மத்திய அரசு அறிவித்த நல்ல திட்டங்களில் ஒன்று தான் இந்த அடல் பென்ஷன் யோஜனா (Atal pension Yojana - APY). இந்த திட்டம் அமைப்பு சாரா துறையில் வேலை செய்பவர்களுக்கு, ஓய்வுக்காலத்திற்கு பின்பு பயனளிக்கும் விதமாக கொண்டு வரப்பட்ட ஒரு திட்டமாகும்.
இந்த திட்டம் அறிவித்து சில ஆண்டுகள் தான் ஆகியுள்ளது. எனினும் இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அரசின் இந்த அசத்தலான அடல் பென்ஷன் திடத்தில் இதுவரை 2.75 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்கள் இணைந்துள்ளனர். ஆக இதிலிருந்தே முதலீட்டாளர்கள் தங்களது ஓய்வூதியத் திட்டத்திற்கு எவ்வளவு முன்னுரிமை அளிக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.
APYல் புதிய சந்தாதாரர்கள்
நடப்பு நிதியாண்டில் இது வரையில் 52 லட்சம் புதிய சந்தாதாரர்கள் சேர்ந்துள்ளனர். ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மட்டும் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட APY வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளது. இந்தியாவினை பொறுத்த வரையில் ஆரம்ப காலகட்டங்களில் அரசு பணியில் இருந்தாலே ஒரு தனி மரியாதை தான். ஏனெனில் ஓய்வுக்காலத்திற்கு பின்பும் ஒரு கணிசமான வருமானம் இருக்கும்.
முதியோர்களுக்கு வரப்பிரசாதம்
ஆக அவர்கள் வயதான காலகட்டத்தில் கூட, வரும் ஓய்வூதியத்தினை வைத்து சிறப்பாக யாரையும் சாராமல் வாழ்ந்து கொண்டு இருப்பர். ஆனால் அரசின் இந்த ஓய்வீதிய திட்டமானது நடுத்தர வர்க்கத்தினருக்கு, குறிப்பாக அரசு பணியில் இல்லாதவர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக வந்துள்ளது.
என்னென்ன சலுகைகள்?
ஏனெனில் அரசு பணியில் இல்லாதவர்களுக்கும் கூட, அரசின் இந்த ஓய்வூதிய திட்டம் மிகவும் நம்பிக்கையை கொடுத்துள்ளது என்று கூறலாம். சரி வாருங்கள் இந்த திட்டத்தில் நாம் எப்படி இணையலாம்? இதில் என்னென்ன சலுகைகள் உள்ளன? முதலீட்டாளர்களுக்கு என்னென்ன நன்மைகள் உண்டு. என்னென்ன ஆவணங்கள் தேவை? தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
அடல் பென்சன் திட்டத்தில் யாரெல்லாம் இணையலாம்?
அரசின் இந்த அடல் ஓய்வூதிய திட்டத்தின் கீழ், 18 முதல் 40 வயது வரையிலான எந்தவொரு இந்திய குடிமகனும் ஒரு கணக்கைத் திறக்கலாம். இந்தத் திட்டத்தில் வாடிக்கையாளர் தான் கணக்கு வைத்துள்ள வங்கி கிளை அல்லது தபால் நிலையத்திலிருந்து கணக்கைத் தொடங்கிக் கொள்ள முடியும்.
எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்?
இந்த ஓய்வூதிய திட்டத்தின் கீழ் இணைந்த சந்தாதாரர் தனது கணக்கில் அளிக்கும் பங்களிப்பின் அடிப்படையில் 60 வயதிலிருந்து ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரையில் உத்தரவாத ஓய்வூதியமாக பெறலாம். ஒரு வேளை சந்தாதாரரருக்கு மரணம் ஏற்பட்டால், சந்தாதாரரின் துணைக்கு இந்த ஓய்வூதியம் கிடைக்கும். துணை இல்லையென்றாலும், நாமினிக்கு இந்த ஓய்வூதியத் தொகை வழங்கப்படும்.
ஓய்வூதிய கணக்கில் எப்படி செலுத்துவது?
ஒருவர் இந்த ஓய்வூதிய திட்டத்தில் இணைந்த பின், மாதம் செலுத்த வேண்டிய சந்தா தொகையை வங்கிக் கணக்கில் இருந்து ஆட்டோ டெபிட் மூலம் செலுத்தலாம். இதற்கு ஆதாரமாக உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு மெசேஜ் வரும். பணம் செலுத்தினாலும், பணம் எவ்வளவு பேலன்ஸ் உள்ளது என்பது பலவும் எஸ்எம்எஸ் ஆக வரும். இதன் மூலம் நாம் நமது இருப்பினையும் தெரிந்து கொள்ளலாம்.
