சில நிமிடங்களுக்கு முன்பு தான் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ சில கட்டணங்களில் மாற்றம் செய்துள்ளதை பற்றி பார்த்தோம். இதற்கிடையில் தற்போது பஞ்சாப் நேஷனல் வங்கியும் தனது முக்கிய சேவைக்கு கட்டணத்தினை குறைத்துள்ளது.
தற்போது நாட்டில் கொரோனாவின் தாக்கமானது மக்களை பாடாய்படுத்தி வரும் நிலையில், பல மாநிலங்கள் முழு லாக்டவுனை அமல்படுத்தியுள்ளன. இதனால் மக்கள் மீண்டும் கடந்த ஆண்டை போலவே வீட்டுக்குள் முடங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
அத்தியாவசியம் தவிர, மற்ற சேவைகளை பெற மக்கள் வெளியே வர தயங்கும் நிலையில், முடிந்த அளவு ஆன்லைன் மூலமாகவே பல சேவைகளையும் பெற்று வருகின்றனர்.
டோர் ஸ்டெப் நடவடிக்கைகள்
இதனால் வங்கிகள், பல சேவைகளை வாடிக்கையாளர்கள் எளிதில் அணுகும் வகையில் அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்தவகையில் சில வங்கிகள் வீட்டில் இருந்தே வாடிக்கையாளர்கள் சில சேவைகளை பெறும் வகையில், டோர் ஸ்டெப் வங்கி நடவடிக்கைகளை அறிவித்து வருகின்றன. எனினும் இதற்கு சில கட்டணங்களையும் வசூலிக்கின்றன.
வீட்டில் இருந்தே பணத்தினை பெறலாம்
தற்போது பலரும் தங்கள் வருவாயினை இழந்துள்ள நிலையில், சில வங்கிகள் கட்டண குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் பஞ்சாப் நேஷனல் வங்கியானது, அதன் வாடிக்கையாளர்களுக்கு, வீட்டில் இருந்தபடியே வங்கி சேவையை பெறும் சேவையை வழங்கி வருகின்றது.
எவ்வளவு கட்டணம்
இதற்காக பஞ்சாப் நேஷனல் வங்கி கட்டணத்தினை 50 ரூபாயாக குறைத்துள்ளதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அதோடு இந்த சலுகையானது மே மற்றும் ஜூன் 2021 வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த டோர் ஸ்டெப் சேவை மூலம் குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரையில் பணம் எடுத்துக் கொள்ளலாம். எனினும் இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் இந்த குறைந்த கட்டண சலுகையானது மாதத்தில் 2 முறை மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும்.
வேறு எந்தெந்த வங்கிகள்
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா, பேங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி, இந்தியன் ஒவர்சீஸ் வங்கி, யூகோ வங்கி, பேங்க் ஆப் மகாரஷ்டிரா, பஞ்சாப் & சிந்த் உள்ளிட்ட வங்கிகளும், வீட்டில் இருந்தபடியே வங்கி சேவையை பெறும் வசதிகளை வழங்கி வருகின்றன.
எப்படி பெறுவது?
அதெல்லாம் சரி? எப்படி இந்த டோர் ஸ்டெப் சேவையை பெறுவது? எப்படி பஞ்சாப் நேஷனல் வங்கியில் வீட்டில் இருந்தபடியே நிதி மற்றும் நிதி அல்லாத சேவைகளை பெறலாம். நீங்கள் வீட்டில் இருந்த படியே நிதியினை பெற 1800- 10-37-188 அல்லது 1800-12-13-721 என்ற எண்ணுக்கு அழைக்கலாம். அப்படி இல்லை எனில் https://www.psbdsb.in/ என்ற இணைய பக்கத்திலும் சென்று லாகின் செய்தும் பெறலாம்.
நிதி சேவைகள்
இதற்காக நீங்கள் ஒரு முறை பதிவு செய்ய வேண்டியிருக்கும். அதில் உங்களது முகவரியினையும் பதிவிட வேண்டும். அதோடு எந்த வங்கி கிளை, என்ன நேரம் உங்களுக்கு தொகையினை டெலிவரி செய்யலாம். இதனை பதிவு செய்த பிறகு ஸ்க்ரீனில் எவ்வளவு கட்டணம் என்பதும் வரும். அதனை OK என்று கொடுத்தால், உங்களது மொபைல் எண்ணுக்கு மெசேஜ் வரும். அந்த மெசேஜில் உங்கள் வீட்டிற்கு வரும் வங்கி ஊழியரின் பெயர் மற்றும் நம்பர் இருக்கும்.
நிதி அல்லாத சேவைகள்
இது தவிர பிக் அப் சர்வீசஸ் (வாடிக்கையாளரிடம் இருந்து வங்கிக்கு கொண்டு செல்ல), குறிப்பாக காசோலைகள் அனுப்ப, பணம் செலுத்த, வங்கி ஸ்டேட்மெண்ட், டெர்ம் டெபாசிட் அட்வைஸ், டிஜிட்டல் லைஃப் சர்டிபிகேட், டிடிஎஸ் & ஃபார்ம் 16 சர்பிடிகேட், டிடி உள்ளிட்ட பல சேவைகளையும் செய்து வருகின்றது பிஎன்பி வங்கி.