இந்த நெருக்கடியான கொரோனா லாக் டவுனால், பலர் தங்கள் வேலையையே இழக்கும் சூழல் நிலவிக் கொண்டு இருக்கிறது. இது மாத சம்பளதாரர்களுக்கும் பொருந்தும்.
எனவே அவர்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருக்க, அரசு சம்பளதாரர்களின் PF பணத்தை எடுத்துக் கொள்ள அனுமதித்து இருக்கிறது.
PF திட்டத்தில் இணைந்து இருப்பவர்கள் அனைவரும் இந்த கொரோனா வைரஸை காரணம் காட்டி அட்வான்ஸ் தொகை பெறலாம். இப்போது பெறும் தொகையை மீண்டும் EPFO அலுவலகத்துக்குத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்கிற அவசியம் இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.
எவ்வளவு எடுக்கலாம் 1
ஒருவரின் மொத்த PF பாக்கித் தொகையில் அதிகபட்சமாக 75 சதவிகித தொகையை பெறலாம். உதாரணமாக ஒருவருக்கு PF பாக்கித் தொகை 2 லட்சம் ரூபாய் இருக்கிறது என்றால், அவர் 1,50,000 ரூபாயை கொரோனா வைரஸை காரணமாகக் காட்டி பெறலாம். இது தான் பொதுவான கணக்கு. ஆனால் இதிலும் அரசு ஒரு செக் வைத்திருக்கிறது.
பேசிக் + டிஏ கணக்கு
ஒருவர் சம்பளமாகப் பெறும் தொகையில் Basic Pay + DA (Dearness Allowance) இரண்டையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த மொத்த தொகையை 3 மாதம் எவ்வளவு பெறுவீர்களோ அவ்வளவு தான் PF தொகையில் இருந்து கொரோனா வைரஸை காரணம் காட்டி அட்வான்ஸாகப் பெறலாம் என்கிறார்கள்.
ரவி ஒரு உதாரணம்
உதாரணமாக: ரவி, மாதம் 15,000 ரூபாய் பேசிக் ஆகவும், 5,000 ரூபாயை டிஏ-வாகவும் பெறுகிறார். ஆக மொத்தம் 20,000 ரூபாய் . எனவே 20,000 * 3 மாதம் = 60,000 ரூபாய். ரவிக்கு PF பாக்கித் தொகை எத்தனை லட்சம் இருந்தாலும் சரி, அவர், தற்போது 60,000 ரூபாயை மட்டும் தான் கொரோனா வைரஸைக் காரணம் காட்டி அட்வான்ஸாகப் பெறலாம்.
3-ல் எது குறைவு
என்னங்க ஒன்னுமே புரியல என குழம்புகிறீர்களா. கவலை வேண்டாம்.
1. PF பாக்கித் தொகையில் 75% பணம்
அல்லது
2. பேசிக் + டிஏ பணம் 3 மாதம் எவ்வளவு பெறுகிறீர்களோ அந்தப் பணம்.
அல்லது
3. நீங்கள் குறிப்பிடும் பணம்.
இந்த மூன்றில் எது குறைவோ, அந்த பணத்தை மட்டும் தான், PF-ல் இருந்து கொரோனா வைரஸைக் காரணம் காட்டி அட்வான்ஸாகப் பெறலாம்.
அப்துல் கதையைக் கேளுங்கள்
1. அப்துலுக்கு 5 லட்சம் ரூபாய் PF பாக்கித் தொகை இருக்கிறது. ஆக 5,00,000 * 75% = 3,75,000.
2. அப்துல் பேசிக் + டிஏ என மாதம் 35,000 பெறுகிறார் ஆக 35,000 * 3 = 1,05,000.
3. அப்துல் கொரோன வைரஸைக் காரணம் காட்டி 1,00,000 ரூபாய் தான் அட்வான்ஸ் தொகை கேட்கிறார்.
ஆக மேலே சொன்ன மூன்றில் அப்துல் குறிப்பிட்ட 1,00,000 ருபாய் தான் குறைவு எனவே EPFO அலுவலகம் ஒரு லட்சம் ரூபாயைத் தான் கொடுக்கும்.
Employer + Employee சேர்த்து தான்
PF பாக்கித் தொகை என்பது Employer பங்கு மட்டுமா அல்லது Employee பங்கும் சேர்த்தா என்கிற கேள்வியும் அதிகம் கேட்கிறார்கள். இரண்டு பங்கும் சேர்த்து இருக்கும் மொத்த பாக்கித் தொகையில் தான் இந்த 75 சதவிகிதம் கணக்கிடப்படும் என EPFO அலுவலகமே தெளிவுபடுத்தி இருக்கிறது.
முன்பே க்ளெய்ம் வாங்கி இருப்பவர்கள்
இந்த கொரோனா வைரஸ் வருவதற்கு முன்பே வேறு சில காரணங்களுக்கு (மருத்துவ செலவுகள், திருமணம், கல்வி, வீடு...) க்ளெய்ம் வாங்கி இருப்பவர்கள் கூட கொரோனா வைரஸ் க்ளெய்ம் பெறலாமா? என்கிற கேள்வியும் கேட்கிறார்கள். இதற்கு அரசு PF வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் எஸ் எம் எஸ்-களிலேயே பதில் இருக்கிறது. ஏற்கனவே க்ளெய்ம் பெறுபவர்கள் கூட, இந்த கொரோன வைரஸைக் காரணம் காட்டி க்ளெய்ம் பெற விண்ணப்பிக்கலாம். இதை எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதை படத்துடன் விளக்கி இருக்கிறோம். அதைக் காண இங்கே க்ளிக் செய்யவும்:
PF பணத்துக்கு வரி
சரி, இப்போது கொரோன வைரஸைக் காரணம் காட்டி PF-ல் இருந்து வெளியே எடுக்கும் பணத்துக்கு வரி உண்டா? பொதுவாக, ஐந்து வருடங்களுக்கு தொடர் சேவை செய்து முடிப்பதற்கு முன், PF கணக்கில் இருந்து, பணத்தை வெளியே எடுத்தால் வரி செலுத்த வேண்டி இருக்கும். ஆனால் மருத்துவ அவசர நிலை, தொழிலை மூடுதல்... போல வேலை கொடுப்பவர்களின் (முதலாளிகளின்) சக்தியைத் தாண்டி நடக்கும் விஷயங்களுக்கு, PF-ல் இருந்து பணத்தை எடுத்தால், இந்த வரி செலுத்த வேண்டியதில்லை.
வரி கிடையாது
இப்போது கொரோனா வைரஸால் ஏற்பட்டு இருக்கும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க PF கணக்கில் இருந்து பணத்தை வெளியே எடுத்தாலும், வரி செலுத்த வேண்டாம் (Exempt from tax), வரி விலக்கு அளிக்கப்பட்டு இருப்பதாகச் சொல்கிறது லைவ் மிண்ட் பத்திரிக்கை. ஆக, பொருளாதார நெருக்கடிக்காக பணத்தை PF கணக்கில் இருந்து எடுக்க விரும்புபவர்கள், வரிக்கு பயப்படாமல் தைரியமாக பணத்தை வெளியே எடுக்கலாம்.