நீங்கள் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பயனர்களா? அப்படின்னா நிச்சயம் இது உங்களுக்கு பயனுள்ளதா இருக்கும்.
ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கான விதிகளை மாற்றம் செய்துள்ளது. இதனால் புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
இந்த புதிய விதிமுறைகள் செப்டம்பர் 30 முதல் நடைமுறைக்கு வரும். ஆக நீங்கள் இந்த கார்டுகளை உபயோகிப்பவராக இருந்தால், நிச்சயம் இதனை பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.
புதிய விதிகள் செப் 30 முதல் அமல்
இந்த புதிய நடைமுறைகளானது இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே செய்யப்படவிருந்த நிலையில், நாட்டில் கொரோனாவின் தாக்கம் மிக வேகமாக பரவி வந்தது. இதன் காரணமாக அப்போது செயல்படுத்தப்படவில்லை. இந்த நிலையில் தான் இந்த புதிய விதிகள் செப்டம்பர் 30 முதல் அமல்படுத்த உள்ளதாக தெரிவித்திருந்தது.
உள்நாட்டு சேவை மட்டும் அனுமதி
வங்கிகள் டெபிட் கார்டுகள் மற்றும் கிரெடிட் கார்டுகளை வழங்கும்போது, வாடிக்கையாளர்களுக்கு உள்நாட்டு பரிவர்த்தனைகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதாவது தேவையில்லை எனில் ஏடிஎம் இயந்திரத்திலிருந்து பணம் எடுப்பது மற்றும் PoS முனையத்தில் இருந்து ஷாப்பிங் செய்வது போன்ற வெளிநாட்டு வர்த்தகத்தினை அனுமதிக்காது.
உங்கள் தேவையை நீங்களே தீர்மானித்துக் கொள்ளலாம்?
அதோடு புதிய விதிகளின் படி, வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான பரிவர்த்தனை தேவையை தாங்களே தீர்மானித்துக் கொள்ள முடியும். ஆக வாடிக்கையாளர்களின் விருப்பப் படி, அந்த சேவைகள் மட்டுமே அட்டையில் கிடைக்கும். அதாவது வாடிக்கையாளர்கள் சர்வதேச பரிவர்த்தனையை விரும்புகிறார் எனில், அதனையும் வாடிக்கையாளர்கள் தான் தீர்மானம் செய்து கொள்ள முடியும்.
பரிவர்த்தனை வரம்புகளை மாற்ற முடியுமா?
ஆர்பிஐயின் இந்த புதிய விதிகளின் படி, வாடிக்கையாளர்கள் தங்களின் பரிவர்த்தனை வரம்புகளையும் மாற்றிக் கொள்ள முடியும். அதோடு இந்த சேவையானது 24 மணி நேரமும் கிடைக்கிறது. இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமானால், வாடிக்கையாளர்கள் தங்களது மொபைல் பயன்பாடு மற்றும், இணைய வங்கி, ஏடிஎம் இயந்திரம் மற்றும் ஐவிஆர் மூலம் ஏடிஎம் கார்டுகளின் பரிவர்த்தனை வரம்புகளை மாற்றிக் கொள்ள முடியும்.
எவ்வளவு பயன்பாடு?
ஆர்பிஐயின் தரவின் படி, நடப்பு ஆண்டில் ஜூன் மாதத்தில் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பரிவர்த்தனையானது மிக குறைந்துள்ளது. மக்கள் கிரெடிட் கார்டு மூலம் கடந்த ஜூன் மாதத்தில் 42,818 கோடி ரூபாய்க்கு பொருட்களை வாங்கியுள்ளனர். இதே ஜனவரியில் 67,000 கோடி ரூபாய்க்கு பொருட்களை வாங்கியுள்ளனர்.
எத்தனை முறை பயன்பாடு?
இந்த ஜூன் மாதத்தில் 12.5 கோடி தடவைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதே ஜனவரி மாதத்தில் 20.3 கோடி தடவைகள் பயன்பட்டுள்ளன. இது நாட்டில் கொரோனா லாக்டவுன் காரணமாக குறைந்துள்ளதாகவும் தரவுகள் கூறுகின்றன. இதே டெபிட் கார்டு பயன்பாடானது, ஜனவரி மாதத்தில் 45.8 கோடி பயனர்கள் பயன்படுத்திய நிலையில், ஜூன் மாதத்தில் 30.2 கோடி பயனர்களாக குறைந்துள்ளது. நாட்டில் ஒவ்வொரு 15 டெபிட் கார்டுகளிலும், 1 கிரெடிட் கார்டு உள்ளது.