உங்கள் செலவினங்களுக்காக உங்கள் வருவாயினை உங்கள் குடும்பம் சார்ந்துள்ளது எனில், நீங்கள் கட்டாயம் டெர்ம் இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும். ஏனெனில் துரதிஷ்டவசமாக இன்றைய காலகட்டத்தில் என்ன வேண்டுமென்றாலும் நடக்கலாம். அப்படி எதிர்பாராத விதமாக மரணம் ஏற்பட்டாலும், குடும்பத்தினருக்காவது அந்த உதவி சேரும்.
ஆக நிதி ரீதியாக அவர்கள் கொஞ்சம் பாதுகாப்பாக இருப்பார்கள். குடும்ப உறுப்பினர்களின் வருங்கால இலக்குகளை பூர்த்தி செய்யவும் உதவுகிறது.
இதனால் சம்பாதிக்கும் குடும்ப உறுப்பினருக்கு துரதிஷ்டவசமாக மரணம் ஏற்பட்டால், இறந்தவரின் வருமானத்தை உயிருடன் இருக்கும் குடும்ப உறுப்பினர்களால் பயன்படுத்த முடியும் என்பதால், குடும்பத்தினர் நிதி ரீதியாக பாதுகாப்பாக இருப்பார்கள்.
தடுப்பூசி சான்றிதழ் அவசியம்
இது பலரின் வாழ்க்கையிலும் மிக முக்கியமான நிதி முடிவாக இருக்கும். அதோடு இந்த திட்டங்கள் குறைந்த பிரீமியம் மற்றும் அதிக பாதுகாப்புடன் வரும் ஆயுள் காப்பீட்டு திட்டமாகும். இப்படி ஒரு அத்தியாவசிய திட்டத்தினை வாங்க, மேக்ஸ் லைஃப் மற்றும் டாடா ஏ.ஐ.ஏ போன்ற நிறுவனங்கள் கட்டாயமாக கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ்களைக் கேட்கின்றன.
சான்றிதழ் இருந்தால் தான் இன்சூரன்ஸ்
இந்த தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ்கள் இருந்தால் தான் ஆயுள் காப்பீடு மற்றும் பிற காப்பீடுகளை வழங்குகின்றன. ஆக தற்போது பாலிசி எடுப்பது என்பது சற்று கடினமானதாக இருக்கலாம். இதனை மற்ற இன்சூரன்ஸ் நிறுவனங்களும் விரைவில் பின்பற்றக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது
புதிய விதிமுறைகள்
மேக்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தங்களது இறுதி தடுப்பூசி சான்றிதழ்களை காட்டினால் மட்டுமே இன்சூரன்ஸ் எடுக்க முடியும் என்ற நிலையையும், இதே டாடா ஏஐஏ வயதை பொருட்படுத்தவில்லை. ஆனால் கொரோனா தடுப்பூசியின் முதல் ஷாட்டினை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என்றும் விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது.
நெருக்கடி நேரத்தின் எதிரொலி
டாடா ஏஐஏ நிறுவனம் எங்கள் பாலிதாரர்கள் மிக உயர்ந்த நிதி பாதுகாப்புடன் இருப்பதை உறுதி செய்வதற்காக, அவர்களின் நலனும் பாதுகாக்கப்படுவதை நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம் என கூறியுள்ளது. இந்த புதிய கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் தற்போதைய நெருக்கடியான நிலையையே எதிரொலிக்கின்றன.
தடுப்பூசி போடாதவர்கள் மத்தியில் தாக்கம்
இது காப்பீட்டாளர்களின் தரப்பில் நல்ல விஷயமாக பார்க்கப்பட்டாலும், தடுப்பூசி போடாதவர்கள் மத்தியிலும் இது தாக்கத்தினை ஏற்படுத்தும். ஏனெனில் தடுப்பூசி போட நினைப்பவர்கள் பற்றாக்குறையால் காத்திருக்க வேண்டிய அவசியம் நிலவி வருகின்றது. இன்னும் சிலர் முதல் தடுப்பூசி போடப்பட்ட நிலையில், இரண்டாவது தடுப்பூசிக்காக காத்துக் கொண்டுள்ளனர். சமீபத்திய நிலரவரப்படி நாட்டில் 1.38 பில்லியன் மக்களில், 23.28 கோடி மக்கள் மட்டுமே முதல் தடுப்பூசியினை போட்டுக் கொண்டுள்ளனர்.
பல மாற்றங்கள் வரலாம்
ஏற்கனவே நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில், இன்சூரன்ஸ் பிரீமியமுமம் அதிகரித்துள்ளது. ஏனெனில் பெருந்தொற்று காலத்தில் க்ளைம் விகிதம் அதிகரித்துள்ள நிலையில், இந்த அதிகரிப்பு வந்துள்ளது. இது இன்னும் இன்சூரன்ஸ் துறையில் பல மாற்றங்களை கொண்டு வரலாம் என்ற நிலையே நிலவி வருகின்றது.