இன்று நடந்த ரிசர்வ் வங்கி கூட்டத்தில் ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதாவது வங்கிக் கடன்களுக்கான வட்டி விகிதம் 4% ஆகவே தொடரும் என்று RBI அறிவித்துள்ளது.
அதோடு ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3.35% ஆகவே உள்ளது. பொருளாதாரம் மீட்கப்படுவதற்காக வலுவாக அறிகுறிகள் இருந்து வரும் நிலையில், இன்னும் பொருளாதாரத்தினை மேம்படுத்த வட்டி விகிதங்கள் குறைவாக இருந்தால் தான் அது உறுதுணை புரியும்.
இதனால் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யாமல் விட்டிருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
வட்டி விகிதம் அதிகரிக்காது
அதோடு வரவிருக்கும் பண்டிகை காலத்தில் தேவை அதிகரிக்கலாம். இதனால் மக்களின் கையில் பணப்புழக்கத்தினை அதிகரிக்க குறைவான வட்டி விகிதத்தினை ,அப்படியே ரிசர்வ் வங்கி வைத்திருக்கலாம். இதனால் வாகனக் கடன், வீட்டுக்கடன் வாங்குபவர்களுக்கு குறைவான வட்டியே வசூலிக்கப்படும். ஏனெனில் வங்கிகள் எம்சிஎல்ஆர் விகிதத்துடன் இணைக்கப்பட்டுள்ள கடன்களுக்கு வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யாது.
வீட்டுக்கடன் பயனாளிகளுக்கு நல்ல விஷயம் தான்
அதிலும் குறிப்பாக வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு நிச்சயம் நல்ல விஷயம் தான். ஏனெனில் பலரும் எதிர்பார்த்த விஷயம் என்னவெனில் வட்டியை குறைக்காவிட்டாலும் பரவாயில்லை. இதிலிருந்து அதிகரிக்காமல் இருந்தால் கூட போதும் என்பது தான். அதனை தற்போது உறுதிப்படுத்தும் விதமாகவே ஆர்பிஐயும் ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை.
வரலாறு காணாத வட்டி குறைவு
எஸ்பிஐ-யினை பொறுத்த வரையில் ஏற்கனவே வீட்டுக்கடனுக்கான, 1 வருட எம்சிஎல்ஆர் விகிதம் வரலாறு காணாத அளவு குறைந்து 7% ஆக உள்ளது. தற்போது வங்கிகளில் வீட்டுக்கடன், வாகனக்கடன் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தி வரும் நிலையில், இன்னும் கூட வட்டி விகிதம் குறைக்கப்படலாம் என்ற நிலை தான் இருந்து வருகிறது. கடந்த ஜூலை 2016ல் இந்த விகிதம் 9.15% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இது மிக நல்ல விஷயம் தான்
நாட்டில் நிலவி நெருக்கடியான இந்த நேரத்தில் வட்டி விகிதம் குறையாவிட்டாலும், அதிகரிக்காமல் இருந்தாலே அது பெரிய விஷயம் தான். ஆக இந்த வட்டி விகிதம் மாற்றம் செய்யப்படாமல் இருப்பதும் ஒரு வகையில் நல்ல விஷயம் தான். இதுவும் பணப்புழக்கத்தினை அதிகரிக்க வழிவகுக்கும். எல்லாவற்றையும் விட மக்களுக்கு குறைந்த வட்டியில் மக்களுக்கு கடன் கிடைக்க வழிவகுக்கும்.