இன்றளவிலும் சம்பளதாரர்கள் மத்தியில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி என்பது மிக சிறந்த சேமிப்பு திட்டமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஊழியர்களின் ஓய்வுகாலத்திற்கு ஏற்ற ஒரு திட்டமாகவும் இருந்து வருகிறது.
ஏனெனில் ஒரு ஊழியரின் வருங்கால நலன் கருதி, ஊழியரும், நிறுவனமும் கணிசமான தொகையை, இந்த வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் பங்களிப்பு செய்கின்றனர்.
இந்த திட்டம் பலரையும் கவர முக்கிய காரணம் அவர்களுக்கு இந்த சேமிப்பு திட்டத்தில் வரிச்சலுகை உண்டு என்பதே. ஆனால் இதிலும் வரிசலுகையை குறைத்துள்ளது மத்திய அரசு. இதனால் பலரும் தங்களது விபிஎஃப்பினை குறைக்கலாம் என கூறப்படுகிறது. ஆக ஊழியர்களின் முடிவு என்ன? குறைக்க திட்டமிடுகிறீர்களா? என்ன செய்யலாம். வாருங்கள் பார்க்கலாம்.
பிஎஃப் வரி மாற்றம்
கடந்த பிப்ரவரி 1 அன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் 2021ல் பழைய பிஎஃப் விதிமுறைக்கு ஒரு முற்றுபுள்ளி வைத்தது எனலாம். ஒரு புதிய திருத்தத்தினை பட்ஜெட்டில் அறிவித்தது. அதன் படி ஒரு ஆண்டில் ஒரு ஊழியரின் வருங்கால வைப்பு நிதி கணக்கில் 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் பங்களிப்பு செய்யப்பட்டிருந்தால், அதற்கு கிடைக்கும் வட்டி வருவாய்க்கு வரி விதிக்கப்படும் என்பது தான்.
சிலருக்கு தளர்வு
இதில் தளர்வுகள் வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில கட்டுப்பாடுகளுடன் இந்த தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது சில நிபந்தனைகளுடன் 5 லட்சமாக உயர்த்துவதாக நிதியமைச்சர் அறிவித்தார். அதாவது நிறுவனம் தரப்பில் இருந்து 12% மேல் பங்களிப்பு இல்லாவிட்டால் மட்டுமே இந்த விதி பொருந்தும் என கூறியுள்ளார். அத்தகைய ஊழியர்களுக்கு மட்டும் 5 லட்சம் வரையிலான பங்களிப்புகளுக்கு சலுகை பெறலாம் என அறிவிக்கப்பட்டது. இது அரசு துறை ஊழியர்களுக்கு பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பலரின் கேள்வி?
ஆக இதற்கிடையில் பல ஊழியர்களின் கேள்வியே நான் இனியும் விபிஎஃப் (VPF) பங்களிப்பினை இப்படியே தொடரலாமா? எனக்கு எதுவும் பாதிப்பா? என்பது தான். ஏனெனில் நிதியாண்டின் தொடக்கத்தில் பல நிறுவனங்களும் இந்த பங்களிப்பு குறித்து ஊழியர்களிடம் விவாதிப்பார்கள்.
நிபுணர்களின் பரிந்துரை
பெரும்பாலான நிபுணர்களின் தொடர்ந்து விபிஎஃப் மூலம் பங்களிப்பினை செய்யலாம். ஏனெனில் இந்த வருங்கால வைப்பு நிதிக்கு வட்டி விகிதம் தற்போது 8.5% ஆக வழங்கப்படுகிறது. இது சிறுசேமிப்பு மற்றும் வங்கி வைப்பு நிதிகளுடன் ஒப்பிடும்போது அதிகம். சில தினங்களுக்கு முன்பு, சிறுசேமிப்புகளுக்கு அரசு வட்டியை குறைத்தது. ஆனால் அதனை திரும்ப பெற்றுக் கொண்டுள்ளது. பழைய வட்டி விகிதமே தொடரும் என அறிவித்துள்ளது.
வருமானம் அதிகம்
ஒரு வேளை உங்களுக்கு 30% வரியே விதிக்கப்பட்டாலும், ஒரு நபர் 5.95% என்ற விகிதத்தில் வட்டியினை பெறுவார். இது வங்கி நிலையான வைப்பு நிதிகளுக்கு கிடைக்கும் வரிக்கு பிந்தைய வருமானத்தினை அதிகம். ஒரு நபர் இபிஎஃப் மற்றும் விபிஎஃப் ஆகியவற்றின் மூலம் 5 லட்சம் ரூபாய் பங்களிப்பு செய்கிறார் என வைத்துக் கொள்வோம். அவர் 30% வரி விகிதத்தில் இருக்கிறார் என வைத்துக் கொண்டாலும் கூட, சுமார் 6,375 ரூபாய் தான் அதிகபட்ச வரியாக செலுத்துவார். ஆக இது லாபகரமானதாகத் தான் இருக்கும்.
விபிஎஃப்ஃபினை தொடருங்கள்
ஆக நாங்கள் தொடர்ந்து விபிஎஃப்பில் சேமிப்பினை தொடரவே அறிவுறுத்துகிறோம். ஏனெனில் மற்ற வருமான கருவிகளை விட இது சிறப்பாகவே இருக்கும். அரசு இந்த வரி விதிப்பின் மூலம் அதிக வருமானம் உடையவர்களுக்கு வரி சலுகைகள் கிடைப்பதை கட்டுப்படுத்துவது என்றாலும், பலரும் இந்த திட்டத்தில் வட்டி விகிதம் அதிகம் என்பதால் சேமிக்க நினைக்கின்றனர். அதோடு வரி சலுகையும் இருந்ததால் நல்ல முதலீட்டு திட்டமாகவும், சிறந்த சேமிப்பாகவும் பார்க்கப்பட்டது.
ஊழியர்கள் கவனம்
ஓய்வூதிய தொகை அதிகரிக்க அதிகரிக்க, பிஎஃப் வருமானம் அதிகரிக்கும். இதனால் செலுத்த வேண்டிய வரி விகிதமும் அதிகரிக்கும். ஆக இதனை கருத்தில் கொண்டு ஊழியர்கள் தங்களது முதலீட்டு திட்டங்களை மாற்ற முற்படலாம். ஆனால் மற்ற முதலீடுகளுடன் ஒ[ப்பிடும்போது கிடைக்கும் வருவாயினை பார்த்தால், விபிஎஃப் வட்டி வரி போக லாபம் தான். ஆக இதனை தொடருவதில் தப்பில்லை என நிபுணர்கள் கூறுகின்றனர்.