கடந்த மார்ச் 2020-ல், மத்திய ரிசர்வ் வங்கி, 3 மாத இ எம் ஐ தவணைகளை ஒத்தி வைக்க, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்தது.
இந்த மே 31, 2020 உடன் ஆர்பிஐ அறிவித்த இஎம்ஐ (EMI) தவணை ஒத்திவைப்பு காலம் முடியப் போகிறது.
இந்த நேரத்தில், ஆர்பிஐ, மேலும் 3 மாதங்களுக்கு இஎம்ஐ (EMI) தவணைகளை ஒத்திப் போடலாம் எனச் சொல்லி இருக்கிறது. எனவே ஆகஸ்ட் 31, 2020 வரை இஎம்ஐ (EMI) தவணைகளை நாம் ஒத்திப் போடலாம்.
6 மாதம் ஒத்தி வைத்தால்
ஒருவேளை மத்திய ரிசர்வ் வங்கி சொன்ன, 6 மாத கடன் தவணைகளை ஒத்திப் போடும் வசதியை நாம் பயன்படுத்திக் கொண்டால் நமக்கு என்ன நஷ்டம்? எவ்வளவு ரூபாயை அல்லது இஎம்ஐ (EMI) தவணைகளை கூடுதலாக செலுத்த வேண்டி இருக்கும் என கணக்கு போடுவோம்.
வட்டி
மத்திய ரிசர்வ் வங்கி, ஏற்கனவே சொல்லி இருப்பது போல, இ எம் ஐ ஒத்திவைக்கலாம். ஆனால் அதற்கான வட்டியும் அதிகரிக்கத் தான் செய்யும் எனச் சொல்லி இருக்கிறார்கள் வங்கி தரப்பினர்கள். இந்த இ எம் ஐ ஒத்திவைப்பால், வாடிக்கையாளர்களுக்கு வட்டிச் சுமை பயங்கரமாக அதிகரிக்கும். எவ்வளவு அதிகரிக்கும் என்பதை உதாரணத்துடன் பார்ப்போம்.
உதாரணம்
சனா ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்க்கிறார். மாதம் 1 லட்சம் சம்பளம். அவர் வங்கியில் 10 % வட்டிக்கு, 20 ஆண்டுகளில் (240 மாத தவணை) திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் 55 லட்சம் ரூபாய் பாக்கி இருக்கிறது என வைத்துக் கொள்வோம். தற்போது மாதம் 53,076 ரூபாய் மாத இஎம்ஐ கடன் தவணையாக செலுத்திக் கொண்டு இருக்கிறார். இப்போது மேலே சொன்னது போல 6 மாத கடன் தவணைகளை ஒத்திப் போட்டுவிட்டார் எனவும் வைத்துக் கொள்வோம்.
மாதம் 1 மார்ச் 2020
மார்ச் 01, 2020 தேதிப் படி, மொத்த கடன் நிலுவைத் தொகை 55,00,000 ரூபாயாக இருக்கும். 55 லட்சம் ரூபாய்க்கு வட்டியை கணக்கிடுவார்கள். ஆக 55 லட்சம் ரூபாய்க்கு 45,833 ரூபாய் வட்டி வரும். முதல் மாதம் இஎம்ஐ (EMI) செலுத்தவில்லை என்பதால், இந்த வட்டித் தொகையை 55 லட்சம் ரூபாயுடன் சேர்த்து விடுவார்கள். ஆக 31 மார்ச் 2020 தேதி நிலவரப்படி, சனாவின் மொத்த கடன் நிலுவைத் தொகை 55,45,833 ரூபாயாக இருக்கும்.
மாதம் 2 - ஏப்ரல்
ஏப்ரல் 01, 2020 தேதிப் படி, மொத்த கடன் நிலுவைத் தொகை 55,45,833 ரூபாயாக இருக்கும். இதற்கு வட்டி கணக்கிட்டால் 46,215 ரூபாய் வட்டி வரும். இரண்டாம் மாதமும் இஎம்ஐ (EMI) செலுத்தவில்லை என்பதால், இந்த வட்டித் தொகையை 55,45,833 ரூபாயுடன் சேர்த்து விடுவார்கள். ஆக, 30 ஏப்ரல் 2020 தேதி நிலவரப்படி, சனாவின் மொத்த கடன் நிலுவைத் தொகை 55,92,049 ரூபாயாக அதிகரித்து இருக்கும்.
மாதம் 3 - மே
மே 01, 2020 தேதிப் படி, மொத்த கடன் நிலுவைத் தொகை 55,92,049 ரூபாயாக இருக்கும். இதற்கு வட்டி கணக்கிட்டால் 46,600 ரூபாய் வட்டி வரும். 3-ஆம் மாதமும் இஎம்ஐ (EMI) செலுத்தவில்லை என்பதால், இந்த வட்டித் தொகையை 55,92,049 ரூபாயுடன் சேர்த்து விடுவார்கள். ஆக 31 மே 2020 தேதி நிலவரப்படி, சனாவின் மொத்த கடன் நிலுவைத் தொகை 56,38,649 ரூபாயாக அதிகரித்து இருக்கும்.
