அப்படி என்ன தவறு செய்துவிட்டார் என்று கேட்கிறீர்களா..? யானைக்கும் அடி சறுக்கும் என கேள்விப் பட்டு இருப்பீர்கள். அது தான் இப்போது நடந்து இருக்கிறது.
ஒரு சின்ன விஷயத்தால், முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரத்தின் மனைவி ஸ்ரீநிதி இருவரும், வருமான வரித் துறையினர் விசாரணை வட்டத்தில் தள்ளப்பட்டார்கள்.
ஏற்கனவே, தேங்கி நிற்கும் வழக்குகளை சமாளிக்கவே, படாத பாடு படும் போது, இந்த வருமான வரித்துறை வழக்கு, நம் ப சிதம்பரத்தை கவலையில் ஆழ்த்தி இருக்கும். சரி கார்த்தி சிதம்பரம் விஷயத்துக்கு வருவோம். இது 2018-ல் நடந்த சம்பவம்.
கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம், தன் பெயரில் இருந்த நிலங்களை 26.74 கோடி ரூபாய்க்கு விற்றார். நிலத்தை விற்று வந்த பணத்தில், 19 கோடி ரூபாயை காசோலையாக (செக்காக) சட்டப் படி வாங்கிக் கொண்டு, மீதமுள்ள 7.74 கோடி ரூபாயை காசாக (ரொக்கமாக) வாங்கிக் கொண்டார். 2018-ல் வருமான வரித் துறையினருக்கு, இந்த விவரங்கள் கிடைத்தன.
அவர் மனைவி
கார்த்தி சிதம்பரத்தை போலவே அவரின் மனைவி ஸ்ரீநிதியும் ஐந்து கோடி மதிப்புள்ள நிலம் மற்றும் வீட்டை விற்று விட்டு, அதில் 3.64 கோடி ரூபாயை மட்டும் வங்கிக் கணக்குகள் மூலம் முறையாக சட்டப் படி பெற்றுக் கொண்டார். மீதத் தொகையான 1.36 கோடி ரூபாயை கணவர் வாங்கியது போல ரொக்கமாக வாங்கி இருக்கிறார்.
என்ன தவறு
ஒரு நிலத்தையோ அல்லது வீட்டையோ வாங்கும் போதும் சரி, விற்கும் போதும் சரி... பணப் பரிவர்த்தனைகள் அனைத்தும் வங்கிகள் மூலமாகவே நடைபெற வேண்டும். அதையும் மீறி காசு (ரொக்கம்) வாங்கினால் இந்திய வருமான வரிச் சட்டம் சரத்து 276, 277, 278 படி அது குற்றம். இப்போது அந்தக் குற்றத்தை செய்ததாகச் சொல்லித் தான் கார்த்தி சிதம்பரம் மற்றும் ஸ்ரீநிதி கார்த்தியை விசாரித்துக் கொண்டு இருக்கிறார்கள் வருமான வரித் துறையினர்கள்.
வழக்கு
முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மற்றும் அவர் மருமகள் ஸ்ரீநிதி ஆகீயோர், இந்த தவறைத் தான் செய்தார்கள். எனவே இந்திய வருமான வரிச் சட்டம் சரத்து 276, 277, 278 ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. 2018-ல் தொடங்கிய விசாரணை இப்போது என்ன நிலையில் இருக்கிறது என்று தெரியவில்லை.
தப்பித்தார் அம்மா
கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரின் மனைவி வீட்டை விற்ற போது, கார்த்தி சிதம்பரத்தின் தாயார் நளினியும் தன் பெயரில் இருந்த சில நிலங்கள் மற்றும் வீடுகளை விற்று இருக்கிறார். ஆனால் அவர் விற்ற தொகையினை முழுமயாக வங்கிக் கணக்குகளில் வரவு வைத்து விட்டதற்கு ஆதாரங்கள் சமர்பித்ததால், நளினியின் மீது எந்த ஒரு வருமான வரி வழக்கும் பாய வில்லை.
உஷார் மக்களே
முன்னாள் நிதி அமைச்சரின் மகன், மருமகள் எல்லாம் இந்த தவறைச் செய்தால், வழக்கு விசாரணைகள் எல்லாம் நடக்கும். அதை எதிர் கொள்ள அவர்களிடம் பண பலமும், அறிவு பலமும் இருக்கிறது. ஆனால் மக்களே, நம்மிடம் என்ன இருக்கிறது என யோசித்துப் பாருங்கள்.
