கடந்த மார்ச் 2020-ல் கொரோனா லாக் டவுன் தொடங்கிய போது, மத்திய ரிசர்வ் வங்கி, கடன்களுக்கான தவணைகளைச் செலுத்துவதை ஒத்திப் போட்டுக் கொள்ளலாம் என ஒரு சலுகையை அறிவித்தது. இதை ஆங்கிலத்தில் EMI Moratorium என்போம்.
இந்த மாரடோரியம் வசதியை கடந்த ஆறு மாதங்களுக்குப் பயன்படுத்திக் கொண்டவர்கள், வங்கிக்குச் செலுத்த வேண்டிய வட்டியைச் செலுத்தாததால், வட்டிக்கு வட்டி போட்டு வசூலிக்கத் தொடங்கின வங்கிகள்.
இதனால் கடன் வாங்கியவர்கள், கூடுதல் காலத்துக்கு கடன் தவணைகளைச் செலுத்த வேண்டி வந்தது அல்லது இ எம் ஐ தொகையை கூடுதலாகச் செலுத்த வேண்டி வந்தது.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
இப்படி வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள், வட்டிக்கு வட்டி வசூலிப்பதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், ஆக்ராவைச் சேர்ந்த கஜேந்திர சர்மா உட்பட பலர் வழக்கு தொடுத்தனர். உச்ச நீதிமன்றமும், வட்டிக்கு வட்டி வசூலிப்பதைக் குறித்து, மத்திய அரசு விளக்கம் தர வேண்டும் எனச் சொன்னது.
முதலில் மறுப்பு
தொடக்கத்தில், வட்டிக்கு வட்டி (Interest on Interest) வசூலிப்பதை தள்ளுபடி செய்ய முடியாது என்றது மத்திய அரசு. வட்டியைத் தள்ளுபடி செய்தால், வங்கிகளின் நிதி நிலையும், வங்கிகளின் ஸ்திரத் தன்மையும் கேள்விக் குறியாகும் என, மத்திய ரிசர்வ் வங்கிக்கு சாதகமாகவே பேசியது மத்திய அரசு.
முன்னாள் CAG தலைமையில் நிபுணர் குழு
வட்டிக்கு வட்டி வசூலிப்பது குறித்து, ஒரு அறிக்கையை சமர்பிக்க, முன்னாள் சி ஏ ஜி ராஜிவ் மெஹ்ரிஷி தலைமையில் ஒரு நிபுணர் குழுவை அமைத்தது மத்திய அரசு. இந்த நிபுணர் குழுவில் முன்னாள் ஐஐஎம் பேராசிரியர் ரவீந்திரா தொலாக்கியா, முன்னாள் எஸ்பிஐ நிர்வாக இயக்குநர் ஸ்ரீராம் போன்றவர்களும் இருந்தார்கள்.
வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்ய சம்மதம்
நிபுணர் குழுவின் அறிக்கைக்குப் பிறகு, மத்திய அரசு, கடனுக்கான வட்டிக்கு வட்டியைத் தள்ளுபடி செய்ய சம்மதித்து இருக்கிறது. இதை உச்ச நீதிமன்றத்தில், நேற்று (02 அக் 2020) தெரிவித்து இருக்கிறது மத்திய அரசு. சரி யார் எல்லாம் இந்த வட்டிக்கு வட்டி தள்ளுபடியைப் பெறலாம்? வாருங்கள் பார்ப்போம்.
2 கோடி ரூபாய்க்குள்
மார்ச் 2020 முதல் ஆகஸ்ட் 2020 வரையான 6 மாத மாரடோரியம் காலத்துக்கு, வட்டிக்கு வட்டி (Interest on Interest) தள்ளுபடி செய்யும் வசதியை, 2 கோடி ரூபாய்க்குள் கடன் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பொருந்துமாம். இது தனி நபர்கள் மற்றும் MSME நிறுவனங்களுக்கு பொருந்தும் என்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா.
எந்த கடன்களுக்கு எல்லாம் உண்டு
சிறு குறு தொழில்முனைவோர்களுக்கான கடன்கள், கல்விக் கடன்கள், வீட்டுக் கடன்கள், வாகனக் கடன்கள், கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ் கடன்கள், க்ரெடிட் கார்ட் கடன்கள், தனி நபர் கடன்கள் (Personal Loan), நுகர்வுக் கடன்கள் போன்றவைகளுக்கு எல்லாம் வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்யப்படும் என மத்திய நிதி அமைச்சகம் சொல்லி இருக்கிறது.
கடனை சரியாகச் செலுத்தியவர்களுக்கு
மார்ச் 2020 முதல் ஆகஸ்ட் 2020 வரையான காலத்தில், இ எம் ஐ தவணைகளை ஒத்திப் போடாமல் சரியாகச் செலுத்தியவர்களுக்கும் சில நன்மைகளை வழங்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ஆனால் என்ன நன்மைகளை வழங்க இருக்கிறார்கள் என்பது குறித்து தெளிவான விவரங்கள் வெளியாகவில்லை.
அரசுத் தரப்பு
நேற்று (02 அக் 2020), மத்திய நிதி அமைச்சகம், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் "மத்திய அரசு வழக்கம் போல, சிறு கடனாளிகளின் வட்டிக்கு வட்டி (கூட்டு வட்டி) சுமையை ஏற்றுக் கொள்ள தீர்மானித்து இருக்கிறது" எனச் சொல்லி இருக்கிறது.
அரசுக்கு சுமை
மேலே சொல்லி இருப்பது போல, 2 கோடி ரூபாய்க்குள் கடன் வாங்கி இருப்பவர்களுக்கு மட்டும், வட்டிக்கு வட்டி போடுவது தள்ளுபடி செய்வதால், வங்கிகளுக்கு 5,000 - 6,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படலாம் எனக் கணித்து இருக்கிறார்கள் வங்கியாளர்கள். இதுவே எல்லா கடன்களுக்கும், வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்தால் சுமாராக 10,000 - 15,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என வங்கியாளர்கள் கணித்து இருப்பதாகச் சொல்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா.