சென்னை: இன்றைய காலகட்டத்தில் இன்சூரன்ஸ் திட்டம் என்பது அவசியமான ஒன்றாகும்.
ஆனால் நாட்டில் பல இன்சூரன்ஸ் நிறுவனங்கள் உள்ள நிலையில் உங்களுக்கான பாலிசிகளை எப்படி தேர்வு செய்வது? வாருங்கள் பார்க்கலாம்.
பொதுவாக உங்களின் தேவை மற்றும் முதலீட்டு தகுதியினை பொறுத்தே பாலிசியினை தேர்வு செய்யலாம்.
உங்களது எதிர்பார்ப்பு என்ன? உதாரனத்திற்கு உங்களது மகன் அல்லது மகளுக்கு கல்வி மற்றும் திருமண செலவினங்களுக்காக திட்டமிடுகிறீர்கள் எனில், அதற்கு சுமார் 10 லட்சம் ரூபாய் செலவாகிறது என வைத்து கொள்வோம். ஆக அதற்கேற்றவாறு உங்களது மகளின் வயது மற்றும் 10 லட்சம் ரூபாய் இலக்கிற்கு ஏற்றவாறு ஒரு பாலிசியினை தேர்வு செய்யலாம். இதே உங்களுக்கு உடல் நிலை சரியில்லை. ஏதேனும் உங்களுக்கு ஏதேனும் சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. அதற்கு செலவாகலாம் எனும் பட்சத்தில் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளை திட்டமிட்டு போட்டு வைக்கலாம்.
உங்களுக்கு காப்பீடு மட்டும் தான் உங்களுடைய நோக்கம் என்றால், டெர்ம் பாலிசியினை தேர்தெடுக்கலாம். ஏனெனில் குறைவான பிரீமியத்தில் கவரேஜ் அதிகம் கிடைக்கும்.
இதே பாதுகாப்போடு சேர்த்து கணிசமான தொகை கிடைத்தால் போதும் என்பவர்கள் எண்டோவ் மென்ட் பாலிசியை எடுத்துக் கொள்ளலாம். இந்த பாலிசியில் குறிப்பிட்ட இடைவெளியிலும் பணம் வரும்.
அதே பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் என தனித்தனியாக பல பாலிசிகள் உள்ளன. ஆக அவரவர் தேவையை பொறுத்து பாலிசிகளை தேர்வு செய்யலாம். இதே வயதானர்வர்களுக்கு பென்ஷன் திட்டங்கள் உண்டு. இது முழுமையான முதலீட்டு திட்டம் என்றே கூறலாம். இதில் குறிப்பிட்ட கால இடைவெளியில் பிரீமியம் செலுத்தினால் போதும். உங்களுக்கு எந்த வயதில் இருந்து ஒய்வூதியம் தேவைப்படுகிறதோ அதற்கேற்றாற் போல், உங்கள் குறிப்பிட்ட வயதிற்குமேல் பென்ஷன் கிடைக்கலாம். .
சிலர் தங்களின் பொருளாதார நலன் கருதி முதலீடு செய்கின்றனர். அதாவது இன்சூரன்ஸ் பாலிசியினை எடுக்கின்றனர். பாலிசிகளுக்கு எதிராக நீங்கள் வங்கிகளில் கடன் கூட வாங்க முடியும். இதனுடன் வரிச்சலுகை மற்றும் விரிவான பல விருப்பங்களினால் பாலிசிகள் எடுக்கப்படுகின்றன.
அடிப்படையில் உங்கள் குடும்பத்திற்கும், உங்களை சார்ந்தோருக்கும் உங்களின் இறப்பினை யாராலும் ஈடு கட்ட முடியாது. ஆனால் நிதி ரீதியில் ஆவது அவர்களுக்கு இந்த பாலிசிகள் மிகப்பெரும் உதவியாக இருக்கும் அல்லவா? ஆக உங்களுக்கு ஏற்றவாறு ஒரு பாலிசியினை நீங்களே தேர்வு செய்யலாம். அல்லது உங்களது தேவையை கூறினால் அதற்கேற்றவாறு நிறுவனங்களே பரிந்துரைக்கும்.