கூடவே கூடாது
எனவே மக்களே, எப்போதும் வீடு, மனை, நிலம் போன்றவைகளை வாங்கும் போதும் சரி, விற்கும் போதும் சரி... எப்போதும், பணப் பரிவர்த்தனைகளை வங்கி வழியாகத் தான் செய்ய வேண்டும். அதை மீறி ரொக்கமாக வாங்கினீர்கள் என்றால்... கார்த்தி சிதம்பரத்துக்கு நேர்ந்த கதி தான். அவர் தந்தை முன்னாள் நிதி அமைச்சர், உங்கள் தந்தை..? அவர் தந்தை ஏற்கனவே பல வழக்குகளை எதிர் கொண்டு போராடிக் கொண்டு இருக்கிறார். கார்த்தி சிதம்பரம், இந்த வழக்கைத் தவிர மற்ற பல வழக்குகளிலும் சிக்கி இருக்கிறார். அந்த வழக்குகள் விவரங்களை சுருக்கமாகப் பார்த்து விடுவோமே...!
அதிகார துஸ்பிரயோகம்
ஏர்செல் நிறுவனத்தை மேக்ஸிஸ் நிறுவனம் வாங்கும் போது நிதி அமைச்சகம் வழங்க வேண்டிய அனுமதி ஒரு தலைப்பட்சமாக, அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்படாமல் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. அந்த அனுமதியை தன் தந்தை ப சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த போது அதிகார துஸ்பிரயோகம் செய்து வாங்கியதாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது அந்த வழக்கை மத்திய புலனாய்வுத் துறை மற்றும் அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது.
ஜெயில் வாழ்கை
இந்த வழக்கில், கைது செய்யப்பட்ட முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் சுமார் 100 நாட்களுக்குப் பின், ஜாமீனில் வெளி வந்துவிட்டார். வெளி வந்த உடனேயே, இந்தியப் பொருளாதாரம் குறித்த தன் கருத்தை, ஆணித்தரமாக முன் வைத்துக் கொண்டு இருக்கிறார். சரி அதேல்லாம் வேறு கதை, மீண்டும் விஷயத்துக்கு வருவோம்.
முதலீடுகளில் சொதப்பல்
வாசன் ஹெல்த் கேர் குழுமத்தில் கார்த்தி சிதம்பரம் ஒரு கணிசமான பங்குகளை வைத்திருக்கிறார் என்பது முதலில் வெளியே தெரிய வந்தது. அதன் பின் சிகுயா கேப்பிடல் (Sequoia Capital India) என்கிற நிறுவனம் மூலம் வெளிநாடுகளில் இருந்து பல்வேறு அந்நிய நேரடி முதலீடுகளை கொண்டு வந்திருக்கிறார் கார்த்தி சிதம்பரம்.
பணச் சலவை
அப்படி வரும் அந்நிய நேரடி முதலீடுகளை எல்லாம், முறையாக அரசாங்கத்துக்கு தெரியப்படுத்தாமல், தன் இஷ்டத்துக்கு பணச் சலவை செய்து, பல்வேறு நிறுவனங்களுக்கும், சொந்த செலவுகளுக்கும் பயன்படுத்தி இருப்பதாக புகார் எழுந்தது. இந்த வழக்கை அமலாக்கத் துறையினர் (Enforcement Directorate) விசாரித்து வருகின்றனர்.
வருமான வரிச் சட்டம்
இந்திய வருமான வரிச் சட்டத்தின் படி, எந்த ஒரு வெளிநாட்டு முதலீடு மற்றும் வெளி நாடுகளில் வாங்கி இருக்கும் சொத்துக்கள் விவரங்களை, வருமான வரிப் படிவத்தை தாக்கல் செய்யும் போது முறையாகக் குறிப்பிட வேண்டும். அப்படிக் குறிப்பிடவில்லை என்றால், அது சட்டப் படிக் குற்றம்.
வெளிநாட்டில் சொத்து
கார்த்தி சிதம்பரத்துக்கு, வெளிநாடுகளில் ஏகப்பட்ட நிறுவனங்கள் இருந்தும், அவைகளை குறிப்பிடாமல் மறைத்து இருப்பதாகச் சொல்லி, வருமான வரித்துறையினர் விசாரித்து வருகின்றனர். இப்படி சுத்தி சுத்தி விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது தற்போது மேலும் ஒரு வழக்கில் சிக்கி இருக்கிறார் கார்த்தி சிதம்பரம்.


Click it and Unblock the Notifications