இந்திய அரசு சமுக நலன் கருதி பல்வேறு விதமான திட்டங்களை வழங்கி வருகின்றது. அதில் ஒன்று தான் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டம்.
இந்த திட்டத்தில் வெறும் 330 ரூபாய் பிரிமீயம் செலுத்தினால் போதுமானது. இதன் மூலம் 2 லட்சம் ரூபாய் க்ளைம் செய்து கொள்ள முடியும்.
இந்த திட்டத்தில் 18 வயது முதல் 50 வயதுள்ளவர்கள் எடுக்க முடியும். இந்த திட்டத்தினை வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் தான் எடுக்க முடியும்.
ஜீவன் ஜோதி பீமா யோஜனா இன்சூரன்ஸ்
பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டம் என்றால் என்ன? இதில் யாரெல்லாம் இணைந்து கொள்ளலாம். என்னென்ன ஆவணங்கள் கொடுக்க வேண்டும். மற்ற விவரங்கள் என்ன வாருங்கள் பார்க்கலாம். பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டம் கடந்த 2015ம் ஆண்டு பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட ஒரு இன்சூரன்ஸ் திட்டமாகும்.
எவ்வளவு க்ளைம் செய்யலாம்?
அரசின் இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் வருடத்திற்கு 330 ரூபாய் பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும். இந்த பிரீமியம் ஒவ்வொரு ஆண்டும் உங்களது வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக எடுத்துக் கொள்ளப்படும். ஓரு வேளை பாலிசிதாரர் இறந்து விட்டால், இந்த திட்டத்தின் மூலம் 2 லட்சம் ரூபாய் க்ளைம் செய்து கொள்ள முடியும்.
யாரெல்லாம் இணையலாம்?
வங்கி கணக்கு வைத்துள்ள 18 வயது முதல் 50 வயது வரையிலான எவரும், இந்த திட்டத்தில் இணைய முடியும். 50 வயது நிறைவடைதற்கு முன்பு இந்த திட்டத்தில் இணைந்தால், தொடர்ந்து பிரீமியம் செலுத்தி வருபவர்கள் 55 வயது வரை ஆயுள் காப்பீட்டினை பெற்றுக் கொள்ளலாம்.
எப்போது பிரீமியம் செலுத்த வேண்டும்?
அரசின் இந்த காப்பீட்டுத் திட்டமானது ஜூன் 1ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இந்த பிரீமிய தொகையினை எந்த வங்கியில் நீங்கள் இணைகிறீர்களோ அங்கு செலுத்த வேண்டும். பெரும்பாலும் வங்கிகள் ஆட்டோமேட்டிக் டெபிட் மூலம் இந்த திட்டத்தின் பிரீமியத்தினை டெபிட் செய்து கொள்கின்றன.
ஒருவர் எத்தனை பாலிசி?
உங்களுக்கு பல வங்கிகளில் சேமிப்பு கணக்கு இருக்கலாம். ஆனாலும் நீங்கள் அனைத்து வங்கிகளிலும் இந்த திட்டத்தினை தொடங்க முடியாது. ஏனெனில் ஒருவருக்கு இந்த திட்டத்தின் மூலம் ஒரு பாலிசி தான் எடுக்க முடியும். ஆக இந்த திட்டத்திற்கு தகுதியான ஒருவர், உங்களுக்கு அருகில் உள்ள ஒரு வங்கி மூலம் இணைந்து பயன் பெற்றுக் கொள்ளலாம்.
எவ்வாறு க்ளைம் செய்வது?
இந்த பாலிசி மூலம் க்ளைம் பெற வேண்டுமெனில், இதற்காக நாமினி சம்பந்தபட்ட வங்கியினை அணுகி, உங்களது பாலிசி எண் மற்றும் வங்கி கணக்கு வைத்திருந்தவர் பெயரை கூறலாம். அதோடு க்ளைம் விண்ணப்பத்தினை பெற்று, தேவையான விவரங்களுடன் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் கொடுக்கலாம். அப்படி இல்லையெனில் அனைத்து ஆவணங்களையும் வங்கி பெற்றுக் கொண்டு, இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் சமர்பிக்கும்.
என்னென்ன ஆவணங்கள் தேவை?
க்ளைம் செய்ய இறப்பு சான்று, மருத்துவமனை ரசீது, (Discharge Receipt) போட்டோ, கேன்சல் செய்யப்பட்ட செக் லீப், நாமினியின் வங்கிக் கணக்கு என பல சம்பந்தப்பட்ட ஆவணங்கள் கொடுக்க வேண்டும். இன்சூரன்ஸ் நிறுவனம் உங்களது ஆவணங்களை சரிபார்த்து, 30 நாட்களுக்குள் உங்களுக்கு க்ளைம் செய்து கொடுக்கும்.
FY2021ம் ஆண்டில் க்ளைம் விகிதம்
அந்த வகையில் கடந்த 2020 - 21ம் நிதியாண்டில் 56,716 பாலிசிகள் க்ளைம் செய்துள்ளதாகவும், இதன் மூலம் 1,134 கோடி ரூபாய் இறப்பு பலன் கொடுத்துள்ளதாகவும் தரவுகள் கூறுகின்றன. இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் முந்தைய ஆண்டில் 42,977 பாலிசிகள் க்ளைம் செய்ததாகவும், அதன் மூலம் 859.54 கோடி ரூபாய் இறப்பு பலன் கொடுத்துள்ளதாகவும் தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.
நிதி ரீதியில் சப்போர்ட்
கடந்த ஆண்டில் கொரோனாவின் காரணமாக இறப்பு அதிகரித்த நிலையில், இந்த க்ளைம் விகிதமும் அதிகரித்துள்ளது. இது நடப்பு ஆண்டில் இன்னும் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
உண்மையில் சாமனிய மக்களுக்கு இது நெருக்கடியான நேரத்தில் உதவும். துரதிஷ்டவசமாக பாலிசிதாரர் இறந்தாலும், நிதி ரீதியாக குடும்பத்திற்கு சப்போர்ட்டாக இருக்கும்.