ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் அரசு பல மாற்றங்களை செய்து வருகின்றது.
அதிலும் கொரோனா காலத்தில் தங்களது வருங்கால வைப்பு நிதியினை, அவசர தேவைக்களுக்காக எடுத்துக் கொள்ள அனுமதித்தது.
இதன் மூலம் கொரோனா நெருக்கடியான காலக்கட்டத்தில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள், வருங்கால வைப்பு நிதியை பெற்று மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொண்டனர்.
பிஎஃப்-பில் சில மாற்றங்கள்
இதற்கிடையில் மக்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப வருங்கால வைப்பு நிதியினை பெறுவதில் இருக்கும் சிரமங்களை களைந்து, நடைமுறைகளை மத்திய அரசு எளிதாக்கி வருகின்றது. இதற்கிடையில் தான் வருங்கால வைப்பு நிதியில் இருந்து, மருத்துவ சிகிச்சைக்கு அட்வான்ஸ் பெறுவதற்கான நடைமுறையில் சில மாற்றங்களை செய்துள்ளது.
சான்று தேவையில்லை
இது குறித்து வெளியான அறிக்கையில், சிகிச்சைக்கு தேவையான மருத்துவச் செலவுக்கு, மதிப்பீடு சான்றுகளை சமர்பிக்கத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சுற்றறிக்கை CS(MA) மற்றும் CGHS - ஸ்கீம் உள்ள மருத்துவமனைகளுக்கும் பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.
மதிப்பீடு பெற முடியாது?
இது குறித்து வருங்கால வைப்பு நிதி அமைப்பு அறிக்கையில், உயிருக்கு ஆபத்தான நோய்களில், நோயாளியின் உயிரைக் காப்பாற்ற அவர்களை அவசர அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது கட்டாயமாகிறது. இதுபோன்ற நேரங்களில் மருத்துவமனையில் மருத்துவச் செலவுக்கான மதிப்பீட்டை பெற முடியாது.
அட்வான்ஸ் பெறலாம்
இதே சில நேரங்களில் நோயாளி ஐசியூவில் அனுமதிக்கப்பட்டிருக்கலாம் என்பதால், நோயாளி இல்லாமல் குடும்ப உறுப்பினர்கள் கூட மருத்துவ அட்வான்ஸை விண்ணப்பித்து ஒரு லட்சம் வரை பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது.
PF அட்வான்ஸ் எப்படி பெறுவது?
அரசின் இந்த அறிக்கையின் படி, நோயாளி அரசு / பொதுத்துறை நிறுவனம் / CGHS எம்பனேல் செய்யப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட வேண்டும்.
அவசரமாக நோயாளி ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், அவர்கள் நிலை குறித்து விளக்கமளித்து விதிகளில் தளர்வு வழங்குவதற்கு தகுதியானவர்கள் என உரிய அதிகாரியிடம் முறையிடலாம். இதன் மூலம் மெடிக்கல் அட்வான்ஸ் மற்றும் சிகிச்சைக்கான கட்டணத் தொகையை பெற்றுக் கொள்ளலாம்.
செலவு மதிப்பீடு
ஊழியர் அல்லது ஒரு குடும்ப உறுப்பினர் யாரேனும் ஒருவர் மெடிக்கல் அட்வான்ஸ் பெறுவதற்கான விண்ணப்பத்தைக் கொடுக்க வேண்டும். ஆனால் அப்போது, செலவு பற்றிய மதிப்பீடுகளை கொடுக்க வேண்டிய அவசியமில்லை. விண்ணப்பத்தில் மருத்துவமனை மற்றும் நோயாளிகளின் விவரங்கள் கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும்.
ரூ.1 லட்சம் வரையில் அட்வான்ஸ்
நோயாளி அல்லது குடும்ப உறுப்பினர்கள் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் 1 லட்சம் ரூபாய் வரையிலான மெடிக்கல் அட்வான்ஸ் தொகையை உரிய அதிகாரி வழங்குவார். அந்தத் தொகை நேரடியாக மருத்துவமனையின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக டெபாசிட் செய்யப்படும். தேவையின் அடிப்படையில் கோரிக்கை கொடுக்கப்பட்ட நாள் அல்லது அதற்கு அடுத்த நாட்களில் மெடிக்கல் அட்வான்ஸ் கொடுக்கப்படும். இதற்கு மருத்துவமனை செலவு தொடர்பான ஆவணங்களை சமர்பிக்கத் தேவையில்லை.
இதனையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்
ஒரு லட்சத்துக்கும் மேலாக சிகிச்சை செலவு மதிப்பீடு இருந்தால், வருங்கால வைப்பு நிதியில் ஏற்கனவே இருக்கும் விதிமுறைகளின்படி இரண்டாவது அட்வான்ஸ் பரிசீலிக்கப்படும்.
இதற்கு கட்டாயம் சிகிச்சைக்கான மதிப்பீடு ஆவணம் அல்லது சிகிச்சை நிறைவு பெற்றதற்கான பில்கள் சமர்பிக்கப்பட வேண்டும்.
ஒட்டுமொத்த பில் தொகையில், ஏற்கனவே கொடுக்கப்பட்ட அட்வான்ஸ் கழிக்கப்பட்டு மீதமுள்ள எஞ்சிய தொகை செலுத்தப்படும்.
45 நாட்களுக்குள் ஆவணம் கொடுக்கவேண்டும்
ஊழியர் அல்லது குடும்ப உறுப்பினர்கள் நோயாளி மருத்துவமனையில் இருந்து டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்ட 45 நாட்களுக்குள் மருத்துவ செலவுக்கான ஆவணத்தை சமர்பிக்க வேண்டும். கொடுக்கப்படும் பில் தொகைக்கு ஏற்ப அட்வான்ஸ் தொகையில், வருங்கால வைப்பு நிதி விதிமுறைகளின்படி மாற்றம் செய்யப்படும்.