இந்தியாவின் மிகப் பெரிய வங்கி என்கிற பெயரை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தான் தக்க வைத்துக் கொண்டு இருக்கிறது.
அதிக வாடிக்கையாளர்கள், நிறைய கடன் கொடுத்து இருப்பது, நிறைய வங்கிக் கிளைகளை வைத்திருப்பது, நிறைய ஊழியர்கள் வேலை பார்ப்பது என பலவற்றிலும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தான் நம்பர் 1.
அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட வங்கி என்பதால், நிறைய வாடிக்கையாளர்கள் சம்பந்தப்பட்ட எச்சரிக்கைகளையும் எஸ்பிஐ வங்கி செய்து வருகிறது. இந்த முறை ஆன்லைன் மோசடி செய்பவர்கள், வாட்ஸப்பை குறி வைத்து களம் இறங்கி இருக்கிறார்கள். அதைக் குறித்து எச்சரித்து இருக்கிறது எஸ்பிஐ.
Whatsapp-ல் வலை விரிக்கும் மோசடி கும்பல்
ஆன்லைன் மோசடி செய்பவர்கள், தற்போது லாட்டரி ஜெயித்து இருப்பதாகச் சொல்லி, ஒரு எஸ்பிஐ எண்ணைக் கொடுத்து அழைக்கச் சொல்கிறார்கள். அதன் பிறகு அழைத்து பேசி, வங்கி விவரங்களை எல்லாம் தெரிந்து கொண்டு மோசடி செய்கிறார்கள். இது குறித்து, எஸ்பிஐ தன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், தன் வாடிக்கையாளர்களை எச்சரித்து இருக்கிறது.
எஸ்பிஐ எச்சரிக்கை
எஸ்பிஐ எப்போதும் வாடிக்கையாளர்களை அழைத்து அவர்களின் தனிப்பட்ட தகவல்களையோ அல்லது வங்கிக் கணக்கு விவரங்களையோ, இ மெயில், எஸ் எம் எஸ், வாய்ஸ் கால், வாட்ஸப் கால்... வழியாக எப்போதும், கேட்காது எனச் சொல்லி இருக்கிறது எஸ்பிஐ. அதே போல, எஸ்பிஐ எந்த ஒரு லாட்டரி திட்டத்தையும் நடத்தவில்லை. எனவே வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என எச்சரித்து இருக்கிறது எஸ்பிஐ.
மோசடிக்காரர்கள் காத்திருக்கிறார்கள்
ஆன்லைனில் பணத்தைப் பறிக்கும் மோசடிதாரர்கள், நாம் தவறு செய்யக் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். போலியாக, எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு வரும் கால்களையோ, வாடிக்கையாளர்களுக்கு வரும் போலி எஸ் எம் எஸ்-களையோ நம்ப வேண்டாம் எனவும் சொல்லி இருக்கிறது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா.
புது ரூட்
இத்தனை நாள், எஸ் எம் எஸ், வாய்ஸ் கால் வழியாக வந்து கொண்டு இருந்தவர்கள், தற்போது வாட்ஸப்பில் களம் இறங்கத் தொடங்கி இருக்கிறார்கள். வங்கிகளும் தங்கள் தரப்பில் இருந்து மக்களை எச்சரித்துக் கொண்டே தான் இருக்கிறார்கள். நாமும் வங்கி மற்றும் பணம் சார்ந்த விஷயங்களில் கொஞ்சம் கூடுதல் உஷாராக இருக்க வேண்டும்.