ஒவ்வொரு ஆண்டு வருமானம் உயர்ந்தாலும் வருமான உயர்வுக்கு ஏற்ப சேமிப்பு உயரவில்லை என்ற புலம்பல் பல பொதுமக்களிடம் இருப்பதை பார்த்து வருகிறோம்.
வருமானம் உயர்ந்தால் மட்டும் போதாது, அந்த வருமானத்திற்கு ஏற்றபடி சிக்கனமாக இருந்து சேமிப்பையும் உயர்த்த வேண்டும் என்பதுதான் பொருளாதார நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
ஒவ்வொருவரும் தனது வருமானத்தில் 30% கட்டாயம் சேமிக்க வேண்டும் என்ற வழக்கத்தை கடைபிடித்தால் போதும், வாழ்க்கைத்தரம் தானாக உயர்ந்துவிடும்.
வருமானமும் சேமிப்பும்
ஒவ்வொருவரும் தனது வருமானத்தில் 30% கட்டாயம் சேமிக்க வேண்டும் என்ற வழக்கத்தை கடைபிடித்தால் போதும், வாழ்க்கைத்தரம் தானாக உயர்ந்துவிடும்.
லைஃப்ஸ்டைல் இன்ஃப்ளேஷன்
இதைத்தான் லைஃப்ஸ்டைல் இன்ஃப்ளேஷன் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். லைஃப்ஸ்டைல் இன்ஃப்ளேஷன் என்றால் என்னவெனில் வருமானம் அதிகமாக அதிகமாக நம்முடைய செலவுகளையும் அதிகரித்துக் கொள்வது என்பதுதான்.
சேமிப்பு தொகை
வருமானம் அதிகரித்தால் செலவு செய்வதிலும் அதிகரிப்பதில் என்ன தவறு என்ற கேள்வி அனைவர் மனதில் எழலாம். ஆனால் இதே வருமானம் கடைசிவரை இருக்குமா என்று கூற முடியாது. அதனால் வருமானம் அதிகரிக்க அதிகரிக்க சேமிப்பு தொகையின் அளவையும் அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் லைஃப்ஸ்டைல் இன்ஃப்ளேஷனில் சிக்காமல் ஒரு குறிப்பிட்ட தொகையை நமது எதிர்காலத்திற்காக சேமித்து வைத்துக் கொள்ள முடியும்.
என்ன மாற்றம்?
வருமானம் குறைவாக இருக்கும் போது இட்லி, தோசை, தயிர் சாதம் என்று சாப்பிட்டுக் கொண்டிருந்த நாம், வருமானம் அதிகமாக வந்தவுடன் பிரியாணி, ப்ரைட் ரைஸ், பீட்சா, பர்கர் என அதிக விலையுள்ள உணவுகளை சாப்பிடுகிறோம். அதேபோல் ஆடை அணிகலன்கள், வீட்டு அலங்கார பொருட்கள், டூவீலர், கார், ஏசி, பிரிட்ஜ் போன்ற பொருட்களையும் வருமானம் அதிகமாக அதிகமாக வாங்கி வைத்துக் கொள்வதால் சேமிப்பு என்பதே இல்லை என்ற நிலை ஆகிவிட்டது.
விளைவுகள்
எவ்வளவுதான் வருமானம் வந்தாலும் மாச கடைசியில் செலவுக்கு கூட பணம் இல்லை என்ற திண்டாட்டம் பலரிடம் இருப்பதை பார்க்க முடிகிறது. இதுதான் லைஃப்ஸ்டைல் இன்ஃப்ளேஷன் தரும் விளைவுகள் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே இந்த லைஃப்ஸ்டைல் இன்ஃப்ளேஷன் என்பதில் சிக்காமல் சேமித்து வைக்க வேண்டுமென்றால் நாம் சில வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
ஆடம்பர செலவுகள்
நம்முடைய செலவுகளுக்கு விலைவாசி மற்றும் பணவீக்கம் காரணமாக இருந்தாலும் நம் மனதை கட்டுப்படுத்திக்கொண்டு நமது வருமானம் வளர்ச்சிக்கு ஏற்ப சேமிப்பை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆடம்பரமான, அனாவசிய செலவுகளை குறைக்க ஆரம்பிக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.
பட்ஜெட்
ஒவ்வொரு மாதமும் பட்ஜெட் போட்டு செலவழிக்க வேண்டும் என்பது அனைத்து பொருளாதார வல்லுனர்களின் ஆலோசனை ஆக இருக்கிறது. அடுத்த மாதம் எவ்வளவு வருமானம் வரும்? எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என ஒரு சின்ன குறிப்பை எக்ஸெல் ஷீட்டில் குறித்து வைத்துக் கொண்டாலே போதும். அதுதான் நமது பட்ஜட். அந்த பட்ஜெட்டில் ஒவ்வொரு மாதமும் முதல் செலவாக வருமானத்தில் 30 சதவீதம் கண்டிப்பாக சேமிப்பு இருக்க வேண்டும்.
தேவையான பொருளை மட்டும் வாங்க வேண்டும்
தேவையான பொருட்களை மட்டும் வாங்க வேண்டும் என்றும் தேவையற்ற பொருள்களை வாங்க கூடாது என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். மொபைல் போன், கார், டூவீலர், டிவி ஆகியவை தேவையான பொருட்களாக இருந்தாலும் அதன் தேவையின் சதவீதத்தை கணக்கில் கொள்ள வேண்டும். குறிப்பாக டூவீலர், கார் ஆகியவை அத்தியாவசிய தேவை என்றால் மட்டுமே வாங்கிக் கொள்ள வேண்டும். .மொபைல் போனை பொருத்தவரை 10,000 ரூபாய் என்ற அளவில் உள்ள பட்ஜெட் போனை வாங்கினாலே போதும். மொபைல் போன்கள், டிவி, டூவீலர் ஆகியவற்றில் செய்யும் செலவுகளால் நம்முடைய சேமிப்பு மிகப்பெரிய அளவில் பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பொழுதுபோக்கு செலவு
பொழுதுபோக்கு என்பது நம்முடைய முக்கிய அம்சங்களில் ஒன்று. ஆனால் அதே நேரத்தில் செலவில்லாத பொழுதுபோக்குகளை நாம் கடைபிடிக்க வேண்டும். மால் தியேட்டர் என ஆடம்பரமான பொழுதுபோக்குக்கு சென்றால் அதிக செலவாகும். அதற்கு பதிலாக பீச், பார்க், கோயில் என்று சென்றால் மனதும் திருப்தியாக இருக்கும், செலவும் குறைவாக இருக்கும்.
ஒப்பீடு கூடாது
நம்மில் பலருக்கு இருக்கும் கெட்ட பழக்கம் மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்ப்பது. பக்கத்து வீட்டில் ஏதாவது ஒன்று வாங்கினால் அதை நாம் உடனே வாங்க வேண்டும் என்ற மனப்பான்மை அதிகரித்து வருகிறது. உற்றார் உறவினர்கள் கார் வாங்கி விட்டால் நாமும் கார் வாங்க வேண்டும் என்பதும், நண்பர்கள் விலை உயர்ந்த ஐபோனை வாங்கி விட்டால் நாமும் ஐபோன் ஆகவேண்டும் என்ற மனப்போக்கில் இருந்து வெளியே வர வேண்டும். நமக்கு எது தேவையோ, நம்முடைய வருமானத்திற்கு எது சரியோ அதை மட்டும் வாங்கிக் கொண்டால் நிச்சயமாக நம்முடைய எதிர்காலம் நிம்மதியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.