கொரோனா வைரஸ் லாக் டவுனால், வருமான வரிப் படிவங்களில் பல மாற்றங்களை செய்து கொண்டு இருக்கிறது மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வருமான வரித் துறை.
இப்போது அரசு கொடுத்து இருக்கும் ஏகப்பட்ட சலுகைகளை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு வருமான வரிப் படிவங்களை மாற்றிக் கொண்டு இருக்கிறார்களாம்.
2019 - 20 நிதி ஆண்டுக்கான (Financial Year) வருமான வரிக் கணக்குகளை கணக்கீட்டு, 2020 - 21-ம் ஆண்டில் (Assessment Year) சமர்பிக்க வேண்டும். அதற்கான வருமான வரி படிவங்கள் தான், தற்போது மாற்றிக் கொண்டு இருக்கிறார்களாம்.
வருமான வரிப் படிவம்
ஒவ்வொரு வருடமும், வருமான வரிப் படிவங்களை பூர்த்தி செய்து அரசிடம் சமர்பிக்க வேண்டிய கடைசி தேதி பொதுவாக 31 ஜூலை-யாக இருக்கும். அதன் பிறகு இருக்கும் சந்தர்ப்ப சூழல்களைப் பொறுத்து, வருமான வரித் துறையினர் தேதியை நீட்டிப்பார்கள் அல்லது நீட்டிக்காமல் போவார்கள்.
நிதி ஆண்டு 2019 - 20
ஆனால் இந்த ஆண்டு, ஏப்ரல் மாதத்திலேயே, கொரோனா வைரஸுக்காக லாக் டவுன் அறிவித்து இருப்பதால், 2019 - 20 நிதி ஆண்டுக்கு, வருமான வரிப் படிவங்களைச் சமர்பிக்க வேண்டிய தேதியை 31 ஜூலை 2020-ல் இருந்து நீட்டிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகச் சொல்கிறது லைவ் மிண்ட் பத்திரிக்கை.
Form 15G & Form 15H
ஏற்கனவே, கொரோனா வைரஸ் லாக் டவுன், கடந்த மார்ச் 25, 2020 முதல் அறிவித்து இருப்பதால், டிடிஎஸ் (Tax Deductible At source) செலுத்தும் தேதி ஒத்திவைப்பு, Form 15G & Form 15H செலுத்துவதற்கான தேதி ஒத்திவைப்பு என பல விஷயங்களுக்கு தேதிகளை ஒத்தி வைத்திருக்கிறது.
80 சி பிரிவு
மிக முக்கியமாக, சம்பளதாரர்கள் அதிகம் வரிச் சலுகைகளுக்கு பயன்படுத்தும் 80 C பிரிவின் கீழான முதலீடுகள், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள், லைஃப் இன்சூரன்ஸ் பிரிமியம் செலுத்துவது என எல்லாவற்றுக்குமான கடைசி தேதியை 30 ஜூன் 2020 வரை நீட்டித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற பிரிவுகள்
அதோடு ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்களுக்குச் செலுத்தும் தொகைகளை, வருமான வரிச் சட்டம் 80 D பிரிவின் கீழ் வரிச் சலுகைகளைப் பெறுவதற்கும், நன்கொடைகள் வழங்கி, வரிச் சலுகைகளை 80 G பிரிவின் கீழ் பெறுவதற்குமான தேதிகளையும் 30 ஜூன் 2020 வரை நீட்டித்து இருக்கிறது நேரடி வரிகள் வாரியம்.