தபால் அலுவலகத்தில் உள்ள சிறு சேமிப்பு திட்டங்கள், பொது வருங்கால வைப்பு நிதி, சுகன்யா சம்ரிதி திட்டம் என அனைத்து சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தினை மத்திய அரசு குறைத்துள்ளது.
சிறு சேமிப்புகளுக்கான வட்டி விகிதம் 3 மாதங்களுக்கு ஒரு முறை அல்லது ஒரு காலாண்டுக்கு ஒரு முறை நிர்ணயம் செய்யப்படுகிறது.
அதன்படி இன்று தொடங்கியுள்ள இந்த புது நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் தேசிய சேமிப்பு பத்திரம், கிஷான் விகாஸ் பத்திரம் மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) உள்ளிட்ட அனைத்து சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தினை மத்திய அரசு குறைத்துள்ளது.
வட்டி குறைப்பு
அதிலும் சிறு சேமிப்புகளுக்களுக்காக அதிகபட்சமாக 1.40% வரை இந்த வட்டி விகிதத்தினை குறைத்துள்ளது மத்திய அரசு. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 1 முதல் மூன்று ஆண்டுகளுக்கான டெர்ம் வைப்புத் தொகைக்கான வட்டி விகிதத்தினை 6.9 சதவீதத்திலிருந்து, 5.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இது 1.4 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம்
இதே ஐந்து வருடங்களுக்கான டெர்ம் வைப்புத் தொகைக்கான வட்டி விகிதத்தினை 7.7 சதவீதத்திலிருந்து 6.7 சதவீதமாக குறைத்துள்ளது. இது 1% சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதே மூத்த குடிமக்களுக்கான சிறு சேமிப்பு திட்டங்களுக்கான (5 ஆண்டு காலம்) வட்டி விகிதம் 1.2 சதவீதம் குறைக்கப்பட்டு, 8.6 சதவீதத்திலிருந்து 7.4 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பிபிஎஃப் வட்டி விகிதம் குறைப்பு
இதற்கிடையில் 15 வருட பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்திற்கு 7.9 சதவீதத்திலிருந்து, 7.1% ஆக வட்டி குறைக்கப்பட்டுள்ளது. இதே தேசிய சேமிப்பு பத்திரத்திற்கு 7.9 சதவீதத்திலிருந்து, 6.8% ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. கிஷான் விகாஸ் பத்திரத்தின் முதிர்வு காலம் (முன்பு 113 மாதங்களாக இருந்தது) 124 மாதங்களாக அதிகரித்ததோடு, அதற்கான வட்டி விகிதத்தினையும் 7.6 சதவீதத்திலிருந்து, 6.9% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
ஊழியர்களின் வைப்பு நிதிக்கான வட்டி விகிதம்
இதே சுகன்யா சம்ரிதி திட்டத்திற்காக வட்டி விகிதம் 8.4 சதவீதத்திலிருந்து 7.6% ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் வரையிலான வைப்புத்தொகை இப்போது இருக்கும் 6.9 சதவீதத்திலிருந்து 5.5 சதவீதமாக அதாவது 1.4 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இது தான் இப்படி எனில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் சந்தாதாரர்களுக்கான வட்டி விகிதம் 2019-20 ஆம் ஆண்டிற்கான 8.5 சதவீதமாக இருக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.