தங்கத்திற்கு இணையான வளர்ச்சியை அளித்து வந்த கிரிப்டோகரன்சி உலகின் மிக முக்கிய நாணயமான பிட்காயின் கடந்த 10 நாட்களில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 10,000 டாலருக்கும் அதிகமாகச் சரிந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியில் மட்டும் அல்லாமல் பெருமளவிலான முதலீட்டையும் லாபத்தை இழந்துள்ளனர்.
இதற்கு முக்கியக் காரணம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடந்தக் கலவரம் தான் அடிப்படை. அப்படி என்ன ஆச்சு வாங்கப் பார்ப்போம்.
அமெரிக்கா நாடாளுமன்ற தாக்குதல்
அமெரிக்கா நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட தாக்குதல், கலவரம் அமெரிக்காவை மட்டும் அல்லாமல் உலக நாடுகளையும் அதிர்ச்சி அடையவைத்தது. இந்தக் கலவரம் ஏற்படுவதற்கு முன்பாகச் சுமார் 5,00,000 டாலர் மதிப்பிலான நிதி டிரம்ப் கட்சி ஆதரவாளர்களுக்கு பிட்காயின் வாயிலாகப் பரிமாற்றம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது அமெரிக்காவில் மிகப்பெரிய பிரச்சனையாக வெடித்தது.
ஜெனட் யெலன்
இதன் எதிரொலியாக அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அரசின் கருவூல செயலாளரான ஜெனட் யெலன் தவறான செயல்களுக்குப் பிட்காயின் பயன்படுத்துவது வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், பிட்காயின் பயன்பாட்டையும் அதன் வர்த்தகத்தையும் கட்டுப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.
11% வரை சரிவு
இவரின் அறிவிப்பிற்குப் பின் பிட்காயின் வியாழக்கிழமை வர்த்தகத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 11 சதவீதம் வரையில் சரிந்து முதலீட்டாளர்களை அதிர்ச்சியைக் கொடுத்தது. ஆனால் அமெரிக்க நாடாளுமன்ற கலவரம் அதற்குப் பின் ஜனவரி 10ஆம் தேதி வெளியான நிதி பரிமாற்ற தகவல்கள் மூலம் பிட்காயின் மதிப்பு சரியத் துவங்கியுள்ளது.
Double spend பிரச்சனை
இதேவேளையில் பிட்காயின் வர்த்தகப் பரிமாற்ற சந்தையில் Double spend பிரச்சனை எழுந்துள்ளது. Double spend என்றால் ஒரே பிட்காயினை இரண்டு முறை பயன்படுத்துவதாகும். இந்தப் பிரச்சனையைப் பிட்காயினை உருவாக்கிய Satoshi Nakamoto 2009ஆம் ஆண்டே சரி செய்து விட்டதாக ஆய்வுக்கட்டுரை வெளியிட்டு இருந்த நிலையிலும், தற்போது மீண்டும் இப்பிரச்சனை எழுந்துள்ளது பிட்காயின் முதலீட்டாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தான் பிரச்சனை
சுருக்கமாக ஒரே நாணயத்தை வைத்து இரண்டு இடத்தில் பரிமாற்றம் செய்வது, அதாவது 50000 ரூபாய் பணத்தை வைத்துக்கொண்டு 1,00,000 ரூபாய்க்கு வர்த்தகம் செய்வது. இது நாணயத்தின் மதிப்பையும் வர்த்தகத்தையும் பெருமளவில் பாதிக்கும்.
28,845.31 டாலர் வரையில் சரிவு
இந்த இரண்டு காரணத்திற்காகவே பிட்காயின் மதிப்பு கடந்த 10 நாட்களில் 10,000 டாலர் வரையில் சரிந்துள்ளது. இந்தச் சரிவின் மூலம் பிட்காயின் மதிப்பு தனது உச்ச அளவான 41,940 டாலரில் இருந்து 28,845.31 டாலர் வரையில் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தங்கம் விலை உயர்வு
இதன் எதிரொலியாகப் பிட்காயின் வளர்ச்சிக்குப் போட்டியாக இருந்த தங்கம் விலை நடப்பு வாரம் முழுக்கத் தொடர் உயர்வைச் சந்தித்து வருகிறது. இதற்கு ஏற்றார் போல் இந்தியாவில் பட்ஜெட் அறிக்கையும், அமெரிக்காவில் பொருளாதார ஊக்கத் திட்டமும் நடைமுறைப்படுத்தும் நிலையில் முதலீட்டுச் சந்தையில் பெரும் மாற்றம் ஏற்பட்டு உள்ளது.