மாதம் 4 ஜூன்
ஜூன் 01, 2020 தேதிப் படி, மொத்த கடன் நிலுவைத் தொகை 56,38,649 ரூபாயாக இருக்கும். இதற்கு வட்டி கணக்கிட்டால் 46,989 ரூபாய் வட்டி வரும். 4-ஆம் மாதமும் இஎம்ஐ (EMI) செலுத்தவில்லை என்பதால், இந்த வட்டித் தொகையை 56,38,649 ரூபாயுடன் சேர்த்து விடுவார்கள். ஆக 30 ஜூன் 2020 தேதி நிலவரப்படி, சனாவின் மொத்த கடன் நிலுவைத் தொகை 56,85,638 ரூபாயாக அதிகரித்து இருக்கும்.
மாதம் 5 ஜூலை
ஜூலை 01, 2020 தேதிப் படி, மொத்த கடன் நிலுவைத் தொகை 56,85,638 ரூபாயாக இருக்கும். இதற்கு வட்டி கணக்கிட்டால் 47,380 ரூபாய் வட்டி வரும். 5-ஆம் மாதமும் இஎம்ஐ (EMI) செலுத்தவில்லை என்பதால், இந்த வட்டித் தொகையை 56,85,638 ரூபாயுடன் சேர்த்து விடுவார்கள். ஆக 31 ஜூலை 2020 தேதி நிலவரப்படி, சனாவின் மொத்த கடன் நிலுவைத் தொகை 57,33,018 ரூபாயாக அதிகரித்து இருக்கும்.
மாதம் 6 ஆகஸ்ட்
ஆகஸ்ட் 01, 2020 தேதிப் படி, மொத்த கடன் நிலுவைத் தொகை 57,33,018 ரூபாயாக இருக்கும். இதற்கு வட்டி கணக்கிட்டால் 47,775 ரூபாய் வட்டி வரும். 6-ஆம் மாதமும் இஎம்ஐ (EMI) செலுத்தவில்லை என்பதால், இந்த வட்டித் தொகையை 57,33,018 ரூபாயுடன் சேர்த்து விடுவார்கள். ஆக 31 ஆகஸ்ட் 2020 தேதி நிலவரப்படி, சனாவின் மொத்த கடன் நிலுவைத் தொகை 57,80,793 ரூபாயாக அதிகரித்து இருக்கும்.
ரூ. 2,80,793 அசல் அதிகரிப்பு
ஆறு மாதங்களுக்கு முன் 55 லட்சம் ரூபாயாக இருந்த கடன் அசல் தொகை, 6 மாதங்களுக்குப் பின் 57.80 லட்சமாக அதிகரித்து இருக்கும். அசல் தொகை 2.8 லட்ச ரூபாய் அதிகரித்துவிட்டது. இப்போது இந்த கூடுதல் அசலுக்கு வட்டி, வட்டிக்கு குட்டி என பயங்கரமாக நாம் வங்கிக்குச் செலுத்த வேண்டி இருக்கும்.
இஎம்ஐ கூடும்
மேலே சொன்னது போல 57,80,793 ரூபாய் அசலுக்கு அதே 240 மாதங்களில் கடனை அடைக்க வேண்டும் என்றால் இஎம்ஐ தவணை 53,076 ரூபாயில் இருந்து 55,786 ரூபாயாக அதிகரிக்கும். சனா 6 மாத இஎம்ஐ தவணைகளை ஒத்திப் போடவில்லை என்றால் 72.38 லட்சம் வட்டியாகச் செலுத்துவார். ஆனால் இப்போது 6 மாத தவணைகளை ஒத்திப் போட்டதால் 76.07 லட்சம் செலுத்துவார். 3.69 லட்சம் வட்டி கூடுதலாகச் செலுத்துவார்.
அதே இஎம்ஐ-க்கு எவ்வளவு
தற்போது சனா செலுத்தும் 53,076 ரூபாய் இஎம்ஐ தொடர வேண்டும் என்றால், சனா 240 மாதங்களுக்கு பதிலாக, 288 மாதங்களுக்கு இஎம்ஐ செலுத்த வேண்டும். இந்த புதிய இஎம்ஐ 53,032 ரூபாயாக இருக்கும். சனா 6 மாத இஎம்ஐ தவணைகளை ஒத்திப் போடவில்லை என்றால் 72.38 லட்சம் வட்டியாகச் செலுத்துவார். ஆனால் இப்போது 6 மாதம் ஒத்திப் போட்டு, 288 மாதங்களுக்கு இஎம்ஐ நீட்டித்து இருப்பதால் 94.92 லட்சம் வட்டி செலுத்துவார். 22.54 லட்சம் ரூபாய் கூடுதலாக வட்டியைச் செலுத்துவார் நம் சனா.
ஒத்தி வைப்பு வேண்டாம்
எனவே மக்களே, இஎம்ஐ தவணைகளை ஒத்திப் போடுவதற்கு முன், இந்த கணக்கீடுகளை ஒரு முறை பார்த்துவிடுங்கள். கையில் பணம் இருந்தால் எப்படியாவது சமாளித்துவிடலாம் எனத் தோன்றினால் தயவு செய்து கடன் தவணைகளைச் செலுத்துங்கள். 6 மாத தவணை ஒத்திப் போட்டு பின் லட்சக் கணக்கில் கூடுதலாக வட்டி செலுத்தாதீர்கள்.


Click it and Unblock the Notifications