இந்திய அரசு, கடன் வாங்கும் இலக்கை கொரோனா வைரஸ் பாதிப்பதற்கு முன்பு 7.8 லட்சம் கோடி ரூபாயாக வைத்திருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் இந்திய பொருளாதாரத்துக்கு ஏற்படுத்தி இருக்கும் பாதிப்புகளைச் சரி செய்ய, நிறைய பணம் தேவைப்படுகிறது.
எனவே கடந்த வெள்ளிக்கிழமையே, மத்திய அரசு, கடன் வாங்குவதற்கான இலக்கை 12 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து இருக்கிறார்கள். இந்த தீர்மானத்தை மத்திய அரசு தன்னிச்சையாக எடுக்காமல், மத்திய ரிசர்வ் வங்கி உடன் கலந்தாலோசித்த பின் தான் எடுத்து இருக்கிறார்களாம்.
இன்று மே 11. 2020 முதல் ஒவ்வொரு வாரமும் அதிகபட்சமாக 30,000 கோடி ரூபாய் மதிப்பிலான பாண்டுகள் ஏலம் விடப்படுமாம்.
30,000 கோடி ரூபாய்க்கு 2 வருட பாண்டுகள்
1.2 லட்சம் கோடி ரூபாய்க்கு 5 வருட பாண்டுகள்
1.8 லட்சம் கோடி ரூபாய்க்கு 10 வருட பாண்டுகள்
1.1 லட்சம் கோடி ரூபாய்க்கு 14 வருட பாண்டுகள்
70,000 கோடி ரூபாய்க்கு 30 வருட பாண்டுகள்
50,000 கோடி ரூபாய்க்கு 40 வருட பாண்டுகள்
40,000 கோடி ரூபாய்க்கு 2 வருட பாண்டுகள்
என இந்த 2020 - 21 நிதி ஆண்டின், முதல் அரையாண்டுக்குள் 6 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு திரட்ட இருக்கிறதாம்.
இதனால் பாண்டுகளுக்கான வருமான விகிதம் (Bond Yield) அதிகரித்து இருக்கிறது. வழக்கம் போல பாண்டுகளின் வருமான விகிதம் (Bond Yield) அதிகரித்தால், பாண்டுகளின் விலை சரியும். அதே போல இந்த முறையும் பாண்டுகள் விலை சரிந்து இருக்கிறது.
10 ஆண்டுகளுக்கான பாண்ட்களின் வருமான விகிதம் (Bond Yield) 5.98 %-ல் இருந்து, 6.19 %-மாக அதிகரித்து இருக்கிறது. இது கடந்த பிப்ரவரி 2017-க்குப் பின், 10 வருட பாண்டுகள் காணும் மிகப் பெரிய வருமான விகித ஏற்றம் என்கிறார்கள்.
பொதுவாக நிறைய பாண்டுகள் சந்தைக்கு வரும் போது, ஒரு பக்கம் பாண்டுகளின் விலை குறையும், மறு பக்கம் பாண்டுகளின் வருமான விகித அதிகரிக்கும்.
அது தான் இப்போது நடந்து கொண்டு இருக்கிறது. இந்திய பாண்டு சந்தைகளில், இப்படி திடீரென எதிர்பார்த்ததை விட கிட்டத்தட்ட 54 சதவிகிதம் அதிக பாண்டு பத்திரங்கள் வரத் தொடங்கி இருக்கின்றன.
7.8 லட்சம் கோடிக்கு பதிலாக 12 லட்சம் கோடி வரப் போகிறது என்பதால், பாண்டுகளின் வருமான விகிதங்கள் அதிகரித்துவிட்டன, அதற்கு நேர்மாறாக வழக்கம் போல பாண்டுகளின் விலை சரியத் தொடங்கி இருக்கின்றன.