எப்போது பணம் எடுப்பார்கள்?
இந்த திட்டத்தில் நீங்கள் எப்போது முதல் முறையாக இணைகிறீர்களோ? அதே தேதியில் அடுத்தடுத்த மாதங்களில் பணம் செலுத்த வேண்டியிருக்கும். உதாரணத்திற்கு நீங்கள் ஜனவரி 5 அன்று இந்த திட்டத்தினை துவங்குகிறீர்கள் என்றால், ஜனவரி 5 அன்று தவணையை செலுத்த வேண்டியிருக்கும்.
இடையில் தொகையினை மாற்றம் செய்யலாமா?
சரி ஆரம்பத்தில் நீங்கள் 1000 ரூபாய் தொகையினை செலுத்தியுள்ளீர்கள். இந்த தொகையினை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ முடியுமா? என்றால் நிச்சயம் முடியும். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் மட்டுமே இந்த தொகையில் நீங்கள் மாற்றம் செய்து கொள்ளலாம். ஆக நீங்கள் ஏப்ரல் மாதத்தில் உங்களது தொகையினை கூட்டவோ அல்லது குறைக்கவோ முடியும்.
அவசரத் தேவைக்கு எடுத்துக் கொள்ள முடியுமா?
அடல் பென்ஷன் திட்டத்தில் சந்தாதாரர் 60 வயதுக்கு பின் இறந்து விட்டால், அவரது இறப்பு சான்றும், இந்த திட்டத்தில் இணைந்ததற்கான சான்றிதழ், ஆதார் அட்டை, நாமினியின் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை, பதிவு செய்யப்பட்ட வங்கிக் கிளையில் கொடுத்தால், வங்கி அந்த விவரங்களை PFRDA-வுக்கு அனுப்பும். இந்த நகல்கள் சரிபார்க்கப்பட்டு பின்னர், பென்ஷன் தொகையை நாமினிக்கு வழங்கும்.
செலுத்திய தொகை மட்டுமே கிடைக்கும்?
ஒரு வேளை சந்தாதாரர் 60 வயதுக்கு முன்னரே இறந்தால் அல்லது மிக மோசமான நோய் காரணமாக பணத்தினை எடுக்க வேண்டும் என்றால். சந்தாதாரர் எவ்வளவு தொகையினை செலுத்தினாரோ அதனை மட்டும் பெற்றுக் கொள்ள முடியும். இதற்கான சரியான ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு இடையில் வழங்கப்படும்.
இந்த திட்டத்தில் உள்ள சலுகை?
இந்த திட்டத்தின் சிறப்பம்சமே, ஒரு சந்தாதாரர் 60 வயதுக்கு பின்னர் எத்தனை ஆண்டுகள் வாழ்கிறாரோ, அத்தனை ஆண்டுகள், சந்தாதாரர் கேட்டிருந்த தொகை முழுமையாக கிடைக்கும். ஒரு வேளை சந்தாதாரர் இறந்து விட்டால், நாமினிக்கு இந்த தொகை கிடைக்கும்.
நாமினியை மாற்ற முடியுமா?
நீங்கள் உங்களது ஓய்வூதிய திட்டத்தில் குறிப்பிட்டிருந்த நாமினி துரதிஷ்டவசமாக இறந்துவிட்டால், அவருக்கு பதிலாக வேறு ஒரு நாமினியை நீங்கள் மாற்றிக் கொள்ள முடியும். நீங்கள் எந்த வங்கியில் கணக்கை தொடங்கினீர்களோ, அதே வங்கியில் சென்று சரியான ஆவணங்களை கொடுத்து மாற்றிக் கொள்ளலாம்.
வங்கியினை மாற்றிக் கொள்ளலாமா?
நீங்கள் ஆரம்பத்தில் கனரா வங்கியில் பென்ஷன் கணக்கினை துவங்கியிருந்தால், பின்னர் இதனை வேறு வங்கிக் கிளைக்கும் மாற்றிக் கொள்ள முடியும். உண்மையில் அரசின் இந்த திட்டமானது 60 வயதிற்கு மேல் உள்ள அனைவருக்கும் அவசியமான ஒன்று தான். உண்மையில் வயதான காலத்திலும் நாம் யாரையும் சாரமல் வாழ, இது ஒரு அம்சமான திட்டமே.