ஆர்பிஐ கடந்த மார்ச் 2020 மாத வாக்கில் 3 மாதம், கடன்களுக்கான தவணைகளை ஒத்திவைப்பதற்கு அனுமதி கொடுத்தது. அதன் பின் ஆகஸ்ட் 31, 2020 வரை நீட்டித்தது ஆர்பிஐ. அதைத் தான் நாம் ஆங்கிலத்தில் EMI Moratorium என்கிறோம்.
இந்த EMI Moratorium தற்காலிகமாக, கடன் வாங்கியவர்களுக்கு நன்மை பயக்குவது போல இருந்தாலும், இதனால் கடன் வாங்கியவர்கள் அதிகம் சிரமத்துக்கு ஆளாகலாம் என பல செய்திகள் வந்திருக்கின்றன.
அப்படி என்ன மாதிரியான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்? இப்போது EMI Moratorium பயன்படுத்தியவர்களுக்கு எது கஷ்டம்? வாருங்கள் விரிவாகப் பார்ப்போம்.
இரண்டு முக்கிய பிரச்சனைகள்
ஒருவர் EMI Moratorium வசதியைப் பயன்படுத்தி இருந்தால், அவர்கள்
1. மீண்டும் புதிதாக கடன் வாங்குவதில் சிரமம் ஏற்படலாம்.
2. இப்போது செலுத்திக் கொண்டு இருக்கும் கடனுக்கே கூடுதலாக வட்டியைச் செலுத்த வேண்டி இருக்கும். இந்த 2 பிரச்சனைகளைத் தான் அதிகம் பேசப்பட்டு வந்தன.
இப்போது லோன் டிரான்ஸ்ஃபர்
இப்போது ஒரு நபர் EMI Moratorium வசதியை பயன்படுத்தி இருந்தால், அவர்கள் தற்போது கடனை வேறு வங்கிக்கோ அல்லது நிதி நிறுவனத்துக்கோ மாற்றம் செய்வது கூட (balance transfer) சிரமமாகலாம் என்கிறார் பேங்க் பசார் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி அதில் ஷெட்டி.
அதென்ன பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்
ஒரு வங்கியில் ஒருவர் வாங்கி இருக்கும் கடனை, வேறு வங்கி அல்லது நிதி நிறுவனத்துக்கு மாற்றினால் அதைத் தான் நாம் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் என்கிறோம். உதாரணமாக: ரவி சிட்டி வங்கியில் 10 லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருக்கிறார். இதற்கு 10 % வட்டி வசூலிக்கிறார்கள் என வைத்துக் கொள்வோம்.
பொதுவான காரணம்
பொதுவாக, ஒரு வங்கியை விட இன்னொரு வங்கியில், கடன் வாங்கியவருக்கு ஏதாவது நன்மை இருந்தால் மட்டுமே இப்படி கடன் பாக்கி தொகையை வேறு ஒரு வங்கிக்கு டிரான்ஸ்ஃபர் செய்வார்கள். இங்கு ரவி சிட்டி வங்கியில் 10 % வட்டி செலுத்துகிறார். ஆனால் எஸ்பிஐக்கு மாற்றினால் வெறும் 9 % தான் வட்டி செலுத்த வேண்டி இருக்கிறது என வைத்துக் கொள்வோம்.
வட்டி மிச்சம்
இந்த 1.5 % வட்டியை மிச்சப்படுத்த, ரவி சிட்டி பேங்கில் இருக்கும் தன் கடனை, எஸ்பிஐ வங்கிக்கு மாற்றுகிறார் என வைத்துக் கொள்வோம். இது தான் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர். இப்படி கடனை டிரான்ஸ்ஃபர் செய்யவும் தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
இ எம் ஐ மாரிடோரியம் பயன்படுத்தினால் என்ன பிரச்சனை
ஒருவர், மாரிடோரியம் வசதியை பயன்படுத்திக் கொள்கிறார் என்றால், அவருக்கு போதுமான அளவுக்கு பணம் வரவில்லை என்று தானே பொருள். ஆகையால் தான் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபருக்கு விண்ணப்பித்தால், இ எம் ஐ மாரிடோரியம் பயன்படுத்தியவர்களின் விண்ணப்பங்களுக்கு அனுமதி மறுக்கப்படலாம் என்கிறார் அதில் ஷெட்டி.
விதிகள் இல்லை
இப்படி இ எம் ஐ மாரிடோரியம் பயன்படுத்தியவர்களுக்கு கடன் கொடுக்கக் கூடாது என்றோ அல்லது பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் செய்யக் கூடாது என்றோ எந்த விதிமுறைகளும் இல்லை என்கிறார் ஃபெடரல் வங்கியின் மூத்த துணைத் தலைவர் கே ஏ பாபு. இருப்பினும் வங்கிகள், தாங்கள் கொடுக்கும் கடன் ஒழுங்காக திரும்பி வர வேண்டும் என்கிற வியாபார நோக்கில் இப்படி செய்கிறார்கள்.
சூப்பர் ஐடியா
தற்போது ஒருவர் இ எம் ஐ மாரிடோரியம் பயன்படுத்தி இருக்கிறார் என்றே வைத்துக் கொள்வோம். அவருக்கு இது போன்ற சிக்கல்கள் வரக் கூடாது என்றால், இ எம் ஐ மாரிடோரிய காலம் முடிந்து ஒரு சில மாதங்கள் வழக்கம் போல இ எம் ஐ செலுத்துங்கள். அதன் பிறகு, லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபருக்கு விண்ணப்பித்தால் ஓரளவுக்கு எளிதாக அப்ரூவ் ஆகலாம் என ஐடியா கொடுக்கிறார் மை லோன் கேர் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி கெளரவ் குப்தா.
கடன் மறுசீரமைப்பு
சமீபத்தில் தான் ஆர்பிஐ கடன் மறுசீரமைப்புக்கு ஓகே சொன்னது. எனவே தற்போது பாக்கி இருக்கும் கடனுக்கான வட்டியையும் அசலையும் குறிப்பிட்ட காலத்துக்குள், குறிப்பிட்ட இ எம் ஐ தொகை உடன் செலுத்த முடியாது என்றால், நீங்கள் கடன் வாங்கி இருக்கும் வங்கியைத் தொடர்பு கொண்டு கடன் மறுசீரமைப்பு செய்யச் சொல்லுங்கள் எனவும் சொல்லி இருக்கிறார் அதில் ஷெட்டி.