சேமிப்பு என்பது நல்ல விஷயம் தான். ஆனால் எவ்வளவு தொகையை முதலீடு செய்ய வேண்டும். எந்த திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்பது தான் முக்கியமான விஷயமே.
ஏனெனில் நெருக்கடியான காலகட்டத்தில் எதில் முதலீடு செய்தால், எதில் அதிக லாபம் ஈட்டலாம். இப்படி பல விஷயங்களை கவனிக்க வேண்டியுள்ளது.
அந்த வகையில் ஒரு முதலீட்டாளர் ஒருவர் மாதம் 5,000 ரூபாய் முதலீடு செய்ய தயாராக உள்ளார். அதுவும் 20 வருடங்களுக்கு முதலீடு செய்ய விரும்புகிறார். அவர் எந்த திட்ட திட்டத்தில் முதலீடு செய்யலாம். 20 வருடம் கழித்து அவருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்? மற்ற விவரங்கள் என்ன வாருங்கள் பார்க்கலாம்.
நெருக்கடியான நிலையில் மக்கள்
இன்றைய காலகட்டத்தில் நம்மில் பலரும் சேமிப்பின் அவசியத்தினை உணர்ந்திருப்போம். ஏனெனில் நிலவி வரும் நெருக்கடியான சமயத்தில் அடுத்து என்ன நடக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்த நிலையில் பல ஆயிரம் பேர் தங்களது வேலையினை இழந்து தவித்து வரும் நிலையில், இருக்கும் சேமிப்புகளை வைத்து காலத்தினை ஓட்டி வருகின்றனர். சேமிப்பு இல்லாதவர்கள் இன்னும் நெருக்கடியான நிலைக்கே தள்ளப்பட்டுள்ளனர்.
எவ்வளவு லாபம்?
அந்த வகையில் நிபுணர்களின் முதல் பரிந்துரை, மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வது தான். இதன் மூலம் 12% வரையில் லாபம் பெற முடியும். ஆக நிபுணர்களும் இதனை தான் பரிந்துரைக்கின்றனர். இந்த லாபத்தினை வைத்து பார்க்கும்போது 20 வருடங்களுக்கு பிறகு 50 லட்சம் ரூபாய் வரையில் கிடைக்கும். இந்த வருட காலகட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யக்கூடிய தொகை என்பது வெறும் 12 லட்சம் மட்டுமே. உங்களது இலக்கு அதிகம் எனில் ரிஸ்கும் எடுக்க வேண்டியிருக்கும்.
முதலீட்டு காலத்தினை அதிகப்படுத்தினால்?
இதே நீங்கள் 10,000 ரூபாய் மாதம், 20 வருடத்திற்கு முதலீடு செய்கிறீர்கள் என வைத்துக் கொண்டால், உங்களுக்கு கிட்டதட்ட 1 கோடி ரூபாய் வரையில் கிடைக்கும். மேற்கண்ட 5,000 ரூபாயினையே நீங்கள் இன்னும் சில வருடங்கள் நீட்டித்தால், அதாவது 25 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும்போது உங்கள் கையில் 95 லட்சம் ரூபாய் வரையில் கிடைக்கும்.
எப்போது ஆரம்பிக்கலாம்
ஆக உங்களது இலக்கினை பொறுத்து நீங்கள் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே முதலீடு செய்ய தொடங்கினால், பிறகு உங்களது ஓய்வுகாலத்தில் நல்ல லாபத்தினை பெறலாம். உதாரணத்திற்கு ஒருவர் தனது 23-வது வயதில் இந்த சேமிப்பினை தொடங்குகிறார் என வைத்துக் கொண்டால் தாரளாக 25 வருடம் தொடரலாம். அப்படி 23 வயதில் ஆரம்பித்தால், அவரது கையில் 48 வயதாகும்போது கணிசமான தொகை கிடைக்கும். ஆக அப்போதைய காலத்திற்கு ஏற்ப நீங்கள் மாற்றி முதலீடு செய்யலாம். அல்லது முடிந்தால் முதலீட்டினை அப்படியேவும் தொடரலாம்.
அரசு திட்டத்தில் முதலீடு
எனக்கு மியூச்சுவல் பண்டில் நம்பிக்கையில்லை, அரசு முதலீட்டு திட்டங்களில் இதே தொகையை முதலீடு செய்ய வேண்டும் எனில் அதற்கும் சிறந்த ஆப்சன்கள் இருக்கிறது. அதில் முதல் ஆப்சன் பிபிஎஃப் எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதி. இந்த திட்டத்தில் மாதம் 5000 ரூபாய் முதல் 25 ஆண்டுகளுக்கு முதலீடு செய்கிறீர்கள் எனில், 25 ஆண்டுகளுக்கு பிறகு நீங்கள் 15 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருப்பீர்கள். வட்டியும் முதலும் சேர்த்து உங்கள் கையில் 25 ஆண்டுகளுக்கு பிறகு 41,23,206 ரூபாய் கிடைக்கும்.
20 வருடங்கள் கழித்து எவ்வளவு?
இதுவே 20 ஆண்டுகளுக்கு அதே 5000 ரூபாயினை மாதம் முதலீடு செய்கிறீர்கள் என்றாலும், உங்கள் கையில் 26,63,315 ரூபாய் இருக்கும். இந்த திட்டத்தில் தற்போதைய வட்டி விகிதம் 7.1% ஆகும். ஆக இது அரசின் திட்டம், கணிசமான வருவாய், பாதுகாப்பு, சந்தை அபாயங்கள் இல்லை. எனினும் காலாண்டுக்கு ஒரு முறை நிலவரத்திற்கு ஏற்ப அரசு வட்டி விகிதத்தினை மாற்றியமைக்கிறது.
அரசின் கிசான் விகாஸ் திட்டம்
அரசின் கிசான் விகாஸ் திட்டத்தினை பொறுத்தவரையில் உங்கள் முதலீடு என்பது 10 ஆண்டு 4 மாதங்களில் இரட்டிப்பாகும். அரசின் இந்த சேமிப்பு திட்டத்தில் இணைய 18 வயது பூர்த்தியடைந்த எந்த ஒரு இந்திய குடிமகனும், இந்த திட்டத்தில் இணைய தகுதியானவர்கள் தான். இதில் குறைந்தபட்சம் ஆயிரம் முதல் அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.
சுகன்யா சம்ரிதி திட்டம்
இப்படி அரசின் ஏராளான திட்டங்கள் உள்ளன. அவற்றில் உங்களின் இலக்கிற்கு ஏற்ப முதலீடு செய்து லாபம் பெறலாம். இதே உங்களது பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக எனில், சுகன்யா சம்ரிதி திட்டத்தில் தொடங்கலாம். இதிலும் குறைந்தபட்சம் ஒவ்வொரு ஆண்டும் 1000 ரூபாய் தேவைப்படுகிறது. இதே ஒரு வருடத்தில் அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதில் மாதம் 5000 ரூபாய் முதலீடு, வருடத்திற்கு 60000 ரூபாய் முதலீடு செய்கிறீர்கள் என வைத்தால், நீங்கள் மொத்தம் 9,00,000 ரூபாய் முதலீடு செய்திருப்பீர்கள். 21 வருடம் கழித்து 25,46,062 லட்சம் ரூபாய் உங்களுக்கு கிடைக்கும்.