வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை காரணங்களுக்காக ரிசர்வ் வங்கி, ஜூலை 1 முதல் கார்டு டோக்கனைசேஷன் முறையை நடைமுறை படுத்த உள்ளது.
இது எதற்காக அமல்படுத்தப்பட உள்ளது. இதனால் யாருக்கு என்ன பயன். இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.
ஜூலை 1 முதல் அமலுக்கு வரவுள்ள டோக்கனைசேஷன் முறையானது, வாடிக்கையாளர்களின் கார்டு பரிவர்த்தனைகளை நடத்தும் முறையை மாற்றும் வகையில் அமைந்துள்ளது.
வளர்ந்து வரும் தொழில்நுட்பம்
இன்றைய காலகட்டத்தில் தொழில் நுட்பம் என்பது அனைத்து துறைகளிலும் உட்புகுந்துள்ளது. இது மக்களின் வேலைகளை எளிதில் செய்ய பயன்படுவதுடன், நிதி ரீதியாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்கிறது. எனினும் இதிலும் சில பிரச்சனைகள் உள்ளன. குறிப்பாக ஆன்லைன் மூலமாகவோ அல்லது யுபிஐ ஐடி, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலமாக ஷாப்பிங் செய்வது அதிகரித்துள்ள்ளது.
விவரங்களை சேமிக்க கூடாது?
இவ்வாறு ஒரு வாடிக்கையாளர்கள் ஷாப்பிங் செய்கிறார்கள் எனில், அவர்களின் விவரங்களையும், வங்கி சார்ந்த விவரங்களையும் ஷாப்பிங் தளங்கள் சேமிக்கின்றன. இது தவறாக பயன்படுத்தப்படவும் வாய்ப்பிருக்கிறது. ஆக இந்த தவறுகளை களையத் தான் ரிசர்வ் வங்கி, எந்தவொரு தளமும் வாடிக்கையாளர்களின் விவரங்களை சேகரிக்க கூடாது என உத்தரவிட்டுள்ளது.
நீட்டிக்கப்பட்ட அவகாசம்
அதுமட்டும் அல்ல கார்டின் கார்டு ஆன் ஃபைல் டோக்கனைசேஷன் செய்ய வாணிகருக்கு ஒரு நிலையான அறிவுறுத்தலை வழங்கவும், அதன் மூலம் உருவாக்கப்பட்ட டோக்கனை பயன்படுத்தி பரிவர்த்தனையை செய்யவும் கூறியுள்ளது. இதற்கான காலக்கெடுவாக ஜனவரி 1 கொடுக்கப்பட்டிருந்த நிலையில், தொழில் நுட்ப அமைப்பை மாற்ற போதுமான கால அவகாசம் தேவை என்று நிறுவனங்கள் கோரிக்கை விடுத்த நிலையில், ஜூலை வரை இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
டோக்கனைஷேசன் என்றால் என்ன?
கார்டு டோக்கனைஷேசன் என்பது கார்டு வழங்குபவர் மற்றும் கார்டு நெட்வொர்க்கினை தவிர, பரிவர்த்தனையில் ஈடுபடும் எந்தவொரு பங்குதாரரும் வாடிக்கையாளர்களின் விவரங்களை நேரடியாக அணுக முடியாது. இதனால் வாடிக்கையாளர்களின் தரவுகளையும் சேமிக்க முடியாது. மேலும் வாடிக்கையாளர்கள் தாங்கள் பயன்படுத்தும் தளங்களில் இருந்து டோக்கனை கோரும் போது, கார்டு வழங்குபவர்களின் ஒப்புதலுடன், கார்டு நெட்வொர்க் ஒரு டோக்கனை உருவாக்கும்.
ஜூலை-1க்கு பிறகு
ஆக ஜூலை 1-க்குப் பிறகு, ஷாப்பிங் தளங்கள் உள்ளிட்ட வணிக தரப்புகளிடம் உள்ள கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு எண்கள் நீக்கப்படும் என்றும், முன்பு போல கார்டு எண்களை நேரடியாக அணுக முடியாது என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நடைமுறையில், ஒவ்வொரு முறையும் வாடிக்கையாளர் கார்டைப் பயன்படுத்தி பரிவர்த்தனை செய்யும் போது, கார்டு-டோக்கனைசேஷனுக்கான ஒப்புதல் வழங்கப்படாவிட்டால், கார்டு தரவை கைமுறையாக தட்டச்சு செய்ய வேண்டும்.
ஓடிபி கொடுக்க வேண்டும்
வாடிக்கையாளர்கள் தங்கள் அட்டைத் தரவை டோக்கனைஸ் செய்ய சந்தா செலுத்தியிருந்தால், ஒவ்வொரு பரிமாற்றத்திற்கும் அவர்கள் பரிவர்த்தனையை முடிக்க கார்டு டோக்கனைத் தொடர்ந்து சிவிவி மற்றும் ஒடிபி எண்ணை உள்ளிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளரின் அனுமதியின்றி கொடுக்க கூடாது?
இதன் மூலம் வாடிக்கையாளர்களின் விவரங்கள் பாதுகாப்பாக இருக்கும். மேலும் வாடிக்கையாளர்களின் அனுமதியின்றி கிரெடிட் கார்டு வழங்குவது கூடாது. ஏற்கனவே இருக்கும் கார்டுகளுக்கும் மேம்படுத்தல் கூடாது. அதேபோல வாடிக்கையாளர்களுக்கு மெயில் அறிக்கைகளை அனுப்புவதிலும் தாமதம் இருக்க கூடாது. வட்டி வசூலிக்க தொடங்கும் முன் 15 நாட்கள் இருப்பதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும் என பல அதிரடியான அறிவிப்புகளை கொடுத்தது.
சரியான விளக்கம் கொடுக்க வேண்டும்
இது தவிர, கிரெடி கார்டு உரிமையாளர் ஏதேனும் விளக்கம் கேட்டால், நிறுவனங்கள் சரியான விளக்கம் கொடுக்க வேண்டும். நெகிழ்வுத்தன்மை கொண்ட கிரெடிட் கார்டு பயன்படுத்துவோர் வசதிக்கேற்ப கிரெடிட் கார்டின் பில்லிங் சுழற்சியை மாற்றுவதற்கான, ஒரு முறை விருப்பத் தேர்வு வழங்கப்பட வேண்டும். இந்த புதிய விதிகள் ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட விதிகளை மீறும் நிதி நிறுவனங்கள் லாபத்தின் இரு மடங்கு தொகையை அபராதமாக செலுத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது நினைவுகூறத்தக்கது .