இன்றைய நடுத்தர மக்கள் பெரும்பாலானவர்களின் ஆசையே சொந்தமாக ஒரு வீடு வாங்க வேண்டும் என்பது தான். அப்படி ஒரு கனவை நிறைவேற்றும் திட்டம் தான் இந்த பிரதான் மந்திரியின் ஆவாஸ் யோஜனா திட்டம்.
இந்த திட்டத்தில் அப்படி என்ன ஸ்பெஷல் என்று கேட்கிறீர்களா, எல்லாமே ஸ்பெஷல் தான்.
மத்திய அரசின் அனைவருக்கும் வீடு என்ற திட்டம் தான், தற்போது பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் என்று மாற்றப்பட்டுள்ளது.
யாருக்கு இந்த வீடு
இந்தத் திட்டத்தில், பெண்கள், பொருளாதாரத்தில் அடித்தட்டு பிரிவினர், பழங்குடி மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், போன்ற பிரிவின் மக்களை மத்திய அரசாங்கமானது இலக்காக நிர்ணயம் செய்துள்ளது. இந்தப் பிரிவினர் வீடு வாங்க மானியமாக, ஒரு லட்சம் ரூபாய் முதல் 2 லட்சத்து முப்பதாயிரம் ரூபாய் வரையிலும் மானியமாக வழங்கப்பட்டு வருகின்றது.
இவர்களுக்கு தான் பொருந்தும்
ஆக பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியுள்ள ஒருவருக்கு, இதன் மூலம் எளிதாக வீடு கட்ட வாய்ப்பு கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தில் பெண்கள் பெயரில் இந்த வீடு கட்டுவது மிக எளிது. எனினும் பொருளாதாரத்தில் மிக பின் தங்கியவர்கள் என நிரூபிக்க சரியான ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க என்ன தகுதி
இந்த பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரரின் குடும்பத்திற்கு வேறேங்கும் வீடு இருக்க கூடாது. மேலும் வீடு தொடர்பாக மத்திய மாநில அரசுகளிடம் வேறு எந்த சலுகையும் பெற்றிருக்கக்கூடாது. திருமணமானவர்கள் அல்லது தனியாகவோ, அல்லது இருவரும் இணைந்தோ கூட விண்ணப்பிக்கலாம்.
சரி எங்கு வீடு கட்டலாம்
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் மாநகரம், நகரம், பேரூராட்சி, டவுன் பஞ்சாயத்து என இந்தியா முழுவதும் வீடு கட்டுபவர்களுக்கும் அல்லது புதியதாக வீடு வாங்குபவர்களுக்கும் இந்த வட்டி மானியம் கிடைக்கும். மொத்தத்தில் பொருளாதாரத்தில் நலிவுற்றோர், குறைந்த வருமான பிரிவினர் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறலாம்.
என்னென்ன ஆவணங்கள் தேவை
முகவரி சான்றாக ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பயன்பாட்டு பில்கள், வாடகை ஒப்பந்த பத்திரம், லைஃப் இன்சூரன்ஸ் திட்டத்திற்கான ஆவணம், வீட்டு முகவரிக்கான சான்று, பேங்க் அக்கவுண்ட் ஸ்டேட்மென்ட், ப்ராபர்டி டேக்ஸ் ரசீது உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்று ஆவணமாக எடுத்துக் கொள்ளப்படும்.
இதே அடையாள சான்றாக பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், அரசு வழங்கிய போட்டோ பதிந்த அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்று ஆவணமாக ஏற்றுக் கொள்ளப்படும்.
வருமான சான்றிதழ், கடைசி ஆறு மாத பேங்க் ஸ்டேட்மெண்ட் அல்லது கடைசி 2 மாத பே சிலிப் அல்லது ஐடிஆர் பைலிங்க் செய்த ஆவணம் உள்ளிட்டவை தேவைப்படும்.
ஆன்லைனில் எப்படி விண்ணப்பம் செய்வது?
இணையத்தில் இந்த பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் இணைந்து பயன் பெற, https://pmaymis.gov.in/ என்ற இணையத்தளத்திற்கு செல்லவும்.
அங்கு citizen assessment என்பதை கிளிக் செய்து, அதில் வரும் நான்கு வகையான திட்டங்களில் உங்களுக்கு தேவையானதை தேர்தெடுத்து உள்ளே செல்லவும்.
அவ்வாறு கிளிக் செய்யும் போது அது உங்களுக்கான பக்கத்தில் சென்று நிற்கும். இங்கு உங்களது ஆதார் நம்பரை பதிவு செய்து, உங்களது விவரங்களை சரி பார்த்துக் கொள்ளுங்கள்.
இதன் பிறகு நீங்கள் கொடுக்க முழு விவரங்களையும் சரியாக கொடுத்து PMAY விண்ணப்பத்தினை முழுமையாக நிரப்ப வேண்டும். இதன் பிறகு கடைசியாக captcha என்ற விவரங்களை கேட்கும், அதனை சரியாக கொடுத்து, உங்களது பதிவினை சமர்பிக்கவும்.
ஆஃப்லைனில் எப்படி விண்ணப்பிப்பது
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்திற்காக ஆஃப் லைனில் விண்ணப்பிக்க, அருகில் உள்ள காமன் சர்வீஸ் செண்டருக்கு செல்லலாம். அல்லது நீங்கள் வங்கி அல்லது வங்கி அல்லாத நிதி நிறுவனத்திற்கும் செல்லலாம். அல்லது ஹவுஸிங் பைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கும் சென்று விண்ணப்பிக்கலாம். இங்கு சென்று விண்ணப்பிப்பதற்கு முன்பு, நீங்கள் இதற்கு தகுதியானவர் தானா இதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை என்பதையும் தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.