இரு சக்கர வாகனங்களில் பாலிசி எடுப்பவர்களில் பலரும் அதனை தொடர்ந்து புதுபிப்பதே கிடையாதாம். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால் இந்தியாவில் 75% பேர் இருசக்கர வாகனத்திற்கு பாலிசி இல்லாமல் தான் உள்ளனர் என்று ஒரு அறிக்கை கூறுகிறது.
இதில் குறிப்பாக நகர்புறங்களை விட மக்கள், கிராமப்புறங்களில் இதனை பற்றிய விழிப்புணர்வு என்பது இல்லாமல் தான் இருக்கிறார்களாம். இவர்கள் இதற்கு கூறும் முக்கிய காரணமே இதனை பற்றி விழிப்புணர்வு இல்லாமை மற்றும் நேரமின்மை என்பது தான்.
பொதுவாக இரு சக்கர வாகன பாலிசியில் இரு வகை உள்ளது.
ஓன் டேமேஜ் பாலிசி (Own Damage policy)
மூன்றாம் நபர் பாலிசி (Third party insurance)
ஓன் டேமேஜ் பாலிசி
இந்த ஓன் டேமேஜ் பாலிசியில் விபத்து என்று மட்டுமில்லாமல் மழை - வெள்ளம், தீ, திருட்டு என்று எந்த வடிவத்தில் வாகனத்துக்குச் சேதம் நிகழ்ந்தாலும், அந்தப் பாதிப்புக்கு இழப்பீடு கிடைக்க வழி செய்வதுதான் ஓன் டேமேஜ் பாலிசி (Own Damage Policy).
இந்த ஓன் டேமேஜ் பாலிசியில் தீ விபத்து, குண்டு வெடித்தல், வாகனம் தானே தீப்பற்றிக் கொள்ளுதல், மின்னல் தாக்குதல், கொள்ளை, கலவரம் மற்றும் போராட்டம், பூகம்பம், வெள்ளம், புயல் என இயற்கை பேரிடர்களாலும், தீவிரவாத செயல்களாலும் சாலை, ரயில், கப்பல், விமானம், லிஃப்ட், எலிவேட்டர் போன்றவற்றில் எடுத்துச் செல்லும் போது சேதம் அடைந்தாலும், நிலம் மற்றும் பாறை சரிவு போன்ற காரணங்களாலும் வாகனத்துக்கு ஏற்படும் பாதிப்பு/சேதத்துக்கு இழப்பீடு வழங்கப்படும்.
சுருக்கமாகச் சொன்னால், தேர்ட் பார்ட்டி இன்சூரன்ஸ் - வாகனத்தின் மூலம் பிறருக்கு ஏற்படும் இழப்பையும், ஓன் டேமேஜ் பாலிசி - வாகன உரிமையாளருக்கு ஏற்படும் நஷ்டத்தையும் ஈடு செய்யும் விதமாக அமையும்.
மூன்றாம் நபர் பாலிசி
மூன்றாம் நபர் பாலிசியானது, நம்முடைய வாகனம் மோதி, யார் என்றே தெரியாத மூன்றாம் நபர் காயமடைந்தாலோ அல்லது உயிரிழந்தாலோ, அவர்கள் ஓட்டி வந்த வாகனத்துக்கு சேதம் ஏற்பட்டாலோ இழப்பீடு கொடுப்பது நமது கடமை. ஆனால் பலருக்கும் இந்த இழப்பீட்டை வழங்க வசதி வாய்ப்பு இருக்காது.
இதே சிலருக்கு வசதி இருந்தாலும் கொடுக்க மனது இருக்காது. இதுபோன்ற நிலையில் கை கொடுப்பதுதான் இந்த மூன்றாம் நபர் பாலிசி. இதன்படி, பாதிக்கப்பட்ட மூன்றாம் நபருக்கு இன்சூரன்ஸ் நிறுவனமே இழப்பீட்டை வழங்கி விடும். இதில் நல்ல விஷயம் என்னவெனில் வாகன ஓட்டிகள் இந்த பாலிசியை எடுப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது தான்.
உங்கள் இரு சக்கர வாகன பிரீமியம் எப்படி நிர்ணயிக்கிறார்கள்?
மோட்டார் இன்சூரன்ஸில் பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் பிரீமியம் நிர்ணயிக்கப்படுகிறது. பொதுவாக, வாகனத்தின் திறன், வாகன மாடல் (உற்பத்தி செய்யப்பட்ட ஆண்டு), அதன் பயன்பாடு, அது உபயோகிக்கப்படும் ஏரியா, பாலிசிதாரர் இதற்கு முன் கிளைம் செய்த விவரம், இன்சூரன்ஸ் தொகை, பிராண்ட் மதிப்பு போன்றவற்றைப் பொறுத்து பிரீமியம் தொகை நிர்ணயிக்கப்படும்.
மூன்றாம் நபர் பாலிசிக்கான பிரீமியம், வாகனத்தின் செயல் திறனைப் பொறுத்து அமையும். இரு சக்கர வாகனங்களுக்கு 250 சிசிக்குக் கீழ் மற்றும் 250 சிசிக்கு மேல் சிசி அதிகரிக்க அதிகரிக்க பிரீமியம் அதிகமாகும். இதே ஓன் டேமேஜ் பாலிசிக்கான பிரீமியம் வாகனத்தின் சந்தை மதிப்பு மற்றும் வாகனத்தின் செயல் திறனைச் சார்ந்திருக்கும். இதிலும், சிசி அடிப்படையில் பிரீமியம் மாறுபடும்.