குறுகிய காலத்தில் கடன். குறைந்த ஆவணங்கள் இருந்தால் போதும், ஆன்லைனில் பதிவு செய்தால் போதும். என்று பல செயலிகளில் தொடர்ந்து மெசேஜ் வருவதை பார்த்திருப்போம்.
ஏன்? ஒரு முறை நீங்கள் பதிவிட்டு விட்டால், தினசரி 4 -5 மேசேஜ், அடிக்கடி கால்கள், என உங்களை தொடர்ந்து கூப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள்.
அப்படிப்பட்ட ஆன்லைன் செயலிகள் அங்கீகரிப்பட்டதா? இல்லையா? என எப்படி தெரிந்து கொள்வது? வாருங்கள் பார்க்கலாம்.
ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
ரிசர்வ் வங்கி சமீபத்தில், பதிவு செய்த வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களில் மட்டுமே கடன் பெற வேண்டும். மேலும் அடையாளம் தெரியாதவர்களிடம் தங்களது வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்களை தர வேண்டாம். செயலி மூலம் கடன் வழங்கும் நிறுவனங்கள் குறித்து, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறுகிய காலத்தில் கடன் கிடைப்பதாக கூறி அங்கீகாரம் இல்லாத, செல்போன் செயலிகள் மூலம் கடன் பெற வேண்டாம் என ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.
உடனடி கடன்
உங்களுக்கு அவசரமாக கடன் தேவைப்படும்போது நீங்கள், இந்த ஆப்களின் முழுமையான விவரம் பற்றி தெரிந்து கொள்வதில் கவனம் செலுத்த மாட்டீர்கள். ஆனால் அதுவே உங்களுக்கு பின்னாளில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். ஏனெனில் இந்த நிறுவனங்கள் நிமிடங்களில் கடனை வழங்குகின்றன. இந்த நிலையில் கடன் வாங்குபவர்கள் இவர்கள் பதிவு செய்தவர்களா? சட்ட ரீதியாக பதிவு செய்யப்பட்டவர்களா என்பதை ஆராய்வதில்லை.
கடன் வாங்கும் முன்பே தெரிந்து கொள்ளுங்கள்
கடன் வழங்கும் நிறுவனங்கள் எப்படி நீங்கள் கடன் வாங்குவதற்கு முன்பே உங்களது கேஒய்சி விவரங்களை வாங்கி சரி பார்க்கின்றனவோ? அதே போல நீங்களும் கடனுக்காக விண்ணபிக்கும் முன்பு கடன் வழங்குனரை பற்றி அறிந்திருக்க வேண்டும். குறிப்பாக ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களை அடையாளம் காண வேண்டும். அப்படி ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்படவில்லை என்றால் அதனை தவிர்ப்பது நல்லது.
இணையதளத்தினை பாருங்கள்
பல அங்கீகரிப்படாத மோசடியான ஆப்கள் உள்ளன. அவர்களுக்கு இணையதளம் என்பது கிடையாது. ஆக நிச்சயம் அவற்றை தவிர்க்க வேண்டும். அதற்காக இணையதளம் இருந்தால் மட்டும் கடன் வாங்கிவிடலாமா? என்றால் நிச்சயம் கூடாது. ஏனெனில் அந்த நிறுவனம் ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்பட்டுள்ளதா? இல்லையா? என உள்ளிட்ட விவரங்களை பார்க்க வேண்டும், அப்படி பதிவு செய்திருந்தால் அதன் CIN நம்பரை அடையாளம் காண வேண்டும். இது தவிர ரிசர்வ் வங்கியின் பதிவு சான்று விவரங்கள் என பலவற்றையும் கவனிக்க வேண்டும்.
KYC விதிகளை பாருங்கள்
அப்படி ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்பட்டதாக இருந்தால், அதன் கேஓய்சி விதிமுறைகளை சரி பார்க்க வேண்டும். அந்த விதிமுறைகள் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுடன் ஒத்து போகிறதா? என்று பார்க்க வேண்டும். ஆக அதனுடன் இணைந்து போனால் அவர்கள் ரிசர்வ் வங்கியில் பதிவு செய்துள்ளார்கள் என தெரிந்து கொள்ளலாம்.
மதிப்புரைகளை பாருங்கள்
இறுதியாக பிளே ஸ்டோரில் உள்ள மதிப்புரைகளை பாருங்கள். ஏனெனில் முன்பே அந்த ஆப்பினை பதிவிறக்கம் செய்து, கடன் வாங்கியவர்கள் அவர்களது நிறை குறைகளை பதிவிட்டிருப்பர். ஆக இதுவும் உங்களுக்கு கடன் வழங்கும் நிறுவனத்தினை பற்றி அறிந்து கொள்ள உதவும். உண்மையில் கடன் வாங்குவதற்கு முன்பே ஒரு 5 நிமிடம் செலவிட்டு இதனை செய்துவிட்டு, பின் கடன் வாங்கினால், பின்னாளில் வரும் சிரமங்களை தவிர்க்கலாம். பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டிய அவசியம் இருக்காதில்லையா?