தனியார் துறையை சேர்ந்த ஐடிஎஃப்சி பர்ஸ்ட் வங்கியானது ஜீரோ ப்ரீ பேங்கிங் சேவையை (idfc first bank zero fee banking) அதன் சேமிப்பு கணக்கில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த கணக்கில் பலவகையான அடிக்கடி பயன்படுத்தும் சேவைகளுக்கும் கட்டண சேவைகளுக்கும் கட்டணத்தை நீக்கியுள்ளது. இதில் சேமிப்பு கணக்கு, கேஷ் டெபாசிட், வங்கி கிளைகளில் பணம் எடுத்தல், மூன்றாம் தரப்பு பண பரிவர்த்தனை, ஐஎம்பிஎஸ் சேவை, நெஃப்ட் சேவை, ஆர்டிஜிஎஸ் சேவை, காசோலை புத்தகம், எஸ் எம் எஸ் சேவை, வட்டி சான்றிதழ், ஏடிஎம் பரிவர்த்தனைகளின் போது போதிய இருப்பு இல்லாமை, சர்வதேச ஏடிஎம் சேவை என பல சேவைகளுக்கான கட்டணத்தினை நீக்கியுள்ளது.
யாருக்கு இந்த சேவை?
ஐடிஎஃப்சி பர்ஸ்ட் வங்கியில் கிடைக்கும் இந்த சேவையானது, வாடிக்கையாளர்கள் சராசரியாக 10000 ருபாய் மற்றும் 25,000 ரூபாய் இருப்பினை வைத்திருப்பவர்களுக்கு பொருந்தும் என அறிவித்துள்ளது.
இதன் மூலம் வாடிக்கையாளர்கள் பெரியளவில் பலனடையலாம் எனலாம். குறிப்பாக மிகப்பெரிய அளவில் பரிவர்த்தனையில் ஈடுபடும் வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவையானது மிக உதவிகரமாக இருக்கும்.
விழிப்புணர்வு இல்லை
ஐடிஎஃப்சி பர்ஸ்ட் வங்கி இது குறித்த அறிக்கையில், பல வாடிக்கையாளர்களும் கட்டணங்கள் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாமல் உள்ளனர். ஐடிஎஃப்சி வங்கியின் இந்த முயற்சியானது, வங்கி சேவைகளை வாடிக்கையாளர்கள் மிக எளிதாகவும், வெளிப்படையாகவும் பெற உதவும்.
25 சேவைகளுக்கு கட்டணம் இல்லை
குறிப்பாக வாடிக்கையாளர்கள் அதிகம் பயன்படுத்தும் 25 சேவைகளுக்கான கட்டணங்களை நாங்கள் தள்ளுபடி செய்துள்ளோம். இதனால் வாடிக்கையாளர்கள் நிம்மதியாக பரிவர்த்தனையை செய்து கொள்ள முடியும் என இவ்வங்கி தெரிவித்துள்ளது. மொத்தத்தில் வாடிக்கையாளர்களை கவர பற்பல சலுகைகளை இந்த தனியார் வங்கி நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
மிச்சப்படுத்தலாம்
இன்று முன்னணி வங்கிகளில் கூட 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம், காசோலை புத்தகத்திற்கு கட்டணம், ஏடிஎம் மூலம் பரிவர்த்தனை உள்ளிட்ட பல ஆப்சன்களுக்கும் கட்டணம் உண்டு, ஆனால் ஐடிஎஃப்சியின் இந்த சேவையின் மூலம் கணிசமான தொகையை மிச்சப்படுத்த முடியும் எனலாம்.