேர்ம் லோன் அடிப்படையில் வீட்டுக் கடன் 7 சதவிகிதம் முதல் கிடைக்கின்றன. இவ்வளவு குறைவான வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன் கிடைக்கும் இந்த் நேரத்தில் வீட்டுக் கடன் வாங்கப் போகிறீர்களா..? அப்படி என்றால், இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க.
1. வேலை பாதுகாப்பா இருக்கா?
இன்றைய தேதிக்கு, பலரின் வேலை எப்போது பறி போகும் என்றே தெரியவில்லை. இந்த சூழலில் வட்டி குறைவாக இருக்கிறது என்கிற ஒரே காரணத்துக்காக 15 - 20 வருடங்கள் இ எம் ஐ கட்ட தயாராகும் முன், அடுத்த 15 - 20 வருடங்களுக்கு வேலையில் எந்த பாதிப்பும் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். வேலைக்கு உத்திரவாதம் இல்லை என்றால், தயவு செய்து ஹோம் லோன் வேண்டாம்.
2. கடன் ஒத்திவைப்பு செய்தீர்களா?
சமீபத்தில், ஆர்பிஐ இ எம் ஐ மாரிடோரியம் கொடுத்தது. ஏற்கனவே வாங்கி இருக்கும் கடன்களுக்கு, அதை பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்றால், வருங்காலத்தில் ஏற்படப் போகும் நிதி நெருக்கடிகளை எப்படிச் சமாளிப்பீர்கள். அதுவும் வீட்டுக் கடன் போன்ற, பெரிய இ எம் ஐ செலுத்த வேண்டிய கடன் பிரச்சனைகளை எப்படி சமாளிப்பீர்கள்.
3. அவசர தேவைக்கு பணம் இருக்கா?
உங்களுக்கோ அல்லது உங்கள் குடும்பத்தினர்களுக்கோ, திடீரென கொஞ்சம் அதிகம் மருத்துவ செலவு செய்ய வேண்டி இருக்கிறது என்றால் கையில் பணம் இருக்கிறதா? குழந்தைகளின் திடீர் கல்விச் செலவுகள் வந்தால் சமாளித்துவிடுவீர்களா? இதற்கு எல்லாம் தயார் இல்லை என்றால், வீட்டுக் கடனை கைவிடுவது நல்லது.
4. வாடகைக்கா அல்லது குடியிருக்கவா?
ஏற்கனவே ஒரு வீடு இருக்கிறது. ஆனால், இரண்டாவதாக ஒரு வீட்டை முதலீட்டுக்காக வாங்குகிறீர்கள் என்றால் சில விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்ளுக்கள்.
1. நீங்கள் நினைக்கும் போது நினைத்த விலைக்கு வீடுகளை விற்க ஆள் கிடைப்பது சிரமம்.
2. Work from home கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. எனவே வாடகை வருமானமும் எதிர்காலத்தில் குறைய வாய்ப்பு இருக்கிறது.
கவனம் மக்களே
இந்த கேள்விகளுக்கு எல்லாம் உங்களிடம் ஒரு தெளிவான பதில் இருந்தால் மகிழ்ச்சி. ஆனால் வட்டி விகிதம் குறைவாக இருக்கிறது என்கிற ஒரே விஷயத்துக்காக வீட்டுக் கடன் வாங்கி மாட்டிக் கொள்ளாதீர்கள்.
கடன் நெருப்பைப் போன்றது. சரியாகப் பயன்படுத்தினால் நமக்கு நல்லது, தவறாக பயன்படுத்தினால் அது நம்மையே அழித்துவிடும் வல்லைமை கொண்டது.