பொதுவாக நிதி ஆண்டு என்றாலே ஏப்ரலில் தொடங்கி மார்ச்சில் முடியும்.
ஆனால் இந்த 2020 - 21 நிதி ஆண்டு தொடங்கும் போதே கிட்டத்தட்ட கொரோனா வைரஸ் பெரிதாக பரவத் தொடங்கிவிட்டது.
எனவே வருமான வரித் துறையினர் சில சலுகைகளைக், நமக்குக் கொடுத்து இருக்கிறார்கள். இந்த நேரத்தில், அந்த சலுகைகளை பயன்படுத்திக் கொள்ளுங்களேன்.
நீட்டிப்பு
கடந்த 2018 - 19 நிதி ஆண்டுக்குச் சமர்பிக்க வேண்டிய வருமான வரி படிவங்களை 30 ஜூன் 2020-க்குள் சமர்பிக்கலாம் என நீட்டித்தார்கள். அதே போல டிடிஎஸ் பிடித்தம் செய்த தொகையை அரசுக்கு ஜூன் 30, 2020-க்குள் செலுத்தலாம். தாமதமாகச் செலுத்தும் டிடிஎஸ் தொகைக்கு 18 % வட்டிக்கு பதிலாக 9 % வட்டி வசூலிப்பார்கள் எனச் சொல்லப்பட்டு இருக்கிறது.
நமக்கு என்ன
மேலே சொன்னவைகள் எல்லாம் கம்பெனிகளுக்கும் பெரிய பெரிய ஆட்களுக்கும் தான் பொருந்தும். நமக்கு என்ன என்றால் ஆதார் பான் இணைப்புக்கு 30 ஜூன் 2020 வரை நீட்டித்து இருக்கிறார்கள. அட இதை எல்லாம் விடுங்க சார், வேற ஏதாவது இருக்கா..? இருக்கே..!
80C வரிக் கழிவுகள்
லைஃப் இன்சூரன்ஸ், பப்ளிக் ப்ராவிடெண்ட் ஃபண்ட், தேசிய சேமிப்புச் சான்றிதழ், இ எல் எஸ் எஸ் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள்... என வருமான வரிச் சட்டப் பிரிவு 80C-ன் கீழ் பல முதலீடுகள் இருக்கின்றன. அவைகளில் முதலீடு செய்யவும், அதற்கான கட்டணங்களைச் செலுத்தி வருமான வரியில் க்ளெய்ம் செய்யவும் 30 ஜூன் 2020 வரை நீட்டித்து இருக்கிறார்கள்.
80D & 80G வரிக் கழிவுகள்
ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்களுக்குச் செலுத்த வேண்டிய பிரீமியம் தொகைகள் மற்றும் அரசு பட்டியல் போட்டு இருக்கும் திட்டங்களுக்கு நன்கொடை செலுத்தி வரிக் கழிவு பெற வேண்டும் என்றாலும் அவைகளை 30 ஜூன் 2020 வரை பேமெண்ட் செய்து வரிக் கழிவு பெறலாம்.
பயன்படுத்திக் கொள்ளுங்கள்
ஏற்கனவே இன்சூரன்ஸ் பிரீமியம் செலுத்திக் கொண்டு இருப்பவர்கள், மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்பவர்கள், ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்து இருப்பவர்கள் எல்லாம் இந்த கொரோனா லாக் டவுனால் தங்கள் பேமெண்ட்களை ஒழுங்காகச் செய்து இருக்க முடியாமல் போய் இருக்கலாம். அதற்காகத் தான் 30 ஜூன் 2020 வரை நீட்டித்து இருக்கிறார்கள். எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு முறையாக வரிக் கழிவு பெறுங்கள்.