வாயை கட்டி வயிற்றை கட்டி பல வருடங்களாக சேமித்து வைத்த பணத்தினை, சரியான திட்டங்களில் முதலீடு செய்வது மட்டும் அல்ல, அதனை குடும்பத்தினருக்கும், உங்களுக்கும் பயனடையும் வகையில் வைத்திருப்பதும் உங்கள் முக்கிய கடமையாகும்.
பலரும் தங்களது முதலீடு மற்றும் சேமிப்பினை தங்களது குடும்பத்தினருக்கு தெரியப்படுத்துவதே இல்லை. இதனால் அவர்கள் முதலீடு செய்தும், அவைகள் காலம் முழுக்க க்ளைம் செய்யப்படாமலேயே வீணாகின்றன.
அப்படிப்பட்ட ஒரு அறிவிப்பினை பற்றித் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம்.
பிரபலமான திட்டங்கள்
அஞ்சலகத்தின் மிக பிரபலமான திட்டங்களான பொது வருங்கால வைப்பு நிதி, தேசிய சேமிப்பு பத்திரம், மூத்த குடி மக்கள் சேமிப்பு திட்டம் உள்ளிட்ட பல வகையான நிரந்தரமாக வருமானம் தரக்கூடிய பாதுகாப்பான திட்டங்கள் உள்ளன. இந்த திட்டங்களில் வட்டி விகிதமும் கணிசமாக உண்டு. சில திட்டங்களுக்கு வரிச்சலுகையும் உண்டு. இதனால் பல தரப்பு மக்களும் விரும்ப கூடிய திட்டங்களாக உள்ளன.
பாதுகாப்பான திட்டங்கள்
எல்லாவற்றிற்கும் மேலாக அரசின் கீழ் செயல்படும் அஞ்சலத்தின் மூலம் வழங்கப்படுவதால் நம்பிக்கையானதாகவும், பாதுகாப்பானதாகவும் பார்க்கப்படுகிறது. மேலும் சந்தை அபாயம் இல்லாத ரிஸ்க் இல்லாத திட்டமாகவும் பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட திட்டங்களில் முதலீடு செய்யப்படும் தொகையானது, சில காரணங்களால் க்ளைம் செய்யப்படாமல் உள்ளது.
கேட்பாரற்று கிடக்கும் பணம்
சில சமயங்களில் அக்கவுண்ட் ஹோல்டர் இறந்து விட்டாலும், அது அவர்களின் குடும்பத்தினருக்கு தெரியாமலேயே போகின்றது. இவர்கள் தாங்கள் முதலீடு செய்வதை குடும்பத்தினருக்கு தெரியப்படுத்துவதில்லை. மேலும் இதனுடன் இந்த சேமிப்பு திட்டங்களில் சேமித்ததற்கான ஆதாரங்களாக பாஸ்புக் அல்லது வேறு ஏதேனும் ஆதாரங்களையும் வைத்துக் கொள்வதில்லை. ஆக கடைசி வரையில் இவர்கள் சேமித்ததற்கான ஆதாரமோ அல்லது முதலீடு செய்ததற்கான ஆவணமோ எதுவும் குடும்பத்தினருக்கும் கிடைப்பதில்லை.
என்ன செய்வார்கள்?
இவ்வாறு உரிமை கோரப்படாத கணக்குகளில் உள்ள பணத்தினை மூத்த குடிமக்கள் நல்ல நிதிக்கு மாற்றப்படும். இதில் அஞ்சலகத்தின் சேமிப்பு கணக்குகளில் உள்ள தொகை, தொடர் கணக்கில் உள்ள சேமிப்பு, டைம் டெபாசிட்டுகள், மாதாந்திர வருமான திட்டம், மூத்த குடி மக்கள் சேமிப்பு திட்டம் உள்ளிட்ட அரசின் சேமிப்பு திட்டங்களில் உள்ள தொகையானது இந்த திட்டங்களுக்கு மாற்றப்படும்.
எப்படி தெரிந்து கொள்வது?
இது குறித்து அஞ்சலகத்தின் இணையத்தில் banking and Remittance என்பதை கிளிக் செய்யவும். அதில் அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் என்பதை கிளிக் செய்யவும். அதில் மூத்த குடிமக்கள் வெல்பேர் ஃபண்டினையும் கிளிக் செய்ய வேண்டும். இதில் சேமிப்பு கணக்கு, பிபிஎஃப், கிசான் விகாஸ் பத்திரம் உள்ளிட்ட பல திட்டங்களில் உள்ள பல விவரங்களையும் பார்த்துக் கொள்ளலாம்.