இந்திய மிடில் கிளாஸ் குடும்பங்களுக்கு வாழ்நாளில் மிகப்பெரிய கனவு என்றால் அது சொந்த வீடு தான். முன்பெல்லாம் சொந்த வீடு வாங்க வேண்டும் என்றால் வாழ்நாள் முழுவதும் உழைத்து வீடு கட்ட வேண்டும்.
ஆனால் இன்று மாத சம்பளம் வாங்கும் அனைவருக்கும் வங்கிகள் வீடு தேடி வந்து வீட்டுக் கடன் கொடுக்கும் காரணத்தால் சொந்த வீடு வாங்குவது என்பது மிகவும் எளிதாகியிருக்கிறது.
இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டில் புதிய வீட்டை வாங்கவோ அல்லது கட்டவோ நீங்கள் திட்டமிட்டும் அனைவருக்கும் வீடுகளின் விலை அதிகரிக்க உள்ளது என்பது அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக இருக்கும் வேளையில், சொந்த வீடு வாங்க முக்கியக் கருவியாக இருக்கும் வீட்டுக் கடனுக்கான வட்டியைக் குறைக்க இப்படியொரு வழி இருப்பது உங்களுக்குத் தெரியுமா..?
இந்திய ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 9 மாதங்களில் வட்டி விகிதங்கள் கடுமையாக உயர்த்தியதன் மூலம் வீட்டுக் கடன் வாங்கியவர்களையும், புதிதாக வாங்குபவர்களையும் கடுமையாகப் பாதித்துள்ளது என்றால் மிகையில்லை.
வீட்டுக் கடன்
20 ஆண்டுக் கால நிலுவையில் உள்ள 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் இந்த 9 மாதத்தில் 7 சதவீதத்திலிருந்து 9.25 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ஈஎம்ஐ தொகை
இதன் மூலம் இந்த வீட்டுக் கடனுக்கான EMI தொகை 38,765 ரூபாயில் இருந்து 45,793 ரூபாயாக உயர்ந்துள்ளது. வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 7-ல் இருந்து 9.25 சதவீதம் வரையில் மட்டுமே உயர்ந்திருந்தாலும் ஈஎம்ஐ தொகை 18 சதவீசம் உயர்ந்துள்ளது.
கடுமையான சூழ்நிலை
இந்தத் திடீர் உயர்வால் வீட்டுக் கடன் வாங்குவோர் அனைவரும் அதிக EMI தொகையைச் செலுத்த மிகவும் கடுமையான சூழ்நிலைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இந்தப் பாதிப்பைக் குறைக்க உதவும் ஒரு தீர்வை தான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம்.
ஈசி EMI வசதி
குறிப்பிட்ட காலத்திற்கு ஈசி EMI வசதிகளை வழங்கும் பல வகையான வீட்டுக் கடன்கள் உள்ளன. இந்த விருப்பங்கள் என்ன மற்றும் அவை உண்மையில் போராடும் கடன் வாங்குபவர்களுக்கு உதவுமா என்பதைப் பார்ப்போம்.
வீட்டுக் கடன் EMI
பொதுவாக வீட்டுக் கடன் EMI இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது, ஒன்று வட்டி மற்றொன்று அசல் தொகை. இந்திய வங்கிகள் வீட்டுக் கடனில் பல வகைகளையும், சலுகைகளையும் அளிக்கிறது. அவை பெரும்பாலும் அசல் திருப்பிச் செலுத்துதலில் தளர்வு அளிக்கின்றன. இது குறுகிய காலத்தில் கடன் வாங்குபவர்களுக்குப் பலன் அளிக்கும்.
கடன் தள்ளுபடி (moratorium)
வீட்டுக் கடனுக்குச் சில வங்கிகள் கடன் தொகையில் சில முக்கியமான தள்ளுபடிகளை வழங்குகிறது. இத்தகைய கடன் தள்ளுபடி-கள் (moratorium) பொதுவாகவே கட்டப்பட்டு வரும் வீடுகளுக்குத் தான் வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் வீட்டின் உரிமையாளர் புதிய வீட்டுக்கு குடியேறும் வரையில் வீட்டுக் கடன் EMI அசல் தொகை செலுத்துவதில் தள்ளுபடி அளிக்கிறது.
தள்ளுபடி என்றால்
இதில் தள்ளுபடி என்றால் அசல் தொகையைத் தற்காலிகமாக வசூலிக்காது, பின்னாளில் நீங்கள் செலுத்த வேண்டும். மேலும் இக்காலக்கட்டத்தில் வீட்டு கடன் ஈஎம்ஐ தொகையில் வட்டியை செலுத்த வேண்டியது கட்டாயம். இதேபோல் வீட்டுக் கடனின் ஆரம்பக்கட்டத்தில் ஈஎம்ஐ தொகையில் அசல் தொகை என்பது மிகவும் குறைவு என்பதை மறந்துவிடாதீர்கள்.
ஹோம் லோன் ஓவர்டிராப்ட் வசதி
வங்கிகள் மற்றும் வீட்டு நிதி நிறுவனங்கள் (HFCs) வழங்கும் வீட்டுக் கடன் ஓவர் டிராஃப்ட் வசதியின் கீழ், கடன் வழங்குபவர் நடப்பு அல்லது சேமிப்புக் கணக்கு வடிவத்தில் ஓவர் டிராஃப்ட் கணக்கைத் திறக்கிறது.
உபரி பணம்
வீட்டுக் கடன் வாங்குபவர் தங்களிடம் இருக்கும் உபரி பணத்தை இக்கணக்கில் டெப்பாசிட் செய்யலாம். இந்தத் தொகையை எப்போது வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் வித்டிரா செய்ய முடியும்.
ஓவர்டிராப்ட் கணக்கு
வீட்டுக் கடன் வாங்குபவரின் வட்டி, இந்த ஓவர்டிராப்ட் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை நிலுவையில் உள்ள வீட்டுக் கடன் தொகையில் இருந்து கழித்த பிறகு கணக்கிடப்படுகிறது. இந்த வீட்டுக் கடன் வாங்குபவர்கள் தங்கள் பணப்புழக்கத்தை இழக்காமல் வீட்டு கடன் வட்டியில் சில தள்ளுபடியில் பெற முடியும்.
ஆனால் ஒரு செக்
இந்த அனைத்து சலுகையிலும் வீட்டுக் கடனில் அசல் தொகை அதாவது principal செலுத்துவதில் தான் சலுகை அளிக்கப்படுகிறது. இதனால் கடன் செலுத்துவதற்கான காலம் நீட்டிக்கப்படும்.