கொரோனா காரணமாக வருமான வரி தாக்கல் செய்ய அரசு போதிய கால அவகாசம் கொடுத்திருந்தும், இன்னும் நீங்கள் வருமான வரியை தாக்கல் செய்யவில்லையா? அப்படி என்றால் இது உங்களுக்கான ஒரு செய்தி தான்.
2019 - 20ம் நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், இதுவரை நீங்கள் செய்யாவிட்டல் விரைந்து தாக்கல் செய்திடுங்கள்.
அப்படி ஒரு வேளை நீங்கள் செய்யாவிட்டால் இழப்பு உங்களுக்கு தான்.
எவ்வளவு அபராதம்
இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மற்றும் ஆஃப் லைனில் வருமான வரி தாக்கல் செய்ய பல வழிகள் உள்ளன. ஆனால் அப்படி இருந்தும் அரசு கொடுத்த கால அவகாசத்திற்குள் தாக்கல் செய்யாவிட்டால், 234F பிரிவின் படி, உங்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம். ஆக உங்களது வருமான வரி தாக்கலை ஜனவரி 1க்கு பின்பு செய்தால், உங்களுக்கு 10,000 ரூபாய் வரை அபராதமாக விதிக்கப்படலாம்.
அபராதம் அதிகரிப்பு
இந்த அபராதம் உங்களது வருமானத்தின் அடிப்படையில் விதிக்கப்படும். கடந்த ஆண்டு இந்த அபராத தொகை 5,000 ரூபாயாக இருந்த நிலையில், இந்தாண்டில் அது இருமடங்காக அதிகரிக்கப்பட்டு 10,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த அபராதம் அல்லது தாமதமாக தாக்கல் செய்வதற்கான கட்டணம், உங்கள் நிகர மொத்த வருமானம் அதாவது, தகுதியான கழிவுகள் மற்றும் வரி விலக்குகளை கோரிய பிறகான வருமானம், 5 லட்சம் ரூபாயை தாண்டினால் மட்டுமே வசூலிக்கப்படும்.
வரி விலக்கும் கிடைக்காது
அதோடு வருமான வரியை தாமதமாக தாக்கல் செய்தால், வருமான வரி விலக்கு மிக குறைவாகவே கிடைக்கும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இதனால் வருமான வரி விலக்கு கிடைக்காது என்பதோடு, வரி செலுத்துவோர் அபராதமும் செலுத்த வேண்டியிருக்கும். வருமான வரியை தாமதமாக தாக்கல் செய்யும் போது, வரி செலுத்துவோர் வீட்டிற்கு ஏற்பட்ட சேதத்தைத் தவிர, வேறு எந்த வகையான இழப்பையும் அடுத்த வருடத்திற்கு கேரி பார்வேர்ட் செய்ய இயலாது.
இந்த சலுகையெல்லாம் கிடைக்காது
குறிப்பாக இவற்றில், வருமான வரிச் சட்டத்தின் பிரிவு -10 ஏ மற்றும் பிரிவு -10 பி ஆகியவற்றின் கீழ் விலக்கு கிடைக்காது. பிரிவு 80 IA, 80IAB, 80IC, 80ID மற்றும் 80IE இன் கீழ் கிடைக்கும் விலக்குகளையும் இழக்க நேரிடும். அதோடு வருமான வரி தாக்கல் செய்ய தாமதமானால், வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 234ஏ இன் கீழ், வரி செலுத்துவோர் ஒவ்வொரு மாதமும் 1 சதவீதம் என்ற விகிதத்தில் வட்டி செலுத்த வேண்டும்.