அஞ்சலக ஏடிஎம் பரிவர்த்தனைகளில் முக்கிய விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளது.
புதிய விதிமுறைகள் அக்டோபர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக இந்திய தபால் துறை அறிவித்துள்ளது.
இதன்படி அக்டோபர் 1ம் தேதி முதல், அஞ்சலக ஏடிஎம் கார்டு அல்லது டெபிட் கார்டுக்கான பராமரிப்புத் தொகை ஆண்டுக்கு 125 ரூபாயும் + ஜிஎஸ்டியும் வசூலிக்கப்படும். இந்தக் கட்டணம் 2022ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி வரை அமலில் இருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்.எம்.எஸ் கட்டணம்
மேலும் அக்டோபர் 1ம் தேதி முதல் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும் எஸ்.எம்.எஸ் அலர்ட்டுகளுக்கு 12 ரூபாய் + ஜிஎஸ்டியும் வசூலிக்கப்படும். மேலும் வாடிக்கையாளர் தனது ஏடிஎம் கார்டை தொலைத்துவிட்டால், புதிய கார்டு பெறுவதற்கு 300 ரூபாயும், ஜிஎஸ்டியும் வசூலிக்கப்படும்.
இதுபோக, ஏடிஎம் கார்டு பின் நம்பர் தொலைந்துவிட்டால், புதிய பின் நம்பரை பெறுவதற்கு அஞ்சலக கிளைக்கு சென்று 50 ரூபாய் செலுத்த வேண்டும்.
ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணம்
ஒவ்வொரு மாதமும் வாடிக்கையாளர்கள் அஞ்சலக ஏடிஎம்களில் ஐந்து முறை இலவசமாக பணம் எடுத்துக்கொள்ளலாம். ஐந்து முறைக்கு மேலாக ஒவ்வொரு முறை பணம் எடுக்கும்போதும், 10 ரூபாய் + ஜிஎஸ்டியும் சேர்த்து வசூலிக்கப்படும்.
இதுபோக, மாதத்துக்கு ஐந்து முறை நிதி சாரா பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். அதற்கு மேல் ஒவ்வொரு முறையும் 5 ரூபாய் + ஜிஎஸ்டியும் செலுத்த வேண்டும்.
அஞ்சலக ஏடிஎம் - வங்கி ஏடிஎம்மில் பரிவர்த்தனை
மற்ற வங்கிகளின் ஏடிஎம்களில் பணம் எடுக்கும்போது, மெட்ரொ நகரங்களில் மாதம் மூன்று முறையும், மெட்ரோ அல்லாத நகரங்களில் ஐந்து முறையும் இலவசமாக பணம் எடுத்துக்கொள்ளலாம். அதற்கு மேல் ஒவ்வொரு முறையும் 8 ரூபாய் செலுத்த வேண்டும்.
POSல் பணம் எடுத்தால் எவ்வளவு கட்டணம்
அஞ்சலகங்களின் POS களில் பரிவர்த்தனை செய்தால் பணப் பரிவர்த்தனைக்கு 1% கட்டணம் வசூலிக்கப்படலாம். இது அதிகபட்சமாக ஒரு பரிவர்த்தனைக்கு 5 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். ஆக மொத்தத்தில் இனி அஞ்சலக வாடிக்கையாளர்கள் இனி அஞ்சலக பரிவர்த்தனைகளுக்கு கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.


Click it and Unblock the Notifications