மாத சம்பளக்காரர்கள் அனைவருக்கும் EPFO வாயிலாக ஓய்வு பெறும் போது குறிப்பிட்ட அளவிலான பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. பிஎப் பணம், 7 லட்சம் ரூபாய்க்கான இன்சூரன்ஸ் என பல விதிதத்தில் தனியார் மாத சம்பளக்கார்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
ஆனால் தினசரி கூலி வேலை செய்பவர்கள், தொழிலாளர்கள் மற்றும் வகைப்படுத்தப்படாத துறையில் இருக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு எவ்விதமான பாதுகாப்பும் இல்லை, இதனால் வயதான காலத்தில் இப்பிரிவில் இருக்கும் மக்கள் அடிப்படை தேவைகளுக்கு கூட பணம் இல்லாமல் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
இதேபோல் உங்கள் வீட்டில் வேலை செய்யும் நபரோ அல்லது பணிப்பெண்களுக்கோ நீங்கள் நீண்ட கால அடிப்படையில் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றால் மத்திய அரசின் பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மன் தன் யோஜனா திட்டத்தை தேர்வு செய்யலாம்.
ஷ்ரம் யோகி மன் தன் யோஜனா
பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மன் தன் யோஜனா திட்டத்தின் மூலம் ஒருவருக்கு மாதம் 3000 ரூபாய் வீதம் வருடத்திற்கு 36000 ரூபாய் அளவிலான பென்ஷன் பெற முடியும். அதற்கு நீங்கள் முதலீடு செய்ய வேண்டிய தொகை எவ்வளவு தெரியுமா தினமும் 2 ரூபாய் அதாவது மாதம் வெறும் 60 ரூபாய் மட்டுமே.
மோடி அரசு
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இந்தியாவில் இருக்கும் கோடிக்கணக்கான தினசரி கூலி வேலை செய்பவர்கள், தொழிலாளர்கள் மற்றும் வகைப்படுத்தப்படாத துறையில் இருக்கும் ஊழியர்களுக்கு வயதான காலத்தில் பாதுக்காப்பு அளிக்க வேண்டும், நிதியுதவி பெற வேண்டும், மாத சம்பளக்காரர்கள் அளிக்கப்படும் அதே பாதுகாப்பை இவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மன் தன் யோஜனா திட்டத்தை உருவாக்கியுள்ளது.
ஊழியர்கள்
வீட்டு வேலை செய்பவர்கள், சாலையோர வியாபாரிகள், மதிய உணவுத் தொழிலாளர்கள், சுமை தூக்குபவர்கள், செங்கல் சூளைத் தொழிலாளர்கள், செருப்புத் தொழிலாளர்கள், கந்தல் பறிப்பவர்கள், வீட்டுப் பணியாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், ரிக்ஷாக்காரர்கள், நிலமற்ற தொழிலாளர்கள், சுய தொழில் அல்லது குடிசை தொழில் செய்பவர்கள், விவசாயிகள், கட்டுமானத் தொழிலாளர்கள், பீடித் தொழிலாளர்கள், கைத்தறித் தொழிலாளர்கள், தோல் தொழிலாளர்கள் தொழிலாளர்கள், ஒலி-ஒளி தொழிலாளர்கள் அல்லது இதே போன்ற பிற தொழில்களில் உள்ள தொழிலாளர்கள் என சுமார் 42 கோடி பேர் இந்தியாவின் வகைப்படுத்தப்படாத துறையில் பணியாற்றி வருகிறார்கள்.
3000 ரூபாய் ஓய்வூதியம்
பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மன் தன் யோஜனா திட்டத்தில் சொந்தமாக யார் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம் மாதம் 60 ரூபாய் வீதம் முதலீடு செய்பவருக்கு 60 வயதை தொட்ட உடன் குறைந்தப்பட்சம் மாதம் 3000 ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும். இந்த திட்டத்தில் முதலீடு செய்வோர் இறந்துவிட்டால் அவரது துணைவியருக்கு குறிப்பிட்ட ஒய்வூதிய தொகையில் 50 சதவீதம் அளிக்கப்படும்.
18 முதல் 40 வயது
இந்த திட்டத்தில் 18 முதல் 40 வயது வரையில் உள்ளவர்கள் மட்டுமே முதலீடு செய்ய முடியும், மாதம் 55 ரூபாய் முதல் 200 ரூபாய் வரையில் பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மன் தன் யோஜனா திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
முதலீட்டு அளவு
முதலீட்டை துவங்கும் வயதை பொறுத்து மாத முதலீட்டின் அளவு நிர்ணயம் செய்யப்படும். உதாரணமாக 40 வயது முதலீட்டை துவங்கினால் மாதம் 200 ரூபாய் செலுத்த வேண்டும். இத்திட்டத்தை அருகில் இருக்கும் CSC சென்டரிலேயே எளிதாக பெறலாம்.